13 ஏப்ரல், 2010

சோமாலிய கடற்கொள்ளையர்கள் 11 இந்தியர்கள் உள்பட 26 பேருடன் மேலும் ஒரு கப்பலை கடத்திச் சென்றனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் தான்சானியாவின் ஜான்ஸிபார் நகருக்கு சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை செசல்ஸ் அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென கப்பலில் வந்த கடற்கொள்ளையர்கள் சரக்குக் கப்பலை தடுத்து நிறுத்தினர். பின்னர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றனர்.

இதில் பயணம் செய்த 10 தான்சானியர்,11 இந்தியர், 5 பாகிஸ்தானியரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இவர்கள் எந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெரியவில்லை. இவர்களை மீட்க கப்பல் நிறுவனம் தொடர்ந்து முயற்சித்து வருகிறது.

இதுகுறித்து இந்திய அரசுக்கும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசும் இந்தியர்களை பத்திரமாக மீட்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சமீபத்தில்தான் 11 படகுகளில் சென்ற 120 இந்தியர்களை சோமாலிய கடற்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இதில் 5 படகையும், 67 இந்தியர்களையும் அவர்கள் திடீரென சில நாள்களுக்கு முன்பு விடுவித்தனர்.

இன்னும் 6 படகும், 67 இந்தியர்களையும் விடுவிக்கவில்லை. அவர்களின் நிலைகுறித்து தெரியவில்லை. ஆனால் அவர்கள் பத்திரமாக இருப்பதாகவும், அவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் இந்திய அரசு தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக