22 ஜூன், 2010

சர்வாதிகாரப் போக்கில் அரசியலமைப்பை மாற்றியமைப்பதற்கு அரசாங்கம் முயற்சி- கயந்த எம்.பி

அரசியலமைப்பில் மாற்றங்களை அல்லது திருத்தங்களை ஏற்படுத்தப் போவதாக கூறுகின்ற அரசாங்கம் தனது சர்வாதிகாரப் போக்கை முன்னெடுத்து வருகின்றது. இது சுதந்தி ரக் கட்சியின் யாப்பு அல்ல எனவே, பகிரங்கத்தன்மை இல்லாவிட்டால் அதற்கெதிராக ஏனைய கட்சிகளையும் இணைத்துக் கொண்டு சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் செய ற்பட வேண்டி ஏற்படும். இதனை எவராலும் தடுக்க முடியாது. என்று ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட் கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அக்கட்சியின் பேச்சாளார் கயந்த கருணா திலக்க எம்.பி மேற் கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில்;

நிறைவேற்று அதிகாரம் தொடர்பில் விமர்சித்தவர்களும் அது இந்நாட்டுக்குப் பொருத்தமில்லாதது என்று வர்ணித்தவர்களும் இன்று அரசாங்கத்தின் பங்காளிகள் அமைச்சர்கள் என்பதால் மக்களை ஏமாற்றுகின்ற அனைந்து நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்துக் கொண்டிருக்கின்றனர். நிறைவேற்று அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் நோக்கில் அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக அரசாங்கத்தின் செயற்பாடுகள் வெளிப்பட்டுள்ளன. மேலும் இந்த மாற்றங்கள் எப்படிபட்டவை என்பது இதுவரையில் இரகசியமாகவே இருக்கின்றது. வேறு வகையில் கூறினால் அரசாங்கம் திருட்டுத்தனமாக தனது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு காலப் பகுதிகளின்போது அரசியலமைப்பில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் தொடர்பில் அன்று பகிரங்கத் தன்மை வெளிப்படைத்தன்மை காணப்பட்டது. ஆனால், இன்றைய அரசாங்கம் தனது இருப்பையும் பதவிகளையும் தக்கவைத்து கொள்வதற்காகவே அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளது.

எவ்வாறான மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் உள்வாங்கப்படவிருக்கின்றன என்பது தொடர்பில் அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை இதுவரையில் காணக்கிடைக்கவில்லை.

ஒரு புறத்தில் அரசாங்கம் சர்வாதிகாரப் போக்குடனேயே செயற்பட்டு வருகின்றது. இதனை உணர்ந்துதான் பொதுத் தேர்தலின்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டாம் எனக் கூறினோம். ஏனெனில், அதிகாரத்தைப் பெறுகின்ற அரசாங்கத்திடம் மக்கள் குறிந்த சிந்தனையோ நாடு தொடர்பிலான அக்கறையோ இருக்காது. ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரையில் பிரதான எதிர்க்கட்சி என்ற வகையில் எமக்கு நாடு தொடர்பிலான அக்கறை உண்டு. மக்களின் எதிர்காலம் குறித்த அக்கறை இருக்கின்றது.

எனவே, அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவிருக்கின்ற அரசியலமைப்பு மாற்றங்கள் தொடர்பில் நாட்டுக்கும் மக்களுக்கும் பகிரங்கப்படுத்த வேண்டும். இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினதோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினதோ, யாப்பாக இருந்தால் அது குறிந்து நாம் கவலைப்படப் போவதில்லை. அரசாங்கம் கைவைத்திருப்பது இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு சட்டத்திலாகும். இதில் மேற்கொள்ளப்படவிருக்கின்ற மாற்றங்கள் தொடர்பில் வெளிப்படைத் தன்மையை அரசாங்கம் கடைப்பிடிக்கத் தவறுமாயின் ஐக்கிய தேசியக் கட்சி ஏனைய எதிர்க்கட்சிகளையும் மாற்றுக்குழுக்கள் மற்றும் மாற்றுதரப்பாரை இணைத்துக் கொண்டு சட்டரீதியிலும் அதேநேரம் அரசியல் ரீதியாக பாரியளவிலான நடவடிக்கைகளையும் முன்னெடுக்க வேண்டி ஏற்படும் என்பதையும் அரசாங்கத்திற்கு எச்சரிக்கையுடன் நினைவூட்ட விரும்புகிறோம் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக