1 செப்டம்பர், 2010

இந்திய அரசின் உதவிகள் இலங்கை அரசின் ஊடாகவே வழங்கப்படும்:நிருபமா ராவ்

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் இந்தியா அமைத்துக் கொடுக்கவுள்ள 50 ஆயிரம் வீடுகளில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கப்படவுள்ளதாகவும், இதற்கான மாதிரி வீட்டு வடிவம் முடிவுசெய்யப்பட்டு வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் வவுனியாவில் தெரிவித்துள்ளார். வவுனியா மெனிக்பாம் முகாமுக்கு விஜயம் செய்த நிருபமாராவ் தலைமையிலான இந்தியத் தூதுக்குழுவினர், திருமுறிகண்டி பகுதியில் இன்னும் மீள்குடியேற்றம் செய் யப்படாமல் உள்ள பொதுமக்களின் பிரதிநிதிகள் வன்னிமாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிவசக்தி ஆனந்தன் ஆகியோரைச் சந்தித்தன் பின்னர் வவுனியா செயலகத்தில் வவுனியா அரசாங்க அதிபருடன் கலந்துரையாடியதன் பின்பு மகிழங்குளம் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளையும் பார்வையிட்டனர்.

அங்கிருந்து யாழ்ப்பாணத்திற்குப் புறப்படுவதற்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய நிருபமாராவ் இந்தியா இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள வடபகுதியின் பல்வேறு வேலைத்திட்டங்களுக்கும் உதவுவதற்கு முன்வந்துள்ளதாகவும் இந்த உதவிகள் யாவும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு தெரிவித்ததாவது:

நாங்கள் மனிக்பாம் முகாமுக்குச் சென்று அங்குள்ள பொதுமக்கள் சிலரைச் சந்தித்து அவர்களுடன் பேசினோம். எங்களுடன் வடமாகாண ஆளுனர் சந்திரசிறியும் வந்திருநதார். மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து அவர் பல தகவல்களைத் தெரிவித்தார். இந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இராணுவ உயரதிகாரியும் இங்கு இடம்பெறுகின்ற மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொர்பான பல தகவல்களைத் தெரிவித்தார்.

சுமார் 2 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த மனிக்பாம் முகாமில் இப்போது 28 ஆயிரம் பேர் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதற்கு மிகுந்த ஆர்வமாக இருக்கின்றார்கள்.

இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றத்திற்கும் அவர்களது அழிந்த வீடுகளைக் கட்டிக்கொடுப்பதற்கும், வடபகுதியின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும் இந்திய அரசாங்கம் உதவி செய்வதற்கு முன்வந்துள்ளது.

இந்தியா உறுதியளித்துள்ள 50 ஆயிரம் வீடுகள் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் அமைக்கப்படவுள்ளன. இவற்றில் முன்னோடித் திட்டமாக வடக்கில் ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான மாதிரி வீட்டு வடிவத்தை இலங்கை அராசங்கத்துடன் இணைந்து இந்தியா முடிவுசெய்துள்ளது. இதேவேளைஇ மதவாச்சியில் இருந்து மன்னார் வரையிலான ரயில் பாதையையும்இ ஓமந்தையில் இருந்து பளை வரையிலான ரயில் பாதையையும் அமைத்துக் கொடுப்பதற்கு இந்தியா முன்வந்துள்ளது. இடம்பெயர்ந்த மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இந்தியா வழங்குகின்ற அனைத்து உதவிகளும் இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே வழங்கப்படும்.

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனையும், திருமுறிகண்டி பிரதேசத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களையும் சந்தித்துப் பேசினோம். திருமுறிகண்டி பகுதி மக்கள் தாங்கள் தமது சொந்த இடங்களில் மீள்குடியேறுவதையே விரும்புவதாக எங்களிடம் கூறினார்கள். இதற்கான உதவிகளைச் செய்யுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். இதையே நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனும் கேட்டார்.

திருமுறிகண்டி இந்துபுரம் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வாழ்ந்து வந்த இடத்திலேயே மீண்டும் வாழ விரும்புவதாகவும், அங்கு பல வான்பயிர்களை வைத்து சிறப்பாக வாழ்ந்து வந்ததாகவும், மீண்டும் அங்கு சென்று மீள்குடியேறுவதில் தமக்குள்ள குறைகளையும் தெரிவித்து இதனைப் போக்குவதற்கு உதவுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டார்கள் என இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக