15 நவம்பர், 2010

பொது மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய பரிந்துரையை ஆணைக்குழு முன்வைக்கும் : சி.ஆர்.டி. சில்வா

யாழ்ப்பாண மாவட்டத்தில் நாங்கள் மேற்கொண்ட விசாரணை அமர்வுகளின் போது பொது மக்கள் வெளியிட்ட பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடிய வகையிலான பரிந்துரையை நல்லிணக்க ஆணைக்குழு முன்வைக்கவுள்ளது. காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்கு பொதுதீர்வு காண்பது அவசியம் என்று நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவர் சி.ஆர்.டி. சில்வா தெரிவித்தார்.

கற்றறிந்த பாடங்களும் தேசிய நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அமர்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஊர்காவற்றுறையில் நடைபெற்ற போது அதனை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் நடைபெற்ற நிலையில் நேற்றைய தினம் ஊர்காவற்றுறையில் அமர்வு இடம்பெற்றது. இதில் பொது மக்கள் பலர் சாட்சியமளித்தனர். இந்நிலையில் ஆணைக்குழுவின் தலைவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்:

உங்கள் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்குத் தீர்வு வழங்குவது தொடர்பில் நாங்கள் அக்கறையுடன் இருக்கின்றோம். கடந்த நான்கு தினங்களாக யாழ். மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களுக்குச் சென்று நாங்கள் மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தோம். இன்று (நேற்று) அமர்வுகளின் இறுதிநாளாகும். இம்மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்தும் மக்கள் தங்கள் பிரச்சினைகளை எங்களிடம் எடுத்துக் கூறினர். எமது உணர்வுகளை உங்களுடன் நாங்கள் பகிர்ந்து கொள்கின்றோம்.

உங்கள் பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தக் கூடியவாறான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பாகும். காணாமற் போனோர் தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். உங்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து நாங்கள் அவற்றை மதிப்பிட்டு வருகின்றோம். இது தொடர்பில் ஜனாதிபதிக்கு பரிந்துரைகளை முன்வைப்போம். 30 வருட கால பிரச்சினைக்கு தீர்வு வழங்குவது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக