31 ஜூலை, 2010

பாகிஸ்தான் விமானம் மீது பறவை மோதியது: 421 பயணிகள் உயிர்தப்பினர்






வெள்ளிக்கிழமை பறப்பதற்கு தயாரான விமானம் மீது பறவை மோதியது. இதில் 421 பயணிகள் உயிர்தப்பினர். பாகிஸ்தான் விமான நிறுவனத்துக்கு சொந்தமான பிகே-320 விமானம் கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் 421 பயணிகளுடன் பறக்கத் தயாரானது. விமானம் ஓடுபாதையில் ஓடும் போது அதன் ஒரு என்ஜினில் பறவை ஒன்று வேகமாக மோதியது.

இதையடுத்து அந்த விமானம் உடனடியாக நிறுத்தப்பட்டு, பயணம் ரத்து செய்யப்பட்டது. விமானத்தில் இருந்து பயணிகள் அனைவரையும் இறக்கிவிட்டு பறவை மோதியதால் விமானத்தில் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பது சோதிக்கப்பட்டது. ""விமானத்தில் பறவை மோதிய போது பலத்த சப்தம் வந்தது. ஒரு என்ஜினில் இருந்து தீப் பொறியும் கிளம்பியது. விமானம் நிறுத்தப்பட்டதும் தீ அணைக்கப்பட்டது'' என்று அந்நாட்டு ஜியோ தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த 28-ம் தேதி தனியார் விமானம் இறங்கவிருந்த நேரத்தில் மலை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த 155 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்து நடந்த 3 தினங்களில் மற்றொரு விமானத்தின் என்ஜின் மீது பறவை மோதிய சம்பவம் அந்நாட்டு விமான பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக