6 ஜூன், 2010

கிறிஸ்மஸ் தீவிலுள்ள 700 அகதிகளை ஆஸி. பிரதான நிலப்பரப்புக்குக் கொண்டு செல்லத் தீர்மானம்


அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிலுள்ள தடுப்பு முகாம்கள் நிரம்பி வழிவதால் அங்கிருந்து 150 இலங்கைத் தமிழர்கள் உட்பட 700 படகு அகதிகள் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பரப்புக்கு கொண்டு செல்லப்படவுள்ளனர். கிறிஸ்மஸ் தீவில் ஏற்பட்டுள்ள இடநெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள 600 ஆப்கானிஸ்தான் நாட்டவர்களையும், 150 இலங்கைத் தமிழர்களையும் அவுஸ்திரேலியாவின் பிரதான நகரொன்றுக்குக் கொண்டு செல்வதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் கிறிஸ் இவான்ஸ் தெரிவித்துள்ளார். 700 அகதிகள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து கேட்டின் விமானத் தளத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட விமானங்கள் மூலம் கொண்டு செல்லப்படவுள்ளனர். இந்த நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது.

மேற்கு அவுஸ்தி“ரேலியாவின் பின்தங்கிய பகுதியாகிய கேட்டினில் ஆரம்பக் கட்டத்தில் 200 தொடக்கம் 300 வரையான அகதிகள் தங்கவைக்கப்படவுள்ளனர். தற்போது கிறிஸ்மஸ்தீவில் 2436 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இங்கு ஆகக் கூடுதலாக 2500 பேர் தங்குவதற்கான வசதிகளே உள்ளன. இந்த நிலையிலேயே ஒரு தொகுதி அகதிகளை அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களை அவுஸ்திரேலிய பிரதான நிலப்பரப்புக்கு மாற்றினால் அங்குள்ள தடுப்பு முகாம்கள் நிரம்பி விடும். இலங்கையிலிருந்து வரும் அகதிகளின் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மூன்று மாதங்களுக்கும், ஆப்கானிஸ்தான் அகதிகளின் விண்ணப்பங்களை ஆறு மாதங்களுக்கும் பரிசீலிப்பதில்லை என்று கடந்த ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக