24 ஜூலை, 2010

லெபனானில் பொதுமன்னிப்பு காலம் அறிவிப்பு: 3000 இலங்கையரை அழைத்து வருவதற்கு விசேட ஏற்பாடுகள்



பல்வேறு காரணங்களுக்காக நாட்டைவிட்டு வெளியேற முடியாதுள்ள வெளிநாட்டினருக்கு பொது மன்னிப்புக் காலமொன்றை லெபனான் அரசு அறிவித்துள்ளது. லெபனானிலிருந்து நாடு திரும்ப முடியாதுள்ள இலங்கையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தலைவர் சட்டத்தரணி கிங்ஸிலி ரணவக்க அறிவித்துள்ளார். விசாக்காலம் முடிவடைந்த நிலையிலும் கடவுச் சீட்டின் செல்லுபடியாகும் காலம் முடிவடைந்த நிலையிலும் நாடு திரும்ப முடியாமல் இருக்கும் இலங்கையர்களை திரும்பி அழைத்துக்கொள்ள அவர்களது உறவினர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பல்வேறு காரணங்களுக்காக இலங்கை திரும்ப முடியாமல் சுமார் 3000 பேரளவில் லெபனானில் தங்கியுள்ளனர்.

லெபனானிலுள்ள இலங்கைத் தூதுவர் எம். மஹ்ரூப் மற்றும் தெற்காசிய நாடுகளின் தூதுவர்கள் சிலர் லெபனான் உள்துறை அமைச்சுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் பயனாகவே மூன்று மாத கால பொதுமன்னிப்பு வழங்க லெபனான் அரசு முடிவு செய்தது. சட்டப் பிரச்சினைகள் தொடர்பாகவும், பல்வேறு காரணங்களுக் காகவும் இன்னல் களுக்குள்ளான நிலை யிலும், லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்தின் நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள இலங்கையரும், விசாகாலம் முடிவடைந்த நிலையில் பெருந்தொகையான பணத்தை தண்டப்பணமாக செலுத்த முடியாமலும் உள்ள மற்றும் சிறையிலுள்ளவர்களுமாக சுமார் 3000 பேர் இந்த பொது மன்னிப்புக்காலத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

கடவுச் சீட்டின் செல்லுபடியான காலம் முடிவடைந்துள்ள நிலையில் நாடு திரும்ப முடியாமல் உள்ள இலங்கையர் லெபனானிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்குச் சென்று தற்காலிக கடவுச் சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். விமான டிக்கட்டுக்களின் காலம் முடிவடைந்திருப்பின் அவற்றையும் புதுப்பித்து வழங்க இலங்கை தூதரகம் ஆயத்தமாகவுள்ளது என்றும் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.

நாடு திரும்பும் இலங்கையரை குழுக்களாக அழைத்து வருவதற்கு ஏதுவாக விசேட விமானங்களை ஏற்பாடு செய்வதற்காகவும் பேச்சுவார்த்தைகள் நடைபெறு கின்றன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக