7 மே, 2011

நல்லிணக்க ஆணைக்குழுவின் காலத்தை நீடிக்குமாறு கோரிக்கை

கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாட்டுக் காலத்தை மேலும் ஆறுமாதங்களுக்கு நீடிப்பதற்கான கோரிக்கை, கடிதம் மூலம் அரசாங்கத்திடம் விடுக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் கால எல்லையை ஆறுமாதங்களினால் நீடிப்பதற்கு அரசாங்கத்திடம் இருந்து அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாகவும் கால நீடிப்புக்கான காரணங்கள் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இவ்விடயம் தொடர்பில் நல்லிணக்க ஆணைக்குழுவின் உயர் அதிகாரி மேலும் குறிப்பிடுகையில்:

நல்லிணக்க ஆணைக்குழு கடந்த காலங்களில் கொழும்பு மற்றும் வெளிமாவட்டங்களில் பெற்றுக்கொண்ட சாட்சியங்களை ஆய்வு செய்து வருகின்றது.

அத்துடன் இறுதி பரிந்துரைகளை தயாரிப்பதற்கான முதற்கட்ட வரைபும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதி நாம் இறுதி அறிக்கையை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க ஏற்பாடாகியிருந்தது.

ஆனால் மிகவும் அதிகளவான சாட்சியங்களை ஆய்வு செய்யவேண்டியுள்ளதால் மே மாதம் 15 ஆம் திகதிக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க முடியாத நிலைமை காணப்படுகின்றது.

எனவே நல்லணிக்க ஆணைக்குழுவின் கால எல்லையை மேலும் ஆறுமாத காலத்தினால் நீடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.

கடந்த புதன்கிழமை இது தொடர்பான கோரிக்கைக் கடிதம் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கால எல்லை நீடிப்புக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

நல்லிணக்க ஆணைக்குழு கொழும்பு நகரில் பிரதான விசாரணை அமர்வுகளை நடத்தியிருந்ததுடன் வெளிமாவட்டங்களிலும் விசாரணை அமர்வுகளை நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக