18 ஆகஸ்ட், 2010

பலவந்தமாக மக்களைக் குடியேற்றும் முயற்சி செட்டிக்குளத்தில் முறியடிப்பு

செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 1600 குடும்பங்களைச் சேர்ந்த 5000 பேர் இன்று புதன்கிழமை பலவந்தமான செட்டிக்குளம் கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட இருந்தனர்.

எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் தலையீட்டை அடுத்து, மாற்றம் நிறுத்தப்பட்டது.

செட்டிக்குள வலயம் 04 நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை கதிர்காமர் நலன்புரி நிலையத்திற்கு மாற்றி, பின்னர் ஒரு மாத காலத்தினுள் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு மீள்குடியேற்றுவதாக இராணுவம் தெரிவித்திருந்தது.

ஆனால் மேற்படி நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களுக்கு வேறு நலன்புரி நிலையங்களுக்குச் செல்ல விருப்பம் இருக்கவில்லை.

தங்களை இடமாற்றும்போது, பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகள், வேலை வாய்ப்புகள் இல்லாது போய்விடும் என அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் அவர்களின் கூற்றை இராணுவ அதிகாரிகள் செவிமடுக்கவில்லை. இதனையடுத்து அவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வினோநோகராதலிங்கத்தின் கவனத்திற்கு இதுவிடயத்தைக் கொண்டு வந்தனர்.

அவர் இதுதொடர்பாக பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருடன் பேசி, மக்களின் இடமாற்றத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக