7 மே, 2011

தமிழ் அரசியல் கைதிகளுடன் கூட்டமைப்பு எம்.பி.க்கள் சந்திப்பு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கப்படும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுதியளித்துள்ளனர்.

கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலைக்கு நேற்று தமிழ் தேசி யக் கூட்டமைப்பின் 8 எம்.பி. க்கள் விஜயம் செய்து அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதன் போதே எம்.பி.க்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. க்களான சுரேஸ் பிரேமச்சந்திரன்,பா.அரியநேத்திரன், சட்டத்தரணி சுமந்திரன்,பொன். செல்வராசா, சீ.யோகேஸ்வரன்,ஸ்ரீதரன், சரவணபவன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் சிறைச்சாலைக்கு விஜயம் செய்தனர்.

சந்திப்பின்போது சகல சிறைச்சாலைக்குள்ளேயும் அவர்களினதும் அவர்களின் குடும்பங்களினதும் நலன்புரி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு நலன்புரிச் சங்கத்தை ஒருவாக்குவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்ட போது, ஏனைய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் ஆராய்ந்த பிற்பாடு இதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டமைப்பால் பதிலளிக்கப்பட்டது.

சகல அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கைதிகள் கேட்டுக் கொண்டனர். அரசுடனான அரசியல் தீர்வு விடயமாகப் பேச்சை ஆரம்பித்த அன்றே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக பேசியதாகவும் தொடர்ந்து அரசுக்கு அழுத்தம் கெடுக்கப்படும் எனவும் கூட்டமைப்பு எம்.பி.க்கள் உறுதியளித்தனர்.

அரசியல் கைதிகளை காரணமின்றி தடுத்து வைத்திருப்பது தொடர்பாக அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்வதற்கு சட்டத்தரணி சுமந்திரன் உதவி செய்தல் வேண்டும் என கைதிகள் கேட்டுக் கொண்டனர். இதற்கு வேண்டிய உதவியை தான் செய்வதாக சட்டத்தரணி சுமந்திரன் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

சிறைச்சாலைக்கான விஜயம் குறித்து கருத்துத் தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன் எம்.பி இது தொடர்பில் கூறியதாவது,

யுத்தம் முடிவடைந்ததும் தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டுமென நாம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தோம். ஆனால் அதற்கு இதுவரையிலும் எமக்குப் பதில் கிடைக்கவில்லை.

கொழும்பு, நீர்கொழும்பு, கண்டி, போகம்பரை ரஜ வீதி, மட்டக்களப்பு, திருகோணமலை,பதுளை, அனுராதபுரம், யாழ்ப்பாணம், வவுனியா, வெலிக்கடை என பல்வேறு சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக எவ்வித விசாரணைகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களில் இளைஞர், யுவதிகள் மற்றும் 55, 60,70 வயது முதியவர்கள் வரை இருக்கின்றார்கள். இவர்கள் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமல் இருப்பது கவலையளிக்கிறது.

நேற்று காலை 9 மணியிலிருந்து சுமார் இரண்டரை மணித்தியாலங்கள் புதிய மகசீன் சிறைச்சாலையின் தமிழ் அரசியல் கைதிகளையும் நாம் சந்தித்து பேசினோம். அவர்கள் தமது கவலைகளை எம்முடன் பகிர்ந்து கொண்டார்கள். அத்தோடு தமிழ் தேசியக் கூட்டமைப்பு சமூக நலன் அமைப்பு மையம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக