7 பிப்ரவரி, 2011

தன்னை சோதனைக்குட்படுத்திய பொலிஸாருக்கு ஜனாதிபதி பாராட்டு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டின் தலைவராக சாதி, மத, குல, மொழி, பிரதேச பேதமின்றி இந்நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காக நல்லாட்சி புரிந்து வருகின்றார். மஹிந்த ராஜபக்ஷ என்ற மனிதருக்கும் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கின்றது.

சமீபத்தில் ஜனாதிபதி அவர்கள் அமெரிக்காவில் வாழ்ந்து வரும் தனது இளைய சகோதரரான டட்லி ராஜபக்ஷவை சந்தித்து, அவரது இல்லத்தில் சில நாட்கள் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தனது தனிப்பட்ட சகோதர பாசத்தின் நிமித்தம் அமெரிக்காவுக்கு சென்றிருந்தார்.

இந்த தனிப்பட்ட விஜயத்தை பயன்படுத்தி இன்று அரசியலில் செல்லாக்காசாகி இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியினரதும், ஜே. வி. பி. யினரதும் கைப்பொம்மைகளாக செயற்படும் பொய்யிலேயே வாழ்ந்து கொண்டிருக்கும் சில இணையத்தளங் களும், சில வெளியீடுகளும் ஜனாதிபதியைப் பற்றி அவதூறான பொய் வதந்திகளை இந்நாட்டிலும், வெளிநாட்டிலும் பரப்பி ஒரு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி, எதிர்க்கட்சியினருக்கு சமீபத்தில் நடத்தப்படவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் அரசியல் லாபத்தை பெற்றுக் கொடுப்பதற்கு எடுத்த முயற்சிகள் இப்போது தவிடு பொடியாகி விட்டது.

தேசத்திற்கு மகுடம் கண்காட்சியை புத்தல நகரில் திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், தான் சுகதேகியாக இருப்பதாகவும், எதிர்க் கட்சியைச் சேர்ந்த சில மனநோயாளிகளே நான் பயங்கர நோயினால் பீடிக்கப்பட்டு உயிராபத்தில் இருக்கிறேன் என்ற வதந்திகளை கிளப்பிவிட்டு எதிர்க்கட்சியினருக்கு அரசியல் இலாபம் பெற்றுக் கொடுக்க எத்தனிக்கிறார்கள் என்று கண்டனம் தெரிவித்தார்.

நான் ஒரு நேர்மையான ஜனநாயகவாதி. நான் எதிர்க் கட்சியைச் சார்ந்தவர்களோ, அல்லது என்னுடைய ஆளும் கட்சியைச் சார்ந்தவர்களோ பாராளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கக் கூடிய வகையில் அரசியல் நடத்த வேண்டும் என்ற கருத்தை எனது வாழ்க்கையில் கடைப்பிடித்து வருவதுடன் இந்நாட்டிலுள்ள சகல அரசியல்வாதிகளும் இந்த ஜனநாயக உரிமையை சீர்குலைத்து விடாதவாறு அவதானமாக அரசியல் நடத்த வேண்டும் என்பதில் அதிகம் ஆர்வம் கொண்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.

அரசியலில் என்னை எதிர்ப்பவர்கள் தேர்தல் களத்தில் என்னுடைய கட்சியுடன் நேர்மையான தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்று பதவிக்கு வருவதை நான் எதிர்க்கமாட்டேன்.

அவ்விதம் எதிர்க் கட்சியினர் செயற்பட்டால் தான் எங்கள் நாட்டில் பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கும். அதைவிடுத்து, இவ்விதம் வதந்திகளை பரப்பி, அரசியல் இலாபம் திரட்ட எத்தனிக்கும் எதிர்க்கட்சியினரை பார்க்கும் போது எனக்கு மனவேதனையை தருகிறது என்று ஜனாதிபதி தெரிவித்தார். இவ்விதம் போலியான அரசியல் பிரசாரங்களை நடத்தி, நாட்டிற்கு துரோகம் இழைப்பதை எதிர்க் கட்சியினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.

வதந்திகள் மூலம் அரசியல் இலாபம் அடைய எத்தனிப்பவர்கள் சாதாரண நோயாளிகளை விட நாட்டிற்கு தீங்கு இழைக்கக் கூடிய மோசமான மனநோயாளி களாக இருக்கிறார்கள்.

அவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக நான் வேண்டுமா னால், ஒரு விசேட மனநோயாளிகள் ஆஸ்பத்திரியைக் கூட திறக்க தயங்க மாட்டேன் என்றும் ஜனாதிபதி கூறினார்.

ஜனாதிபதி என்ற முறையில் மஹிந்த ராஜபக்ஷ என்ற இந்த நல்ல மனிதர் பாதுகாப்பின் நிமித்தம் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் கூட, தியாகம் செய்திருக்கிறார். இவர், சாதாரண பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்த போது, அதிகாலையில் எழுந்து தன்னந்தனியாக வீதிகளில் ஓடி, உடற்பயிற்சியை நாளாந்தம் செய்யும் பழக்கத்தை உடையவர். இன்று, பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த சுதந்திரத்தை இழந்துள்ள ஜனாதிபதி அவர்கள், தனது வாசஸ்தலத்திலேயே உடற்பயிற்சியை காலையில் செய்யும் நிர்ப்பந்த நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஜனாதிபதி அவர்கள் எவ்வளவு உயர் பதவி வகித்து, அதிகாரம் படைத்த மனிதராக இருந்தாலும், தனது நண்பர்கள் ஏழைகளாக இருந்தாலும், செல்வந்தர்களாக இருந்தாலும்கூட, என்றுமே மறப்பதில்லை. தன்னுடைய நெருங்கிய நண்பர்களுடன் அவர் அதிகாலையில் தனது வேலைப்பளு ஆரம்பிப்பதற்கு முன்னர், தொலைபேசியில் உரையாடி குசலம் விசாரிக்கவும் அவர்களின் பிறந்த தினத்தன்று, தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்து, அவர்களின் இல்லங்களுக்கு பிறந்த நாள் கேக்கையும் பூங்கொத்தையும் அனுப்பவும் தவறுவதில்லை.

ஊர் ஓய்ந்த பின்னர், பண்டைக்காலத்தில் மன்னர்கள் மாறுவேடத்தில் நகர சஞ்சாரம் செய்து நாட்டு மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதைப் போன்று, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களும், தன்னுடைய காரை தானே ஓட்டிச் சென்று நாட்டின் நிலைமையை ஆராய்ந்து பார்ப்பதுடன், தன்னுடைய நண்பர்கள், உறவினர்களின் இல்லங்களுக்கும் முன்னறிவித்தல் செய்யாமல், திடீரென்று தனது காரில் தன்னந்தனியாக சென்று போய் இறங்கி, அவர்களுடன் நீண்ட நேரம் உரையாடி விட்டு, தனது வாசஸ்தலத்திற்கு திரும்புவதுண்டு.

இவ்விதம், ஒரு நாள் இரவு ஜனாதிபதி காரை ஓட்டிச் செல்லும் போது, வீதிச் சோதனையில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காரை நிறுத்தி, கார் சாரதியின் அனுமதிப்பத்திரத்தை கேட்டு பரிசோதித்த போது, காரில் அமர்ந்திருப்பவர் நாட்டின் ஜனாதிபதி என்பதை அடையாளம் கண்டு, ஜனாதிபதியிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். அதற்கு ஜனாதிபதி நீங்கள் என்னிடம் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை. நீங்கள் உங்கள் கடமையை சரியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நல்ல நேர்மையான பொலிஸ் உத்தியோகத்தர் என்று பாராட்டியிருக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக