28 ஜனவரி, 2011

குச்சவெளி நீர்க்கசிவுகள் பூகம்பத்தின் அறிகுறியல்ல பூகற்பவியலாளர்கள் அறிவிப்பு






குச்சவெளி பிரதேசத்தில் திடீரென நிலத்தைப் பிளந்து கொண்டு சாம்பல் நிற மண்ணுடன் நீர்க்கசிவுகள் ஏற்பட பூகம்பமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல என்று புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியக பூகற்பவியலாளர்கள் நேற்று அறிவித்தனர்.

நிலத்தடி நீர்மட்டத்தில் ஏற்பட்டிருக்கும் அதிகரிப்பு காரணமாக உருவான அமுக்கத்தின் விளைவாகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆகவே இந்நீர்க்கசிவுகள் ஏற்பட்ட பிரதேசத்தின் 50 முதல் 100 மீற்றர்கள் வரையான பகுதிக்கு தற்காலிகமாக செல்லுவதை தவிர்த்துக் கொள்ளுமாறு பிரதேசவாசிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர்கள் கூறினர்.

திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவுக்குட் பட்ட சலப்பை ஆற்றுக்கு அண்மையிலுள்ள சேற்று நிலத்தில் கடந்த சனி, ஞாயிறு தினங்களில் திடீரென சாம்பல் நிற மண்ணுடன் சுமார் 18 நீர்க்கசிவுகள் ஏற்பட்டன. இது தொடர்பாக பிரதேசவாசிகள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து அனர்த்த முகாமைத்துவ நிலையம், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம், புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்க பணியகம், பேராதனைப் பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் பீடம் என்பவற்றின் பேராசிரியர்களும், பூகற்பவியலாளர்களும் ஸ்தலத்திற்கு சென்று ஆய்வுகளையும், அவதானிப்புக்களையும் மேற்கொண்டனர்.

புவிச்சரிதவியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியக பூகற்பவியலாளர்கள் இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக விரிவான அடிப் படையில் ஆய்வுகளை மேற்கொண்டனர்.

பணியகத்தின் சிரேஷ்ட பூகற்பவியலாளர் கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ தலைமையில் பூகற்பவியலாளர் மஹிந்த செனவிரட்ன, பிராந்திய சுரங்க பொறியியலாளர் வசந்த விமலரட்ண, தொழில்நுட்ப உத்தியோகத்தர் பத்மசிறி ஆகியோர் பிரதேசவாசிகளின் ஒத்து ழைப்புடன் மேற்கொண்ட இந்த ஆய் வுக்கு தேவையான கருவிகளும் கொழு ம்பிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டன.

இந்நீர்க் கசிவுகள் தொடர்பாக மூன்று நாட்கள் தொடராக மேற்கொண்ட ஆய்வுகளை நேற்று நிறைவு செய்த இப்பூகற்பவியலாளர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

இந்நீர்க்கசிவுக்கான காரணம் குறித்து கலாநிதி ஸ்டெரின் பெர்னாண்டோ குறிப்பிடுகையில், இந்நீர்க்கசிவுக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக ஐந்து இடங்களில் வெவ்வேறு மட்டங்களில் ஆய்வுகளை மேற்கொண்டோம். நிலத்தின் மேல் மட்டத்திலிருந்து இருபது அடிகள் ஆழம் வரையும் வெவ்வேறு மட்டங்களில் இருந்து மணல், களி போன்றவற்றை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தினோம்.

இவ்வாய்வின் படி இந்த நீர்க்கசிவுக்கு பூகம்பமோ, நிலநடுக்கமோ, எரிமலை வெடிப்புக்கான முன்னறிகுறியோ காரணமல்ல. மாறாக இப்பகுதி ஊடாக ஓடுகின்ற நிலத்தடி நீரின் நீர்மட்டம் உயர்ந்ததன் விளைவாகவே இக்கசிவுகள் ஏற்பட்டிருக்கின்றன.

அதாவது இப்பகுதியில் சுமார் நான்கு, ஐந்து மீற்றர்களுக்குக் கீழாக நிலத்தடி நீரோட்டம் உள்ளது. இதில் ஏற்பட்ட அதிகரிப்பு காரணமாக அழுத்தம் உரு வாகியுள்ளது. இதனால் இந்நீரோட்டத்திற்கு மேலாக உள்ள இலகு மண் படை அமுக்கத்திற்கு உள்ளாகி வண்டல் படி வம் ஊடாக நீர்க்கசிவுகள் ஏற்பட்டி ருக்கின்றன.

இப்பகுதி ஊடான நிலத்தடி நீரோட் டத்திற்கு மேலாகக் காணப்படுகின்ற இலகு மண் படை கடந்த 3000 - 4000 வருட காலப்பகுதியில் படிந்திருக்க வேண் டும். இவ்வாறான இலகு மண்படை சிலாபம், மாதம்பை பகுதியிலும் உள்ளது. இருப்பினும் அங்கு நிலத்தடி நீரோட்டம் இல்லாததால் பிரச்சினை இல்லாதுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக