21 ஜூன், 2011

கனிமொழியின் பிணைமனுவை உச்சநீதிமன்றிலும் நிராகரிப்பு




2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் வைக்கப்பட்டுள்ள இந்திய நாடாளு மன்ற உறுப்பினரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மற்றும் கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோரின் பிணை மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.

நீதிபதி ஜி.எஸ். சிங்வி தலைமையிலான இந்திய உச்ச நீதிமன்றின் விசேட நீதிபதி கள் குழாமொன்று நேற்று திங்கட்கிழமை இம்மனுவை நிராகரித்தது. அதனால் கனிமொழி, சரத்குமார் ஆகியோர் இப் போதைக்கு சிறையிலிருந்து வெளிவருவது கேள்விக்குறியாகியுள்ளது.

எனினும் வழக்கை விசாரிக்கும் நீதி மன்றில் புதிய பிணை மனுவை தாக்கல் செய்வதற்கு கனிமொழிக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபா பணம் தொலைத் தொடர்பு அமைப்பொன்றினால் வழங்கப்பட்டமை குறித்த விசாரணைக்காக சி.பி.ஐ. பொலி ஸார் கலைஞர் ரி.வி. நிர்வாக இயக்குநர் சரத்குமாரையும் அதன் பணிப்பாளர்களில் ஒருவரான கனிமொழியையும் கைது செய்தனர்.

2ஜி ஸ்பெக்ட்ரம் மோசடியில் கிடைத்த இலாபத்திற்கான லஞ்சமாக மேற்படி 200 கோடி ரூபா கலைஞர் ரிவிக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இந்த ஊழலில் பிரதான சந்தேக நபரான தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவும் டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக