27 ஜூலை, 2010

கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவங்களை கண்டித்து வவுனியாவில் இன்று கடையடைப்பு

வவுனியா பிரதேசத்தில் பரவலாக இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்ற கொள்ளைகள் மற்றும் ஆட்கடத்தல் சம்பவங்களைக் கண்டித்தும் அவற்றைத் தடுத்து நிறுத்தக் கோரியும் வவுனியா வர்த்தகர் சங்கம் ஒரு நாள் அடையாள கடையடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் வர்த்தகர் ஒருவர் வெள்ளை வானில் வந்தவர்களினால் கடத்திச் செல்லப்பட்டதாகவும் அவர் பின்னர் கப்பமாகப் பணம் பெற்றுக் கொண்டதன் பின்னர் விடுதலை செய்யப்பட்டதாகவும் வர்த்தக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தச் சம்பவம் வவுனியா நகரப் பகுதியில் பரபரப்பையும் வர்த்தகர்கள் மத்தியில் அச்சத்துடன் கூடிய பதட்டத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலிலேயே வவுனியா வர்த்தகர் சங்கம் கடையடைப்பிற்கான அழைப்பை விடுத்துள்ளது.

இது தொடர்பாக வவுனியா வர்த்தகர் சங்கம் வெளியிட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீண்ட காலமாக நடைபெற்ற யுத்தம் முடிவடைந்து நாட்டில் அமைதியான சுதந்திரமான சுமுகமான நிலைமை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் மீண்டும் அமைதியைக் குலைத்து அசாதாரண சூழ்நிலை ஏற்படும் வகையில் ஒரு வருடத்திற்குப் பின்னர் கடந்த 23.07.2010 வெள்ளிக்கிழமை இரவு எமது வர்த்தகர்களில் ஒருவர் கப்பம் கோரி இனந்தெரியாதவர்களினால் வெள்ளை வானில் கடத்தப்பட்டார். யுத்தம் முடிவடைந்த நிலையில் நீண்ட காலத்தின் பின் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இதைவிட நகருக்கு வெளியே பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் பல களவு கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் வர்த்தகர்களும் பொது மக்களும் அச்சமின்றி பாதுகாப்பாக வாழ வழியேற்படுத்துவதோடு இப்படியான செயல்களில் ஈடுபடும் தீய சக்திகளை இனங்கண்டு அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி பாதுகாப்பு தரப்பினரை வேண்டி நிற்கின்றோம்.

இவ்வாறான சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்க நாம் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை நடத்த தீர்மானித்துள்ளோம். அதனடிப்படையில் இன்று செவ்வாய்க்கிழமை பூரணமான கடையடைப்பு செய்து அனைத்து வர்த்தக உரிமையாளர்களும், ஊழியர்களும் எமது வர்த்தகர் சங்க அலுவலகத்தின் முன்பாக கூடி காலை 9 மணியில் இருந்து 11 மணி வரையில் அமைதியான முறையில் இரண்டு மணித்தியாலங்களை எமது எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கு வர்த்தகர்களும், வர்த்தக ஊழியர்களும், அரச, அரச சார்பற்ற நிறுவனங்களும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக