2 ஜூலை, 2010

ஆஸ்திரேலிய புதிய குடியேற்றச் சட்டம் எதிரொலி: 15 ஆயிரம் இந்திய மாணவர்களின் கதி என்ன?





குடியேறும் வெளிநாட்டவர் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் புதிய குடியேற்றச் சட்டத்தை அந்நாட்டு அரசு வியாழக்கிழமை முதல் அமல்படுத்தியுள்ளது.

இந்த சட்டத்தின் பாதிப்பாக அங்கிருந்து சுமார் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் இந்திய மாணவர்கள் தாயகம் திரும்பும் நிலை ஏற்படக்கூடும் என வெளிநாடு வாழ் விவகாரத்துறை அமைச்சர் வயலார் ரவி வியாழக்கிழமை தெரிவித்தார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் வயலார் ரவி கூறியதாவது: வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கும் குடியேறும் தொழிலாளர்களை குறைக்கும் நோக்கத்தில் புதிய குடியேற்றச்சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு அமல்படுத்தியுள்ளது. ரூட் தலைமையிலான அரசு இந்த சட்டத்தை கொண்டுவந்தது.

இதன்படி திறன்சார் தொழில்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள தொழில்கள் எண்ணிக்கை குறைக்கப்படுகிறது. முன்னதாக இந்த தொழில்கள் எண்ணிக்கை 450 ஆக இருந்தது. அது 150 ஆக குறைந்துள்ளது. இந்த பட்டியலில் உள்ள தொழில்கள் சார்ந்த படிப்புகளை தேர்ந்தெடுத்து படிக்க ஆஸ்திரேலியா செல்லும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பு முடிந்ததும் நிரந்தர குடியுரிமை பெறுவதுடன் வேலையும் பெற்று வந்தனர்.

தற்போது அந்த பட்டியலிலிருந்து முடித்திருத்தும் தொழில், சமையல் கலை உள்ளிட்டவை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியா சென்று நிரந்தரக் குடியுரிமை பெறும் நோக்கத்தில் ஏராளமான இந்திய மாணவர்கள் இத்தகைய படிப்புகளில் சேர்ந்து பயில்கின்றனர். இனி நிலைமை மாறிவிடும். எனினும் இப்போது பயிலும் இந்திய மாணவர்கள் 2012ம் ஆண்டு வரை படிப்பை தொடர சலுகை அளித்துள்ளது ஆஸ்திரேலியா.

தொழில்படிப்பு அளிக்கும் கல்வி நிறுவனங்களை மூடிவருகிறது ஆஸ்திரேலியா. இத்தகைய கல்வி நிறுவனங்களில் ஏராளமான இந்திய மாணவர்கள் சேர்ந்து பயில்கின்றனர்.

புதிய குடியேற்றச் சட்டத்தை அமல்படுத்தும்போது இந்திய மாணவர்களின் கவலையை கருத்தில் கொள்ளுமாறு ஆஸ்திரேலியாவுக்கு நான் பயணம் மேற்கொண்டபோது அரசுக்கு கோரிக்கை வைத்தேன். அதைத் தொடர்ந்து, தொழில்கல்வி பயிலும் இந்திய மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக நிறுவனங்கள் உறுதிதந்தால் அத்தகைய மாணவர்கள் 2012வரை தங்கியிருக்கலாம் என அரசு தரப்பில் உத்தரவாதம் தெரிவிக்கப்பட்டது.

புதிய குடியேற்றச் சட்டத்தின் காரணமாக இந்திய மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது நிச்சயம். சுமார் 30 ஆயிரம் மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவார்கள். 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மாணவர்கள் வரை தாயகம் திரும்பக்கூடும்.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் அடிக்கடி தாக்கப்பட்டதைத் தொடர்ந்து குடியேற்றச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவருவதாக ஆஸ்திரேலியா உறுதி அளித்திருந்தது.

ஆஸ்திரேலியாவில் தொழில்கல்வி பயின்றால் வேலையும் கிடைக்கும் நிரந்தர குடியுரிமையும் கிடைக்கும் என ஆசை காட்டி ஏராளமான மாணவர்களை ஏஜெண்டுகள் அனுப்பிவந்தனர். இனிமேல் சமையல் கலை, முடித்திருத்தும் தொழில் போன்ற படிப்புகளுக்கு செல்வோருக்கு ஆஸ்திரேலிய அரசு விசா வழங்காது.

இந்திய மாணவர்கள் தற்போது படித்துவரும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மாற்றுப்படிப்புகளில் சேர்ந்து படிக்க வாய்ப்பு தரப்படுகிறது. முந்தைய குடியேற்றச்சட்டத்தின் படி ஆஸ்திரேலியா சென்ற மாணவர்கள் தொழில்கல்வி படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர். அத்தகையோர் அந்த படிப்புகளை முடிக்க ஆஸ்திரேலிய அரசு வழிகாண வேண்டும் என்றார் வயலார் ரவி.

ஆஸ்திரேலியாவில் சீனர்களுக்கு அடுத்தபடியாக 1 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் பல்வேறு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக