31 ஆகஸ்ட், 2009


பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட சிறை

http://www.bbc.co.uk/worldservice/images/2008/06/20080630132612tissa203.jpg

மூத்த பத்திரிகையாளர் ஜே.எஸ்.திஸ்ஸநாயகத்துக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று இருபது வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

திஸ்ஸநாயகத்துக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரினால் தொடரப்பட்டிருந்த வழக்கில் அவருக்கு எதிரான மூன்று குற்றச்சாட்டுக்களில் அவர் குற்றவாளியென மேல்நீதிமன்றம் தீர்மானித்தது.

பயங்கரவாத தடுப்புச்சட்டம் கீழ் மற்றும் அவசரகால சட்டம் ஆகியவற்றின் விதிகளின் கீழ் சட்டமா அதிபரினால் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்த சஞ்சிகை ஒன்றை அச்சிட்டு பிரசுரித்தமை, வெளியிட்டமை தொடர்பாக இனங்களுக்கிடையிலான உணர்வுகளை தூண்டி பொதுமக்கள் மத்தியில் கலவரம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாக பத்திரிகையாளர் திஸ்ஸநாயகத்துக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

2006 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் 2007 ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதிக்கும் உட்பட்ட காலப்பகுதியில் பிரஸ்தாப குற்றங்கள் புரிந்துள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரச படைகள் கிழக்கு மாகாணத்தில் இனப்படுகொலையில் ஈடுபட்டிருப்பதாக கருத்து தெரிவித்து தனது சஞ்சிகையில் கட்டுரை வெளியிட்டமை மூலம் அரச படைகளுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

மேலும் இனங்களுக்கிடையிலான குரோதங்களை ஏற்படுத்த அதன்மூலம் திட்டமிட்டிருப்பதாகவும் அக்குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

முதலாவது, இரண்டாவது குற்றச்சாட்டுகளுக்கு தலா ஐந்து வருட சிறைத்தண்டனையும் மூன்றாவது குற்றச்சாட்டுக்கு பத்து வருட சிறைத்தண்டனையும் சேர்த்து 20 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 6 ஆம் திகதி திஸ்ஸநாயகம் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டார். குறிப்பிட்ட மாதாந்த சஞ்சிகையை வெளியிட்ட அச்சக உரிமையாளர் என்.யசீகரன் மற்றும் அவரது மனைவி ஆகியோர் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட பின் அவர்களை பார்வையிட பொலிசுக்கு சென்றபோதே திஸ்ஸநாயகம் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டார்.

பலமாத காலமாக பொலிஸ் தலைமையகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த திஸ்ஸநாயகம் பின்னர் கொழும்பு உயர்நீதிமன்ற தீர்ப்பொன்றை அடுத்து கடந்த மே மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் கொழும்பு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவரால் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரணசிங்க என்பவருக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் சுயாதீனமாக வழங்கப்பட்டதென கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே தீர்மானித்து அதனை அடிப்படையாக கொண்டு திஸ்ஸநாயக்துக்கு எதிரான வழக்கை விசாரணை செய்தது.

இதன்படி வழக்கு விசாரணை செய்த கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர, திஸ்ஸநாயகத்தின் மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் 20 வருட கடுழிய சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.

திஸ்ஸநாயகம் சார்பாக ஆஜரான சட்டத்தரணி அனில் டி சில்வா கருத்து தெரிவிக்கையில் திஸ்ஸநாயகம் ஒரு இனவாதி அல்லவென்றும் சிங்கள மக்களுக்கு ஆதரவான வகையில் பல்வேறு போராட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கியுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

அரசியல் அமைப்பில் கருத்து வெளியிடும் சுதந்திரம் மட்டுமல்ல இன, மத ரீதியின்றியும் பாரபட்சமின்றியும் நியாயமானதொரு வழக்கு விசாரணைக்கு அதிகாரம் வழங்கியுள்ளபோதிலும் அவருக்கு எதிரான வழக்கில் இந்த நியாயம் வழங்கப்பட்டதா என்பது ஒரு கேள்விக்குறியான விடயம் என்றும் சட்டத்தரணி அனில் டி சில்வா நீதிமன்றத்தில் இன்று வெளிப்படையாக தெரிவித்தார்.

இவ்வழக்கின் தீர்ப்பை அவதானிக்க பெருந்திரளான பத்திரிகையாளர்கள் மற்றும் வெளிநாட்டு தூதரக உத்தியோகத்தர்கள் கொழும்பு மேல்நீதிமன்றத்துக்கு சமூகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக