19 பிப்ரவரி, 2010





ஒரே நேரத்தில் 6 பெண்களை மணந்தவருக்கு 120 கசையடி




சவுதிஅரேபியாவில் அல் மசார்கா என்ற கிராமத்தை சேர்ந்த ஒருவர் அரசாங்கத்தில் அதிகாரியாக இருக்கிறார். அவர் ஒரே நேரத்தில் 6 பெண்களை திருமணம் செய்து கொண்டார். இது அந்த நாட்டு சட்டப்படி குற்றம் ஆகும். இதனால் அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஒரே நேரத்தில் 4-க்கும் மேற்பட்ட பெண்களை திருமணம் செய்து கொள்வது இஸ்லாமிய சட்டப்படி குற்றம் என்பது எனக்கு தெரியாது என்று அவர் கோர்ட்டில் கூறினார்.

இந்த குற்றத்துக்கு இஸ்லாமிய சட்டப்படி கல் எறிந்து கொல்லலாம். ஆனால் நீதிபதி அதிகபட்ச தண்டனை கொடுக்காமல் அவருக்கு ஒரு மனைவிக்கு 20 கசையடிகள் என்று 6 மனைவிகளுக்கும் 120 கசையடி கொடுக்கும்படி தீர்ப்பு கூறினார். அதோடு அவர் திருக்குரான் புத்தகத்தில் இருந்து 2 அத்தியாயங்களை மனனம் செய்யவேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது.

மேலும் 5 ஆண்டுகளுக்கு வெளிநாடுகளுக்கு செல்லக்கூடாது என்றும் தடை விதித்தது.



அமெரிக்காவில் ஒபாமாவின் செல்வாக்கு சரிந்தது
மீண்டும் அதிபராக ஆதரவு இல்லை




அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்டபோது ஒபாமாவின் செல்வாக்கு உச்சத்தில் இருந்தது. இப்போது அது சரிந்து விட்டது. 2012-ம் ஆண்டு நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் அவர் வெற்றி பெறவும் அவருக்கு மக்களிடம் ஆதரவு இல்லை.

சரித்திர சாதனை

அமெரிக்க சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு கறுப்பர் ஜனாதிபதியாக முடிந்தது இப்போது தான். இந்த சாதனையை ஒபாமா சாதித்தார். மெஜாரிட்டியான வெள்ளையர்கள் இருக்கும் நாட்டில் ஒரு கறுப்பர், அதுவும் ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்த ஒரு கறுப்பர் வெற்றி பெற முடிந்தது என்றால், அதற்கு மக்கள் மத்தியில் அவருக்கு இருந்த செல்வாக்கு தான்.

சுட்டுக்கொல்லப்பட்ட ஜனாதிபதி கென்னடியுடன் அவரை ஒப்பிட்டு பேசினார்கள். ஆனால் அவருடைய செயல்பாடுகள் நடவடிக்கைகள் எதுவும் மக்கள் நம்பிக்கைக்கு ஏற்ப இருக்கவில்லை. இதனால் அவருடைய செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது.

அதிருப்தி

அவர் வெற்றி பெற்ற நேரத்தில் அமெரிக்க பொருளாதாரம் சரிந்து கிடந்தது. இளைஞர்களுக்கு வேலைகள் கிடைக்கவில்லை. ஒபாமா இவற்றை எல்லாம் சரிசெய்து விடுவார் என்று மக்கள் எதிர்பார்த்தனர். பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் அதன் பலன்கள் எதிர்பார்த்தபடி இல்லை. அமெரிக்க இளைஞர்கள் இன்னும் வேலை இல்லாமல் திண்டாடுகிறார்கள். ஒபாமா ஜனாதிபதியாகி ஒரு ஆண்டு கடந்து விட்ட நிலையிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால், மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.

இது தொடர்பாக ஒரு டி.வி.சேனல் கருத்துக்கணிப்பு நடத்தியது. 1,023 பேரிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.

ஆதரவு இல்லை

2012-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒபாமாவை ஆதரிப்பீர்களா என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர்கள் 52 சதவீதம் பேர் ஒபாமா ஜனாதிபதியாக ஆதரவு கொடுக்க மாட்டோம் என்று தெரிவித்தனர். 44 சதவீதம் பேர் மட்டுமே அவருக்கு ஆதரவு அளிப்போம் என்று தெரிவித்தனர்.

ஒபாமாவின் ஒட்டுமொத்தப்பணிகள் நன்றாக இருப்பதாக 47.8 சதவீதத்தினரும், சரி இல்லை என்று 45.9 சதவீதத்தினரும் தெரிவித்தனர்.


அமெரிக்காவில்
7 மாடி கட்டிடம் மீது விமானம் மோதியது
தீவிரவாதிகள் தாக்குதலா?




அமெரிக்காவில் 7 மாடி கட்டிடம் மீது நேற்று திடீர் என்று சிறிய விமானம் மோதியது. இந்த செயல் தற்கொலை படை தீவிரவாதிகளின் தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

7 மாடி கட்டிடம் மீது மோதியது

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகரான ஆஸ்டின் நகரில் உள்நாட்டு பாதுகாப்பை கவனிக்கும் போலீஸ் அலுவலக வளாகத்தை (எப்.பி.ஐ) அடுத்து 7 மாடி கட்டிடத்தில் வரி வசூல் அலுவலகம் உள்ளது. இந்திய நேரப்படி நேற்று இரவு 10 மணியளவில் (அமெரிக்க நேரம் காலை 9.40) அந்த கட்டிடத்தின் மீது `ஒரு என்ஜின்' கொண்ட சிறிய விமானம் திடீர் என்று பறந்து வந்து மோதியது. அப்போது அந்த விமானம் வெடித்து சிதறியது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

விமானம் வந்து மோதியதால், அந்த கட்டிடம் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக தீ அணைக்கும் படையினரும், பாதுகாப்பு படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அந்த கட்டிடத்தில் இருந்த 199 பேர்களை, பாதுகாப்பு படையினர் வெளியேற்றினார்கள். தீ அணைக்கும் படையினர், தீயை அணைத்தனர்.

தற்கொலை படை தாக்குதல்?

இந்த சம்பவத்தில் அந்த கட்டிடத்தில் இருந்த சிலர் காயம் அடைந்தனர். அவர்களை போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது, தீவிரவாதிகளின் தற்கொலை படையினரின் தாக்குதலாக இருக்குமா? என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஜோன்ஸ் என்ற பெண்,`` விமானத்தை ஓட்டி வந்தவர் மிக தெளிவாக காணப்பட்டார். விமானமும் சீரான வேகத்தில் வந்து மோதியது. நான் காரில் வந்த போது இந்த காட்சியை நேரில் பார்த்தேன்`` என்று கூறினார்.

ஏற்கனவே

அந்த சிறிய விமானம் திருடப்பட்ட ஒன்று என்பது விசாரணையில் வெளிப்பட்டு இருக்கிறது. விமானத்தில் இருந்தவர்கள் எத்தனை பேர்? அவர்கள் கதி என்ன? என்பது அறிவிக்கப்பட வில்லை. இதில் எந்த வித தீவிரவாத தொடர்பும் இருக்க வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி அல்கொய்தா தீவிரவாதிகள் நிïயார்க் நகரில் இருந்த மிகப்பெரிய வணிக வளாக 110 மாடி இரட்டை கோபுர கட்டிடத்தின் மீது விமானத்தில் வந்து மோதியதும், இதனால் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்து 3 ஆயிரம் பேர் வரை இறந்ததும் குறிப்பிடத்தக்கது. அதே நாளில் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவ தலைமையக கட்டிடத்தின் மீதும் தீவிரவாதிகள் விமானத்தை மோதி பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்தினார்கள்.



சீனாவின் எச்சரிக்கையையும் மீறி
தலாய் லாமாவை ஒபாமா சந்தித்தார்



திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய் லாமா(வயது 74) அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர், நேற்று வெள்ளை மாளிகைக்குச் சென்று அமெரிக்க அதிபர் ஒபாமாவை திட்டமிட்டபடி சந்தித்து பேசினார். அப்போது, திபெத்திய பிரச்சினைக்கு தீர்வு காண உதவும்படி ஒபாமாவை அவர் கேட்டுக் கொண்டார்.

வழக்கமாக ஒபாமா உலக தலைவர்களை தனது ஓவல் அலுவலகத்தில்தான் சந்திப்பார். ஆனால், தலாய் லாமாவை நேற்று அவர் தனது திட்டமிடல் அறையில் சந்தித்து பேசினார். தலைவர்கள் இருவரது சந்திப்பும் தனிப்பட்ட முறையிலானது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவின் கடும் எச்சரிக்கையையும் மீறி அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகைக்கு தலாய் லாமாவை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக