11 மே, 2011

இந்தியாவின் உதவியுடன் ஐ.நா.வின் அறிக்கைக்கு முகம் கொடுக்க வேண்டும்: ரட்ணசிறி

இலங்கை மீதான அந்நிய நாடுகளின் தலையீடுகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையின் சவால்களுக்கு இந்தியாவின் உதவியுடன் முகம் கொடுப்பதே சிறந்த வழியாகும் என்று முன்னாள் பிரதமரும் நல்லாட்சி மற்றும் உட்கட்டமைப்பு சிரேஷ்ட அமைச்சருமான ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

அத்தோடு ஏனைய தோழ நாடுகளுடன் வலுவான நட்புறவை ஏற்படுத்தி இலங்கை தனது எதிர்காலத்தை பாதுகாப்பானதாக?? அமைத்துக் கொள்ளும் நாட்டின் முன்னுள்ள போர் குற்றச்சாட்டுக்களும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளும் பிரிவினைவாத சக்திகளால் சோடிக்கப்பட்ட விடயங்களாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக முன்னாள் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தொடர்ந்தும் கூறுகையில்,

யுத்தத்தின் இறுதிக்காலப் பகுதியிலும் அதற்கு பின்னரும் இலங்கை மீதான சர்வதேசத்தின் தலையீடுகளும் அழுத்தங்களும் மிகவும் அதிகமானதாகவே காணப்பட்டன.

குறிப்பாக யுத்தத்தின் இறுதி நாட்களில் வடக்கில் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த வெற்றிகளுடன் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த மேற்குலக நாடுகள் வெளிப்படையாக செயற்பட்டன, இவ்வாறான தலையீடுகளுக்கும் அழுத்தங்களுக்கும் அன்று அடிப்பணிந்திருந்தால் யுத்தத்தை வெற்றிக் கொள்ளவோ நாட்டில் தற்போதுள்ள சமாதானத்தை அனுபவிக்கவோ முடியாமல் போயிருக்கும்.

பான் கீ மூனின் நிபுணர் குழுவினர் பக்கச் சார்பான ஆதாரங்களைப் பெற்றுக் கொண்டு வீண் பழியையும் தீரா அபகீர்த்தியையும் இலங்கைக்கு ஏற்படுத்தி விட்டனர். இதனை உறுதிப்படுத்தி சர்வதேச நீதிமன்றின் தண்டனையை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சர்வதேசத்தில் பல தரப்புகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்த முயற்சிகளை முறியடித்து நாட்டின் இறையாண்மையை உறுதிப்படுத்துவதே தற்போது இலங்கைக்கு முன்னுள்ள பாரிய சவாலாகும்.

இந்தச் சவாலை எதிர்கொள்ள இந்தியா உள்ளிட்ட இலங்கையின் மிகநெருங்கிய தோழ நாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். தனியாக நிபுணர் குழுவின் அறிக்கைக்கோ சர்வதேச சூழ்ச்சிகளுக்கோ முகம் கொடுப்பது என்பது இயலாத காரியமாகும். எனவே உள்நாட்டிலும் பாரிய எதிர்ப்புகளை ஐ.நா. அறிக்கைக்கு எதிராக உருவாக்க வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக