11 ஜூலை, 2011

கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டின் முன்னால் மலர்வளையங்கள், சுடலைச் சாம்பல் மதிலில் அஞ்சலி தெரிவித்து வாசகங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களது இல்லங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் சுவரொட்டிகளை அகற்றுவது போன்ற அநாகரிக செயற்பாடுகள் யாழ். குடாவில் தொடர்ந்த வண்ணமுள்ளன. இம் மாதம் 23 ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை இலக்குவைத்து நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.

நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொடிகாமம் தவசிக்குளத்தைச் சேர்ந்த கூட்டமைப்பு வேட்பாளர் கந்தையா அசோகலிங்கம் என்பவரது வீட்டுக்குச் சென்ற இனந்தெரியாத நபர்கள் சுடலையில் வைக்கப்பட்டிருந்த மலர் வளையங்களை எடுத்துவந்து வீட்டின் முன் எறிந்துள்ளதுடன் சுடலை சாம்பலையும் வீட்டின் முற்றத்தில் வீசி, கண்ணீர் அஞ்சலி செலுத்தும் வகையிலான வாசகங்களை மதில்களில் வரைந்து சென்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் தொடர்பாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யயப்பட்டுள்ளது.

இதேவேளை இவரது வீட்டிற்கு கடந்த வாரம் இரவு வேளைகளில் கற்களால் எறிந்துள்ளதாகவும் குறித்த வேட்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை வல்வெட்டித்துறையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உள்ளூராட்சி வேட்பாளருமான எம்.கே சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீது வாய்க்கால் கழிவுகள் இனந்தெரியாத நபர்களினால் எறியப்பட்டுள்ளது. அன்றைய தினம் வலி. மேற்கு பிரதேச சபை வேட்பாளர் ஐங்கரன் நாகரஞ்சினியின் வீட்டிலும் இவ்வாறான கழிவொயிலை ஊற்றிவிட்டு நபர்கள் தப்பிச்சென்றுள்ளதாகவும் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் பல்வேறு இடங்களில் நடைபெற்றுள்ளதாகவும் ஆனால் வேட்பாளர்கள் அதை முறையிட தயங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக