24 செப்டம்பர், 2009

நிலவில் தண்ணீர்: தடயங்களை "சந்திரயான்-1' கண்டுபிடித்தது பெரும் சாதனை- இஸ்ரோ



நிலவில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்களை "சந்திரயான்-1' செயற்கைக்கோள் கண்டுபிடித்திருப்பது மிகப்பெரும் சாதனையாகும்; எந்தநாட்டு செயற்கைக்கோள்களும் இதுபோன்ற ஆதாரங்களைத் திரட்டியதில்லை என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய (இஸ்ரோ) தலைவர் ஜி.மாதவன் நாயர் தெரிவித்தார். நிலவை ஆராய சந்திரயான்-1 என்ற செயற்கைக்கோளை இந்தியா தயாரித்து கடந்த ஆண்டு அக்டோபரில் விண்ணில் ஏவியது. நிலவின் மேற்பரப்பு, மலை முகடுகள், மண் போன்றவற்றை படம்பிடித்து அது பூமிக்கு அனுப்பியது. அந்த புகைப்படங்கள், தகவல்களை "நாசா' விஞ்ஞானிகளுடன் சேர்ந்து இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். அப்போது, நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை சந்திரயான் சேகரித்து அனுப்பியிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதுகுறித்து இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது: இதுவரை நிலவை ஆராய்ந்த மற்றும் ஆராய்ந்து வரும் பிற நாடுகளின் செயற்கைக்கோள்கள், நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தடயங்களை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் இந்தியாவின் சந்திரயான் முதன்முதலாக நிலவில் தண்ணீர் இருப்பதற்கான உறுதியான தடயங்களை கண்டுபிடித்து அனுப்பிவைத்துள்ளது. இது நிலவு தொடர்பான உலக நாடுகளின் ஆராய்ச்சியில் மிகப்பெரும் சாதனையாகும். நிலவு ஆராய்ச்சி வரலாற்றில் மைல்கல் ஆகும். சந்திரயான் செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டிருந்த நாசாவின் கனிம வளங்களை ஆராயும் முக்கிய கருவி நிலவில் தண்ணீர் இருப்பதற்கான தகவல்கள், தடயங்களை சேகரித்து அனுப்பியுள்ளது. இவற்றை அமெரிக்காவில் உள்ள ஜெட் ஆய்வகத்திலும் ஆமதாபாத்தில் உள்ள விண்வெளி ஆய்வகத்திலும் ஆராய்ந்தபோது இது உறுதி செய்யப்பட்டது. இதுகுறித்தும் சந்திரயான் அனுப்பிய முக்கிய தகவல்களையும் வெள்ளிக்கிழமை நாட்டு மக்களுக்கு இஸ்ரோ அறிவிக்கும். நாசா விஞ்ஞானிகளும் அறிவிப்பார்கள் என்றார் மாதவன் நாயர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக