7 ஆகஸ்ட், 2010

ஐக்கிய தேசியக் கட்சியால் மட்டுமே பிரச்சினைகளுக்கான தீர்வை காண முடியும்: மங்கல

நாட்டில் காணப்படும் பாரதூரமான பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே தீர்வுகாண முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

வாழும் உரிமைக்காக, உழைக்கும் மக்களின் உரிமைக்காக, பிளவுப்படாத இலங்கையில் சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களுக்கு நியாயத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சியினால் மாத்திரமே குரல் கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மங்கள சமரவீர இன்று ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்துக்கொண்டார். இதனையடுத்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க இன்று உயிருடன் இருந்திருந்தால், தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்ததை ஆசிர்வதித்திருப்பார். 1978 இன் பின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியாது போன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, 94 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சியை கைப்பற்றியது.

இதில் தானும் முக்கிய பங்காற்றியதாகவும் அதேபோல் 16 வருடங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதில் எதிர்நோக்கி வரும் சவால்களை இன்று முதல் தானும் எதிர்கொள்ள போவதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

தனி நபர் அல்லது ஒரு குழுவினரின் ஏகாதிபத்திய அரசியலுக்கு எதிராக, சமூக ஜனநாயகத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே பண்டாரநாயக்க 1951 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உருவாக்கினார்.

சமூக ஜனநாயகம் தொடர்பில் இருந்த நம்பிக்கை காரணமாகவே தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினராகவும் மாத்தறை தொகுதியின் அமைப்பாளராகவும் பொறுபேற்றுக்கொண்டதாகவும் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு குடும்பத்தின் தேவைக்காக சர்வாதிகார பயணத்தை மேற்கொண்டுள்ளது எனவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக