16 செப்டம்பர், 2010

திணைக்களங்கள், பொலிஸில் தாய்மொழியிலேயே கருமம்

இடைக்கால அறிக்கையில் நல்லிணக்க ஆணைக்குழு சிபார்சு



மோதல் நடைபெற்ற பிரதேச மக்கள் அரச திணைக்களங்கள் மற்றும் காரியாலயங்களில் தமது அன்றாட செயற்பாடுகளை தமது தாய்மொழியிலேயே மேற்கொள்ள வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர் பான ஆணைக் குழு சிபார்சு செய்துள்ளது.

ஆணைக்குழு தமது இடைக்கால அறிக்கையை நேற்று முன்தினம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது. அவ்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதி நிதிகள் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதுடன் அதன் இடைக்கால அறிக்கையையும் சமர்ப்பித்துள்ளனர். அந்த இடைக்கால அறிக்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் மோதல் இடம்பெற்ற பகுதியில் இடம்பெயர்ந்துள்ள மற்றும் அப்பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவது தொடர்பில் நிர்வாக ரீதியாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விதந்துரைக்கப்பட்டுள்ளன.

தமது அன்றாட நடவடிக்கைகளை தமது தாய்மொழியிலேயே அம் மக்கள் மேற்கொள்வதுடன் குறிப்பாக பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை முன்வைக்கும்போது இந்நடைமுறையை கட்டாயமாக பின்பற்ற வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோதல் நடைபெற்ற பிரதேசங்களில் வாழ்ந்த மக்கள் மேற்படி ஆணைக்குழு அங்கத்தவர்களுக்குத் தெரிவித்துள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டே மேற்படி நிர்வாக மாற்றங்கள் தொடர்பான சிபார்சுகள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன், தனி நபர்கள் அமைப்புக்கள், உட்பட ஆணைக்குழு பெற்றுக்கொண்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்த தீர்மானங்களை ஆணைக்குழு விதந்துரைப்புச் செய்துள்ளது.

மேற்படி ஆணைக்குழு கொழும்பில் 14 அமர்வுகளையும் வவுனியாவில் 06 அமர்வுகளையும் நடாத்தியுள்ளதுடன் 16, 17, 18ம் திகதிகளில் கிளிநொச்சியிலும் அமர்வுகளை நடத்தவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக