28 ஜனவரி, 2011

சிறுபான்மைக் கட்சிகள் தனித்தும் இணைந்தும் போட்டி






மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டணிகளாகவும், சுயேச்சைகளாகவும் இணைந்தும் தனித்தும் போட்டியிடுகின்றன.

அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளாக உள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகள் தனித்துப் போட்டியிடுவதுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிடுகின்றது.

வடக்கு, கிழக்குப் பகுதிகளில் இலங்கை தமிழரசுக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், பிரஜைகள் முன்னணி ஆகிய கட்சிகள் தனித்து களமிறங்கியுள்ளன.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆளுந்தரப்புடன் இணைந்து போட்டியிடுகின்றது. ஏறாவூர், காத்தான்குடி நகர சபைகள், ஓட்டமாவடி பிரதேச சபை ஆகியவற்றில் இந்தக் கட்சி இணைந்து போட்டியிடுவதாக அதன் தலைவர்களுள் ஒருவரான பிரதியமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

இதேவேளை, இந்த மூன்று உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு போட்டியிடுவதுடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஓட்டமாவடி பிரதேச சபையில் தனித்தும், ஏறாவூர் நகர சபையில் சுயேச்சையாகவும் போட்டியிடுகின்றது.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது வேட்பாளர்களை களம் இறக்கியிருப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பிரஜைகள் முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, ஆளும் அரசாங்க கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தமது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தன. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வவு னியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் நேற்று வியாழக்கிழமை வேட்பு மனுவை வவுனியா தேர்தல் காரியா லயத்தில் தாக்கல் செய்தது.

ன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உனைஸ் பாறூக் வேட்பு மனுவை தாக்கல் செய்ய மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார். முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய், புதுக்குடியிருப்பு, கரைதுறைபற்று ஆகிய மூன்று பிரதேச சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பு மனுவை நேற்றுக் காலை கையளித்துள்ளது.

முக்கியமான தேர்தலாக இது அமைந்துள்ளதினால் அபிவிருத்தியை பிரதான நோக்கமாகக் கொண்டு நாம் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றோம். சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் சனநாயகக் கட்சி, ஈரோஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடைய பிரதிநிதிகள் இந்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என குறிப்பிட்ட பாறூக் எம்.பி. இன ஐக்கியமும் ஜனநாயகமும் கட்டியெழுப்ப முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அத்தோடு இந்த அரசாங்கத்தின் மீது மக் கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என் பதினை தேர்தல் பெறுபேறுகள் எடுத்துக் காட்டும் எனவும் சொன்னார். அதேநேரத்தில் நேற்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வவுனியா தமிழ் பிரதேச சபைகளுக்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது. மூன்று சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன. வவுனியாவில் ஐக்கிய தேசிய கட்சி, இலங்கை தமிழரசுக் கட்சி, மக்கள் விடுலை முன்னணி ஆகியனவும் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளன.

மலையக மக்கள் முன்னணியின் வே. இராதாகிருஷ்ணன் எம்.பீ. தொழிலாளர் தேசிய முன்னணியின் பீ. திகாம்பரம் எம்.பீ, முன்னாள் எம்.பீக்கள் வீ. புத்திர சிகாமணி, எஸ். அருள்சாமி ஆகியோர் இணைந்து உருவாக்கியுள்ள மலையக தமிழ்க் கூட்டமைப்பு அம்பகமுவ, கொத் மலை பிரதேச சபைகளுக்கு மயில் சின் னத்திலும், ஏனையவற்றுக்கு மண்வெட்டிச் சின்னத்திலும் போட்டி யிடுகின்றது.

இது இவ்வாறிருக்க நுவரெலியா, லிந்துலை, தலவாக்கலை பிரதேச சபைகளுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்தக் கட்சி வேட்பாளர்களை நிறுத்திய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் குறித்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸணுக்கு தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ஏ. எல். எம். அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சி அக்கரைப்பற்று மாநகர சபைக்கும் அக்கரைப்பற்று பிரதேச சபைக்கும் மாத்திரம் தனித்துப் போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் உள்ள ஏனைய உள்ளூராட்சி சபைகளுக்கு ஐ. ம. சு. மு. உடன் இணைந்து போட்டியிடுகின்றது. தனித்துவத்தை காக்கும் வகையில் தமது கட்சி இரு உள்ளூராட்சி சபைகளுக்கு தனித்துப் போட்டியிடுவதாகக் கூறியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக