21 பிப்ரவரி, 2010

பொன்சேகாவால் ஒன்றிணையும் இலங்கை எதிர்க்கட்சிகள்

இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எதிர்க்கட்சிகள் ஓரணியாக ஆதரவு தெரிவித்துள்ளன. இதன் மூலம் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் இணைந்து போட்டியிட வாய்ப்பு உருவாகியுள்ளது.

÷அதிபர் தேர்தலில் போட்டியிட்ட பொன்சேகா மீது, கொலைக் குற்றம் சுமத்தி ராஜபட்ச அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்நிலையில் அவருடைய விடுதலைக்கு ஆதரவாக அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பியுள்ளன.

÷அதிபர் தேர்தலில் ராஜபட்சவுக்கு எதிராக போட்டியிட்ட பொன்சேகாவுக்கு எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்தன. ஆனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதென முடிவு செய்திருந்தன. இந்நிலையில் பொன்சேகாவின் விடுதலைக்காக அவை அனைத்தும் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்துள்ளன.

பொன்சேகாவின் மனைவி அனோமாவை எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் வெள்ளிக்கிழமை மாலை சந்தித்துப் பேசினர். அப்போது பொன்சேகா கைது விவகாரம் மற்றும் ராணுவ நீதிமன்ற விசாரணை குறித்தும் அவரிடம் விவாதித்தனர். ஐக்கிய தேசியக்கட்சி, இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜனதா விமுக்தி பெரமுன உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

÷நாடாளுமன்றத் தேர்தலில் பொன்சேகா போட்டியிடுவது குறித்தும் அவர்கள் அப்போது விவாதித்தனர்.

÷நாட்டில் தற்போது அசாதாரண சூழ்நிலை எழுந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் இருந்த சூழ்நிலையைக் காட்டிலும் தற்போது நாடு புதிய சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக அவர்கள் கவலை தெரிவித்தனர். இதை அனைவரும் ஒன்றுசேர்ந்து எதிர்கொள்ள வேண்டும். இதற்காக நீண்ட விவாதம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர்கள் அப்போது தெரிவித்தனர்.

÷பொன்சேகா விவகாரத்துக்காக ஓரணியில் சேரும் எதிர்க்கட்சிகள், வரும் தேர்தலில் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக