7 பிப்ரவரி, 2011

பாதிக்கப்பட்டோர் தொகை 13 இலட்சம்; 11,000 வீடுகள் சேதம்; 700 முகாம்கள் கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம்

தொடர்ச்சியாகப் பெய்துவரும் மழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு காரணமாக 3 லட்சத்து 65 ஆயிரத்து 536 குடும்பங்களைச் சேர்ந்த 12 லட்சத்து 57 ஆயிரத்து 366 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதிப் கொடுப்பிலி நேற்றுத் தெரிவித்தார்.

வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்களில் 88 ஆயிரத்து 35 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 25 ஆயிரத்து 448 பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறி 676 முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வெள்ளம், மண்சரிவு காரணமாக முழுமையாக அழிவுற்றுள்ள வீடுகளின் எண்ணிக்கை 1385 ஆக அதிகரித்துள்ளதாகவும் 9664 வீடுகள் பகுதியளவில் சேதமடைந் திருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை தற்போதைய மப்பும், மந்தாரத்துடன் கூடிய மழைக்காலநிலை அடுத்துவரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் கயனா ஹெந்தவித்தாண கூறினார்.

இலங்கைக்கு அருகில் தென்கிழக்கு கடலில் மீண்டும் தாழமுக்கம் உருவாகி இருப்பதன் விளைவாகவே தற்போதைய மழைக் காலநிலை தொடருவதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய மழைகால நிலையின் விளைவாக கிழக்கு, தென்கிழக்கு, மன்னார் குடா கடற்பரப்புக்கள் கொந்தளிப்பாகக் காணப்படுகின்றது. மீனவர்கள் முன்னெச்சரிக்கையோடு கடற்றொழிலில் ஈடுபட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

நேற்று முன்தினம் முதல் மழை வீழ்ச்சி குறைவடையத் தொடங்கிய போதிலும் இலங்கைக்கு அருகில் திரும்பவும் அமுக்க நிலை உருவாகி இருப்பதால் மழைக் காலநிலை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடுப்பிலி மேலும் குறிப்பிடுகையில், தொடராகப் பெய்துவரும் மழை காரணமாக நாட்டிலுள்ள 16 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை, அனுராதபுரம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, பதுளை ஆகிய மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

வெள்ளம் காரணமாக திருமலை மாவட்டத்தில் 87 ஆயிரத்து 191 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 24 ஆயிரத்து 556 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 21 ஆயிரத்து 220 குடும்பங்களைச் சேர்ந்த 78 ஆயிரத்து 510 பேர் 176 முகாம்களில் தங்கியுள்ளனர்.

ம்பாறை மாவட்டத்தில் 74 ஆயிரத்து 432 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 82 ஆயிரத்து 686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6558 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 923 பேர் 81 முகாம்களில் தங்கியுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 61 ஆயிரத்து 350 குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 40 ஆயிரத்து 336 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 ஆயிரத்து 19 குடும்பங்களைச் சேர்ந்த 94 ஆயிரத்து 354 பேர் 197 முகாம்களில் தங்கியுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொலன்னறுவை மாவட்டத்தில் 6124 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 739 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் 6247 குடும்பங் களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 631 பேர் 68 முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மாவட்டத்தில் 20 ஆயிரத்து 789 குடும்பங்களைச் சேர்ந்த 79 ஆயிரத்து 43 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 6513 குடும்பங்களைச் சேர்ந்த 24 ஆயிரத்து 876 பேர் 79 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை அனுராதபுரம், பொலன்னறுவை, வவுனியா, கிளிநொச்சி, மட்டக்களப்பு, பதுளை, அம்பாறை, திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலுள்ள குளங்களும், நீர்த்தேக்கங்களும் நிரம்பி வழிவதுடன், இவற்றின் வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதன் விளைவாக வடமத்திய கிழக்கு மாகாணங்களின் பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீரில் முழுமையாக மூழ்கியுள்ளன.

இம் மாவட்டங்களில் மக்களின் இயல்வு வாழ்வும் வாகனப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளிலும், நிவாரண நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக