18 ஆகஸ்ட், 2010

வீடமைப்பு அதிகார சபைக்கு சொந்தமான காணிகளை கண்டறிய விசேட நடவடிக்கை ஓகஸ்ட் 31க்கு முன்னர் பூர்த்தி செய்ய திட்டம்


வடக்கு, கிழக்கு உட்பட நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை நிர்மாணிப்பதற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் கண்டறியும் நடவடிக்கையை அதிகார சபை இம்மாதம் முதல் ஆரம்பித்துள்ளது.

அமைச்சர் விமல் வீரவங்சவின் அறிவுறுத்தலுக்கமைய நடைமுறைப்படுத்த ப்படவுள்ள இத்திட்டத்தின் நோக்கம் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான சகல காணிகளையும் உரிய முறையில் இனங்கண்டு கொள்வதும், இனங்காணப்பட்ட காணிகளை மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒழுங்கான முறையில் வீடமைப்பு மற்றும் குடியிருப்பு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்திக் கொள்வதுமாகும்.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபைக்கு முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ள, ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய, அத்துமீறிய குடியிருப்புக்களைக் கொண்டுள்ள மற்றும் ஏற்கனவே முறையாக விபரங்களை ஒன்று சேர்த்து வைக்காத காணிகளின் பட்டியலொன்றை மிகவும் குறுகிய காலத்திற்குள் சரியான முறையில் தயாரித்துக்கொள்ள காணி நடவடிக்கைக் குழு ஒழுங்குகளை மேற்கொள்ளும்

காணிகளின் சகல விபரங்களும் இம் மாத முடிவுக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இந் நடவடிக்கையானது கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, கம்பஹா, கண்டி ஆகிய மாவட்டங்கள் சம்பந்தமாக விசேட கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படுவதுடன், அம் மாவட்டங்களின் குறைந்தது 500 ஏக்கர் அளவு காணி விபரங்கள் திரட்டப்பட்டு அக் காணியில் வீடில்லாத குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு திட்டம் வகுக்கப்பட உள்ளதாக வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொது முகாமையாளர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக