5 ஜூலை, 2011

பாதாள உலகக் கோஷ்டித் தலைவர் துப்பாக்கிச் சூட்டில் பலி

சூரியவௌ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பாதாள உலகக்கோஷ்டித் தலைவரான நெலுவ பிரியந்த கொல்லப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினமிரவு நடைபெற்றுள்ளது.

சுமார் 25 கொலைச் சம்பவங்கள் உட்பட பல்வேறு கடத்தல், கப்பம் பெறல் மற்றும் போதைப் பொருள் வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர் புடைய மேற்படி சந்தேக நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை காலை கைதுசெய்யப்பட்ட நிலையில் தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரால் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஆயுதங்கள் சிலவற்றை கைப்பற்றுவதற்காக சூரியகந்த பிரதேசத்துக்கு நேற்று முன்தினம் இரவு சந்தேக நபர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

அங்கு அவர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியொன்றினால் அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முற்பட்டதாகவும் இதனையடுத்து அதிரடிப்படையினர் நடத்திய பதில் துப்பாக்கி பிரயோகத்தில் அவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் சூரியவௌ வைத்தியசாலையில் அனும திக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸ் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சூரியவௌ பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் நபரின் சடலம் தற்போது சூரியவௌ வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக