2 பிப்ரவரி, 2010


இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்




இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது ஜனாதிபதியின் தலையாய கடமையாகும்-புளொட்- நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்ச அவர்கள் பெற்ற மாபெரும் வெற்றியையிட்டு எமது வாழ்த்துக்களையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம். எமது கட்சியின் கோரிக்கையை ஏற்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களை ஆதரித்த தமிழ் மக்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இத்தேர்தலில் தமிழ்மக்கள் குறைந்தளவிலேயே மகிந்த ராஜபக்சவுக்கு வாக்களித்திருந்தாலும் இந்த நாடு முழுவதற்குமான ஜனாதிபதி அவரே என்பது யதார்த்தமாகும்.. மகிந்த ராஜபக்ச அவர்கள் தனது ஜனாதிபதி தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு நியாயமான கௌரவமான தீர்வை காண்பேன் என நாட்டு மக்களுக்கு தெரிவித்திருந்தார்.. இதற்கான ஆணையை மிகப் பெரும்பான்மையான மக்களும் வழங்கியுள்ளார்கள். எனவே இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தர தீர்வை காணவேண்டியது அவரது தலையாய கடமையாகும். இந்த இரண்டாவது ஆட்சிக்காலத்தில், ஏற்கனவே அவர் எமக்கு உறுதியளித்தவாறு இதனை நிறைவேற்றுவார் என நம்புகிறோம்.

ஆயுதப் போராட்டம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள இன்றைய நிலையில், இனப்பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய இலங்கைக்குள்தான் என்பதும் ஜனாதிபதியுடன் பேசித்தான் தீர்வு காணவேண்டும் என்பதும் இன்று சகல தமிழ் அரசியல் தலைமைகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய யதார்த்தமாகும். யுத்த இறுதிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்கள் எம் அனைவரது நெஞ்சங்களிலும் மாறாத வடுவை ஏற்படுத்தியுள்ளது. இருந்தாலும் யுத்த அழிவுகளுக்கு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை என கூறி சொல்லொணாத் துயரங்களை சுமந்து நிற்கும் எஞ்சியுள்ள எமது மக்களை தொடர்ந்தும் அவலத்துக்குள் சிக்கவைத்து சுயலாப அரசியலை மேற்கொள்ளும் தலைமைகளை இனங்கண்டு தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும்.

ஜனாதிபதி அவர்கள், ஜனாதிபதி தேர்தல் அறிவிப்புக்கு நீண்ட காலத்திற்கு முன்பே எமது கட்சிக்கு உறுதியளித்தவாறு இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம், புலிகளால் பலவந்தமாக இணைக்கப்பட்டு தற்போது தடுப்பு முகாம்களில் உள்ள சிறுவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் கையளித்தல், வடக்கு - கிழக்கிற்கு முன்னுரிமை அடிப்படையிலான அபிவிருத்தி ஆகிய விடயங்களை தொடர்ந்தும் துரித கதியில் மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

த.சித்தார்த்தன்

தலைவர்

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக