19 நவம்பர், 2010

ஜனாதிபதியின் இரண்டாவது பதவியேற்பு : தமிழ்க் கூட்டமைப்பு மகிழ்ச்சி

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்றுக்கொள்வதையிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது வாழ்த்துக்ளையும் மகிழ்ச்சியையும் தெரிவிப்பதுடன், ஏற்கனவே கலந்துரையாடப்பட்டது போன்று இணைந்துசெயற்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் இரண்டாவது பதவிப் பிரமாணம் குறித்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான இரா. சம்பந்தன் கையெழுத்திட்டு அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ இன்று தனது இரண்டாவது பதவிக் காலத்தை ஏற்றுக் கொள்வதையிட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு மகிழ்ச்சி தெரிவிக்கின்றது. அதேவேளை ஐக்கிய இலங்கைக்குள் தேசிய இனப் பிரச்சினைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு காண்பது மற்றும் வடக்குகிழக்கு பிரதேசத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் மீள்குடியேற்றம் உட்பட்ட விடயங்கள் தொடர்பில் ஏலவே கலந்துரையாடப்பட்டதற்கமைய தங்களுடன் ஒத்துழைத்து செயற்படவும் தயாராகவுள்ளது.

மேலும் இவ்விவகாரங்கள் தொடர்பில் எமக்கு அளித்த உத்தரவாதங்களுக்கு அமைய அவசியமான பொறிமுறை ஒன்றை தாங்கள் சாத்தியமானளவு விரைவாக மேற்கொள்ள நடவடிக்கை எடுப்பீர்கள் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக