7 பிப்ரவரி, 2011

தேசத்துக்கு மகுடம்: காட்சிக் கூடங்களில் மக்கள் திரள்; 6 இலட்சத்துக்கும் அதிகமானோர் வருகை

தேசத்திற்கு மகுடம் 2011 தேசிய அபிவிருத்தி கண்காட்சியை பார்வையிடவென மூன்றாவது நாளான நேற்று மாலை வரை சுமார் ஆறரை இலட்சத்துக்கும் அதிகமான பொது மக்கள் வருகைதந்துள்ளதாக தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சரும் கண்காட்சி ஏற்பாட்டுக்குழுத் தலைவருமான ரஞ்சித் சியம்பலா பிட்டிய தெரிவித்தார்.

மிகவும் பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சியை பார்வையிடவென வடக்கு, கிழக்கு உட்பட நாட்டின் சகல பாகங்களிலிருந்தும் பெருந்திரளான மக்கள் வருகைதருவதை காணக்கூடியதாக உள்ளது.

நாட்டின் வரலாறு அரசாங்கம் முன்னெடுத்துவரும் பாரிய அபிவிருத்தி பணிகள், எதிர்காலத்திட்டங்கள் சித்தரிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள காட்சி கூடங்களை பார்வையிட மக்கள் மிகவும் ஆர்வத்துடன் கலந்து கொள்வதை காணக்கூடியதாக உள்ளது.

கல்வி, உயர் கல்வி, தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான பல்வேறு காட்சிக் கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளதால் பாடசாலை, பல்கலைக்கழக மாணவ, மாணவிகளின் வருகையையும் அதிகம் காணக்கூடியதாக உள்ளது.

மொனராகலை மாவட்டத்திலுள்ள, புத்தலையில் நடைபெற்று வரும் இக்கண்காட்சியை பார்வையிட வரும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு சகல வசதிகளையும் அரசாங்கம் செய்து கொடுத்துள்ளது.

பாடசாலை மாணவ, மாணவிகளுக்கும், அதிபர், ஆசிரியர்களுக்கும் முற்றிலும் இலவசமாக அனுமதிப்பத்திரங்கள் இன்றி இக்கண்காட்சியை கண்டுகழிக்க சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

வெளி மாவட்டங்களிலிருந்து வருபவர்கள் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு கண்காட்சி பிரதேசத்திற்கு இலகுவாக அழைத்துவரும் பொருட்டு விசேட இலவச பஸ் சேவையை இலங்கை போக்குவரத்து சபை ஏற்பாடு செய்துள்ளது.

இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய காட்சிக்கூடங்களையும் சாகசங்களை யும் பார்வையிட அதிகம் மக்கள் வருகை தந்திருந்தமையைக் காணக் கூடியதாக இருந்தது. மாலை நேரங்களில் ஊடக வலய பகுதியை பார்வையிட மக்களின் எண்ணிக்கை அதிகமாகவே காணக்கூடியதாக இருந்தது.

160 ஏக்கர் நிலப்பரப்பில் சுமார் 2000 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

சுதந்திர தினத்தன்று உத்தியோகபூர்வமாக கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இரண்டாவது நாளாகிய நேற்று முன்தினமும் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு விவசாய அமைச்சு, இராணும், விமானப்படை, கடற்படை, பொலிஸ், விசேட அதிரடிப்படை, சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகிய காட்சி கூடங்களுக்குச் சென்று பார்வையிட்டதுடன் அங்கு வருகைதந்திருந்த பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் மத்தியில் உரையாடினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக