16 ஆகஸ்ட், 2010

‘2 கோடி டொலருக்கு மேல் கொடுத்து சன் k கப்பலில் கனடா வந்துள்ளனர்’




சன் k கப்பலில் கனடாவை சென்றடைந் துள்ள இலங்கைத் தமிழர்கள் சுமார் இரண்டு கோடிக்கு மேற்பட்ட அமெரிக்க டொலர் களை கடத்தல்காரர்களுக்கு கொடுத்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தலா 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் அமெரிக்க டொலர்களை இவர்கள் செலுத்தியதன் பின்னரே தமது 3மாத கடற்பிரயாணத்தை தாய்லாந்திலிருந்து தொடங்கியிருக்கலாம் என கனேடிய பொது பாதுகாப்பு அமைச்சர் விக் டோஸ் கூறியுள்ளார்.

இந்தக் கப்பலில் பயணித்த பெண்கள் மற்றும் சிறார்களுக்கு கட்டண சலுகை ஏதாவது கடத்தல்காரர்களால் வழங்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இப்படியான ஆட்கடத்தல்கள் மூலம் கடத்தல்காரர்கள் பெருந்தொகையான பணத்தை இலகுவாகப் பெறுவதற்கு சன் k. கப்பல் ஒரு நல்ல உதாரணம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கடந்த 3 மாதங்கள் கடினமான கடற்பயணத்தை மேற்கொண்ட பிரிட்டிஷ் கொலம்பியா கடற்பிராந்தியத்திற்கு சென்ற இந்தக் கப்பலை கனேடிய அதிகாரிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். ஆரம்ப விசாரணைகளை மேற்கொண்ட குடிவரவு அதிகாரிகள் தற்போது 490 அகதிகளில் பலரை தடுப்பு முகாம்களுக்கு அனுப்பியுள்ளதாக ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை கப்பலில் பயணித்த இலங்கையர்களின் பெயர் விபரங்கள் எதுவும் கனேடிய அரசாங்கத்தினால் வெளியிடப்படவில்லை. பிலிப்பைன்ஸணுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான தாய்லாந்து வளைகுடாவில் இருந்து இந்தக் கப்பல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. 10 மாதங்களுக்கு முன்னர் கனடாவை வந்தடைந்த ஓசியன் லேடி கப்பல் பயணித்த வழியாக ஆனால் சிறிது மாறுபட்ட பாதையில் சன் k கப்பல் பயணித்துள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட கப்பல் தாய்லாந்தில் இருந்தே பயணத்தை ஆரம்பித்தது என்ற விடயம் கப்பல் பயணிகளின் அகதி அந்தஸ்து பரிசீலனையின் போது கவனத்திற் கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறினர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக