15 நவம்பர், 2010

தண்ணீர் மட்டுமல்ல சந்திரனில் வெள்ளியும் கண்டுபிடிப்பு




பூமியில் இருந்து 2 லட்சத்து 50 ஆயிரம் மைல் தூரத்தில் உள்ளது சந்திரன். மனிதர்கள் வாழ்வதற்கு மிகத் தேவையான காற்று, தண்ணீர் ஆகியவை இல்லை. எனவே, சந்திரனுக்கு செல்வது இயலாத செயல் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டது.

சமீபத்திய ஆய்வுகள் மூலம் சந்திரனில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பது அறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் மட்டும் இல்லாமல், வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட தனிமங்களும் அதிகளவில் அங்கு கலவையாக இருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் ரஷ்யா, மனிதனை சந்திரனுக்கு அனுப்ப முயற்சி செய்து வந்தன. இதில், அமெரிக்கா முதலில் வெற்றி பெற்றது. கடந்த நூற்றாண்டில், 1969ம் ஆண்டு ஜூலை 21ம் தேதி அமெரிக்க விண்வெளி வீரர் ஆம்ஸ்ட்ராங் சந்திரனில் இறங்கி சாதனை படைத்தார். இதை தொடர்ந்து, பல முறை விண்வெளி வீரர்கள், ஆளில்லாத ராக்கெட்டுகள் பறக்க விட்டு சந்திரனில் பல்வேறு சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 2008ம் ஆண்டு அக்டோபரில் சந்திரனுக்கு சந்திரயான் -1 என்ற ராக்கெட்டை இந்தியா வெற்றிகரமாக அனுப்பி சாதனை செய்தது. சந்திரனை சுற்றி வந்த சந்திரயான்-1, பல்வேறு கோணங்களில் சந்திரனை படம் எடுத்து அனுப்பியது. அதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள், சந்திரனில் தண்ணீர் உள்ளது என்று கண்டுபிடித்தனர்.இந்நிலையில், சந்திரனில் அதிகளவில் தண்ணீர் உள்ளது என்று தெரிய வந்தது. மேலும், பல்வேறு தனிமங்களும் உள்ளன என்றும், குறிப்பாக, வெள்ளி, கார்பன் டை ஆக்சைடு ஆகியவை அதிகளவில் கலவையாக இருப்பது உணர்வு செயற்கைக்கோளை கடந்த ஆண்டு சந்திரனில் மோத செய்து அதன் மூலம் எடுக்கப்பட்ட படங்களை ஆய்வு செய்ததன் மூலம் தற்போது தெரிய வந்துள்ளது.

இது குறித்து சந்திரனை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள் கூறியதாவது:சந்திரனில் லேசான ஹைட்ரோ கார்பன்கள், கந்தகம், கார்பன் டை ஆக்சைடு ஆகியவை இருப்பது உணர்வு செயற்கைக்கோள் மோதியதில் தெரிய வந்துள்ளது. சந்திரனில் காணப்படும் பெரிய பள்ளங்களில் தண்ணீர் அதிகமாக இருப்பதும், அந்த பள்ளங்களின் பரப்பில் 5.6 சதவீதம் தண்ணீர் இருக்கும் என்றும் மதிப்பிடப்படுகிறது. இதுவரை சந்திரனைப்பற்றி தெரியாத நிலையில், உணர்வு செயற்கைக்கோள் சந்திரனின் இருட்டுப் பகுதியில் மோதிய வேகத்தில் 10 கி.மீ., உயரத்திற்கு தூசிகள் கிளம்பின. இதில், உறை நிலையில் நிரந்தரமாய் தண்ணீர் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. சந்திரனின் தென் துருவப் பகுதியில் காணப்படும் "கேபஸ்' என்ற பெரும் பள்ளத்தில் இருந்து எழும் தூசிகள் குறித்த தகவல்களை அறிய உலகின் பல இடங்களில் உள்ள தொலைநோக்கிகள் செயல்பட்டு வருகின்றன. சந்திரனில் பல முறை விண்கற்கள் மோதி பெரும் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, சந்திரனில் காணப்படும் நூறு கிலோ மீட்டர் அகலம் நான்கு கி.மீ., ஆழம் உள்ள பெரும் பள்ளத்தில் ராக்கெட்டை மோத விட்டு ஆய்வு செய்ய நாசா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக 585 கிலோ எடையில் ராக்கெட் தயாரிக்கப்படுகிறது. இந்த ராக்கெட், சந்திரனில் காணப்படும் பெரும் பள்ளத்தில் இரண்டு மீட்டர் ஆழத்தில் மோதுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.இவ்வாறு விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக