23 ஏப்ரல், 2010

புதிய சபாநாயகராக சிரேஷ்ட அரசியல்வாதியும் ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏழாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக சிரேஷ்ட அரசியல்வாதியும் ஜனாதிபதியின் மூத்த சகோதரருமான சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முதலாவது அமர்வு நேற்று 22 ஆந் திகதி வியாழக்கிழமை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பமான போது ஆளுந்தரப்பால் முன்மொழியப்பட்டு எதிர்க்கட்சியினரால் வழிமொழியப்பட்டு புதிய சபாநாயகராக சமல் ராஜபக்ஷ ஏகமனதாகத் தெரிவானார்.

பாராளுமன்றத்திற்கு நேற்றுக் காலை எட்டு மணியிலிருந்தே உறுப்பினர்கள் வருகை தந்தனர்.

மீண்டும் தெரிவாகி வந்த முன்னாள் உறுப்பினர்கள், புதிய உறுப்பினர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் கைலாகு கொடுத்து ஆரத்தழுவி வாழ்த்துகளையும் மகிழ்ச்சியையும் பரஸ்பரம் வெளிப்படுத்திக் கொண்டனர்.

புதிய பிரதமர் டி. எம். ஜயரட்ன, முன்னாள் பிரதமர் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.

காலை 8.40 அளவில் பெருமளவான உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருக்க ஜே. வி. பி., ஐ. தே. க உறுப்பினர்கள் சகிதம் முன்னாள் ஜெனரல் சரத் பொன் சேகா சபைக்குள் வந்தார். அப்போது அவருக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் உட்பட எதிரணியினர் கைலாகு கொடுத்து வரவேற்றனர்.

சபைக்கு வந்த பொன்சேகா பார்வையாளர் கலரியிலிருந்த வெளிநாட்டு இராஜ தந்திரிகளுக்குக் கையசைத்துவிட்டுப் பின் மனைவி அமர்ந்திருந்த பக்கமாகப் பார்த்து கையசைத்தார்.

காலை 8.45 இற்குப் படைக்கலச் சேவிதர் சபைக்கு செங்கோலை எடுத்து வந்தார்.

அதனைத் தொடர்ந்து பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் தம்மிக்க கித்துல்கொட ஜனாதிபதியின் பிரகடனத்தை வாசித்தார். அதன் பின் சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டுமென்று உறுப்பினர் ஒருவரின் பெயரை முன்மொழியுமாறு சபையினரிடம் கேட்டுக்கொண்டார். இதன்போது பிரதமர் டி. எம். ஜயரட்ன, சமல் ராஜபக்ஷவின் பெயரை சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தார்.

அந்தப் பெயரை வழிமொழியுமாறு செயலாளர் நாயகம் கேட்டுக் கொண்டதும் எதிரணிப் பக்கமிருந்து ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரிய எழுந்து சமல் ராஜபக்ஷவின் பெயரை வழிமொழிந்து ஏற்றுக்கொள்வதாகக் கூறினார். வேறு பெயர்கள் எதுவும் முன்மொழியப்படாததால், சமல் ராஜபக்ஷ சபாநாயகராக ஏகமனதாகத் தெரிவாகியதாக செயலாளர் நாயகம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் டி. எம். ஜயரட்னவும், ஐ. தே. க. பிரதித் தலைவர் கரு ஜயசூரியவும் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவை சபா பீடத்துக்கு அழைத்துச் சென்றனர். சபா பீடத்தைப் பொறுப்பேற்ற சபாநாயகர் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துத் தமது கடமைகளை உறுதிப் பிரமாணத்துடன் ஆரம்பித்தார்.

முதலில் பிரதமர் ஜயரட்னவை கன்னி உரை நிகழ்த்த சபாநாயகர் அழைத்தார். அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், உறுப்பினர்கள் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளாமல் எவ்வாறு உரையாற்ற முடியும்? என்று கேள்வி எழுப்பினார். அதன்பின்னர் சபாநாயகரின் வேண்டுகோளின்படி சகல உறுப்பினர்களும் எழுந்து நின்று, தமக்கு வழங்கப்பட்டிருந்த உறுதியுரையினை வாசித்து சத்தியப் பிரமாணம் செய்துகொண்டு அதற்கான புத்தகத்தில் கையொப்பமிட்டனர். ஐ. தே. க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உட்பட எதிரணியில் சில உறுப்பினர்கள் இறுதி நேரத்திலேயே சபைக்கு வந்து சேர்ந்தனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாரியார் சகிதம் பாராளுமன்றத்திற்கு வந்திருந்த போதிலும் அவர் ஆரம்ப சம்பிரதாயபூர்வ மான நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை. அவரது புதல்வர் நாமல் ராஜபக்ஷ சத்தியப் பிரமாணம் செய்வதையொட்டியே அவர் நேற்று வருகை தந்திருந்தார். ஜனா திபதியின் பாராளுமன்ற வருகையையொட்டி பாராளுமன்றத்துக்குச் செல்லும் வீதியிலும், வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டிருந்தது. ஊடகவியலாளர்களும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவினராலேயே பாராளுமன்றத்திற்குக் கொண்டுசெல்லப் பட்டனர்.

வழமையாகப் பாடசாலை மாணவர்களால் நிரம்பி வழியும் பார்வையாளர் கலரியில், நேற்று பாராளுமன்ற உறுப்பினர்களின் குடும்ப உறுப்பினர்கள் நிறைந்து காணப்பட்டனர். வெளிநாட்டு இராஜதந்திரிகளும் பெருமளவில் வருகை தந்திருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக