19 அக்டோபர், 2009

கைதான அமெரிக்க கோடீஸ்வரருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா?-அதிகாரிகள் விசாரணை




அமெரிக்காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ் ராஜரத்னம் என்பவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம் உட்பட மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி வோல் ஸ்ரீற் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் 2004 ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தினால் அழிந்து போன வீடுகளை புனரமைப்பதற்கு ராஜரத்னம் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதவித தொடர்பும் இல்லை என்று வோல்டன் தெரிவித்தார். நியூயோர்க், புக்ளினில் மத்திய புலன் விசாரணைப் பிரிவினர் நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றுமொரு விசாரணையில் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருளுதவி வழங்க முயற்சித்த வேறு 8 பேர் குற்றவாளிகளென ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் ராஜரத்தினமும் அவரது சகாக்களும் தங்கள் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்கிறது என்பதை தெரிந்திருந்தனர் என்று வழக்கு தொடுநர்கள் குற்றம் சாட்டவில்லை.ஆனால் நியூயோர்க் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய குற்றவியல் முறைப்பாட்டுப் பத்திரத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற பெயரில் மேரிலாந்திலுள்ள அமெரிக்க தரும நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்யப்படும் பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேர்கிறது என்று மத்திய புலன் விசாரணை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விடுதலைப் புலிகளின் அமெரிக்க பிரிவுத் தலைவர் என்று வழக்குத் தொடுநர்களால் தெரிவிக்கப்பட்ட கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வோல் ஸ்ரீற் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தவரது பெயர், ""தனிப்பட்டவர் பி'' என்று மட்டுமே நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ""தனிப்பட்டவர் பி'' என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜரத்தினத்தையே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் கூறியதாகவும் வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக