25 ஆகஸ்ட், 2010

உயிராபத்து அறிவித்தல் தனிச் சிங்களத்தில்...! : பேராதனை பூங்காவில் அவலம்!

பேராதனைப் பூங்காவில் தனிச்சிங்கள மொழியிலான அறிவித்தலால் வெளிநாட்டு சுற்றுலாத்துறையினரும் சிங்கள மொழி தெரியாதவர்களும் எதிர்நோக்கும் ஓர் ஆபத்து பற்றிய செய்தி பரவலாகப் பேசப்படுகிறது.

தூரியான் மரத்தின் கீழ் யானை கூடச் செல்லாது என்று எம் முன்னோர்கள் கூறுவர்.

இப்போது தூரியான் பழம் காய்த்துள்ள காலம். யானைகள் நிச்சயமாக பேராதனை தாவரவியற் பூங்காவில் அதி உயர்ந்த தூரியான் மரத்திற்குக் கீழ் நடந்து செல்லும் சாத்தியம் இல்லை. எனினும், மனிதர் செல்லக் கூடிய வாய்ப்பு இருக்கின்றதல்லவா?

விடயம் தெரியாத, அறிவித்தலை விளங்கிக் கொள்ள முடியாத, உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப்பயணிகள் அணியணியாக தூரியான் மரத்தை அண்டிய பகுதிக்குச் செல்கின்றனர்.

தவறுதலாக ஒரு பழம், எவரது தலையிலாவது விழுந்தால்.....? உயிர் ஆபத்து கூட ஏற்படும் சாத்தியமுள்ளது.

ஆபத்து விளைவிக்கும் ஒரு மரத்தின் கீழ் தனிச் சிங்களத்தில் மட்டும், 'தூரியான் மரத்திற்குக் கீழாகச் செல்ல வேண்டாம்' என அறிவித்தல் பலகை வைக்கப்பட்டிருப்பது சரிதானா?

சிங்களம் வாசிக்கத் தெரியாத வெளிநாட்டவர் மட்டுமல்லாது தமிழ் மக்களும் கூட இந்த ஆபத்துக்கு உள்ளாக நேரிடுகிறதே?

இன,மொழி சமத்துவம் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருக்கும் எம் சகோதர மொழி 'பெரியவர்கள்' கூட, இவ்வாறு அம்மரத்தைக் கடந்து தான் செல்கின்றனர். அறிவித்தல் பலகையைப் பார்க்கத்தான் செய்கின்றனர்.

ஆனால், "இதென்ன, சிங்களத்தில் மட்டும் இந்த அறிவித்தல் வைக்கப்பட்டிருக்கின்றது, தமிழ், ஆங்கில மொழிகளில் இல்லையே...." என்ற சிந்தனை அவர்களுக்கும் வரவில்லையே? ஏன்...?

தம்மவர் மட்டும் உயிர் பிழைத்தால் போதும், மற்றவர் எக்கேடு கெட்டால் என்ன என்ற தன்னலப் போக்குத்தான் அவர்கள் கண்களை மறைத்து விட்டதோ என்று கூட எண்ணத் தோன்றுகின்றது.

அறிவித்தலை வாசித்துப் புரிந்து கொள்ள முடியுமாயின், அல்லது யாராவது அருகிலிருந்து எச்சரிப்பார்களாயின் உயிராபத்தைத் தவிர்க்கலாமல்லவா?

எந்த ஓர் ஆபத்தும் ஏற்பட முன் காப்பதே வேண்டற்பாலது. ஆபத்து நேர்ந்த பின் அங்கலாய்ப்பதில் அர்த்தம் இல்லை.

எனவே சம்பந்தப்பட்டோர் இது விடயத்தில் கூடிய கவனம் எடுத்து, விரைந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக