12 செப்டம்பர், 2010

வன்னியில் 10,000 வீடுகள் கட்டும் பணிகள் இருவாரங்களில்


வடக்கில் மீளக்குடியமர்த்தப்படும் மக்களுக்கென இந்திய அரசின் உதவியுடன் 50,000 வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் திட்டத்தின் முதற்கட்டமாக 10,000 வீடுகளை கட்டும் பணிகள் இன்னும் இரு வாரங்களில் ஆரம்பிக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து 10,000 வீடுகளுக்கான பயனாளிகளை தெரிவு செய்வதற்கான விசேட கூட்டம் நாளை 13ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

ஆளுநரின் தலைமையில் வன்னி மாவட்ட அரச அதிபர்கள் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு பயனாளிகளை தெரிவு செய்யவுள்ளனர். 10,000 வீடுகளில் விதவைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவ துடன் அங்கவீனமானவர்கள் இரண்டாவதாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

கிளிநொச்சி, யாழ்ப்பாணத்துக்கு 5000 வீடுகளும், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு 5000 வீடுகள் என்ற அடிப்படையில் முதற்கட்டமாக 10,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பயனாளிகளை தெரிவு செய்த பின்னர் ஜனாதிபதி செயலணி முழுமையான அறிக்கையை இலங்கையிலுள்ள இந்திய தூதுவரிடம் கையளிக்கும். அதனைத் தொடர்ந்து துரிதகதியில் வேலைகள் ஆரம்பமாகும் என ஆளுநர் ஜீ. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

இதேவேளை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தின் கீழ் இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கூட்டம் யாழ். நகரில் நடைபெறவுள்ளது.

வட மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் நடைபெறும் இக்கூட்டத்தில், அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார். மேலும் வன்னி மாவட்டம் உட்பட வட மாகாண அரச அதிபர்கள் உட்பட வட மாகாண அரச உத்தியோகத்தர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக