13 பிப்ரவரி, 2010


பொன்சேகா கைதுக்கு எதிரான மனு ஏற்பு
இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் 23-ந் தேதி விசாரணை



இலங்கை ராணுவ முன்னாள் தளபதி சரத் பொன்சேகா கைதை எதிர்த்து அவரது மனைவி அனோமா, இலங்கை சுப்ரீம் கோர்ட்டில் அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்தார். இம்மனு மீதான விசாரணை முடிவடையும்வரை, இடைக்கால ஏற்பாடாக, பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு அவர் கேட்டுக்கொண்டார். இம்மனுவை நேற்று சுப்ரீம் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மனு மீதான விசாரணை, வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது, பொன்சேகா விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, பொன்சேகாவை தற்போது சிறை வைத்துள்ள இடத்தில் இருந்து வேறு இடத்துக்கு மாற்ற மாட்டோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் அட்டர்னி ஜெனரல் உறுதி அளித்துள்ளார்.



கடற்படையினர் அழைத்துச் சென்றவர்களே காணாமல் போயுள்ளனர் : உறவினர்கள் தகவல்



மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிக எண்ணிக்கையானோர் கடற்படையினரால் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டவர்களே என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பான விபரங்களைத் திரட்டும் நிகழ்வொன்று நேற்று வெள்ளிக்கிழமை மன்னார் பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வினை வவுனியா வன்முறையற்ற சமாதான அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. இதன் போது வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு ஆணையாளர் ரோகிதவும் வருகை தந்து மக்களுடன் உரையாடினார்.

மன்னார் மாவட்டத்தில் காணாமல் போனவர்களில் அதிகமானோர் கடற்படையினரால் அழைத்துச் சென்றவர்களே என்றும் அவர்கள் குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை எனவும் உறவினர்கள் இந்நிகழ்வின்போது தெரிவித்தனர்.

கடந்த 2 வருடங்களில் மன்னார் மாவட்டத்தில் 150க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது



லண்டனில் 'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' : தலைவர் தகவல்



லண்டனில் உள்ள இலங்கை வங்கிக் கிளையை பிரதான வங்கியாக மாற்றியமைத்து அதனூடாக உலக நாடுகளில் கிளைகளைத் திறக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வங்கியின் தலைவர் கலாநிதி காமினி விக்கிரமசிங்க தெரிவித்ததாக அரச இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அச்செய்தியில்,

'இலங்கை வங்கி யூ. கே. லிமிடெட்' என்ற பெயரில் லண்டனில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கியே உலக நாடுகளில் உள்ள இலங்கை வங்கிக் கிளைகளை நிர்வாக மேற்பார்வை செய்யும் என்று தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் கிளைகளைத் திறக்க எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.

வங்கியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த கலாநிதி விக்கிரமசிங்க, தற்போது லண்டனிலிருந்து இலங்கை வங்கி ஊடாக மேற்கொள்ளப்படும் அனைத்துவித பணப்பரிமாற்றங்களுக்கும் கட்டணம் எதுவும் அறவிடப்பட மாட்டாதென்றும் குறிப்பிட்டார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கிகள் கணினிமயமாகும்

அதே வேளை, நாடளாவிய ரீதியில் செயற்பட்டுவரும் சமுர்த்தி வங்கிகளைக் கணினிமயப்படுத்த உள்ளதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி ஆர்.பி.பி. திலகசிறி தெரிவித்தார்.

கணினிகளைக் கொள்வனவு செய்வதற்கான சுற்று நிருபங்கள் சமுர்த்தி வங்கிகள் மற்றும் மகாசங்கம் என்பவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

கணினிகளைக் கொள்வனவு செய்வதுடன் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்திலிருந்து இணையத்தள வசதிகளை பெற்றுக் கொள்வதற்கான அங்கீகாரமும் வழங்கப்பட்டுள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

களனிவெளி வரை மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை : திணைக்களம் அறிவிப்பு



களனிவெளி வரையிலான ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த மட்டுப்படுத்தப்பட்ட ரயில் சேவை இன்றும் நாளையும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொட்டாவை மற்றும் ஹோமாகம ஆகிய பகுதிகளுக்கான ரயில் பாதையில் திருத்தப் பணிகள் மேற்கொள்வதன் காரணமாகவே குறித்த பகுதிக்கான ரயில் சேவையை மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

அவிசாவளையில் இருந்து இன்று காலை 6.00 மணிக்கு புறப்பட்ட ரயில் இன்று காலை 7.43 அளவில் கொட்டாவை ரயில் நிலையத்தை வந்தடைந்த பின்னர் அந்த பகுதிகளுக்கான சேவையானது நாளை பிற்பகல் வரை இடம்பெறாது என திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அவிசாவளையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது நாளை பிற்பகல் 4.10 அளவில் இடம்பெறுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு கோட்டையில் இருந்து கொட்டாவை வரையிலான ரயில் சேவையானது இன்று பிற்பகல் 2.25 மணிக்கும் கொட்டாவையில் இருந்து கொழும்பு கோட்டை வரையிலான ரயில் சேவை மீண்டும் நாளை காலை 7.43மணிக்கும் இடம்பெறுமென ரயில்வே திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது


கண்டியில் 18ஆந் திகதி அனைத்து பௌத்த பிக்குகள் மாநாடு




நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் தற்போது உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ஆம் திகதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர் என பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்ல அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை என்று அவர்கள் குறிப்பிடும் விஷயம் குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.

இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்குப் பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.

கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

அரசுடன் பேச்சு நடத்த உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை : ததேகூ



ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படவில்லை. எனினும் தாம் அழைக்கப்பட்டால் மக்களின் தேவை கருதி பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளத் தயாராக இருப்பதாக கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அழைப்பு விடுத்திருந்தார்.

இது குறித்து கருத்து தெரிவித்தபோதே துரைரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

புதமிழ்பேசும் மக்களின் நலன் கருதியே நாம் பல முக்கிய தீர்மானங்களை எடுத்து வருகிறோம். ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பிலும் எமது மக்களின் நலனையே முதன்மையாக நோக்குகிறோம். ஆகவே, உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்படும் பட்சத்தில் நிகழ்ச்சித் திட்ட அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்றார்



தமிழ் வர்த்தகரிடம் கப்பம்பெற முயன்றவர்கள் வெள்ளவத்தையில் கைது


பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர் ஒருவரிடமிருந்து 70 லட்சம் ரூபாவைக் கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் உட்பட இருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கெனக் கூறி கேட்கப்பட்டுள்ள இந்த கப்பப் பணத்தை உடனடியாக பெற்றுக் கொள்ளுமாறு பாதுகாப்பு செயலாளர் ஆலோசனை வழங்கியதாகக் கூறியே இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட மேற்படி சந்தேக நபர்களில் ஒருவர் கப்பம் கோரப்பட்ட வர்த்தகரின் உதவியாளர் எனவும் அவரே குறித்த கப்டனுக்கு வர்த்தகர் தொடர்பான தகவல்களை வழங்கியுள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க தகவல் வழங்குகையில்,

"கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரிடமிருந்து ரூ.70 லட்சத்தினை கப்பமாகப் பெற முயற்சித்த இராணுவ கப்டன் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரிடமிருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வர்த்தகரின் நிறுவனத்தில் கடமையாற்றி வந்த அவருடைய உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வர்த்தகரின் மோட்டார் வாகனத்தை மறித்துள்ள மேற்படி கப்டன், விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பிலும் அவ்வியக்கத்துடனான தொடர்புகள் குறித்துமான விசாரணைகளுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேற்படி கைதினைத் தவிர்க்க வேண்டுமாயின் 70 லட்சம் ரூபாவினை கப்பமாக வழங்க வேண்டும் என்றும் அந்தப் பணம் ஜனாதிபதியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் வர்த்தகரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அவரை விடுவித்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த வர்த்தகர் இந்த சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார். இந்நிலையில் வர்த்தகரின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ள கப்டன் உரிய பணத்தையும் எடுத்துக்கொண்டு பம்பலப்பிட்டி பிரதேசத்துக்கு வருமாறு அறிவித்துள்ளார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே சந்தேக நபரான கப்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட கப்டன் கண்டியைச் சேர்ந்தவர் என்பதுடன் பிரமுகர்கள் பயணிக்கும் சந்தர்ப்பங்களின் போது பிரதான வீதிகளின் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்குப் பொறுப்பாளராக கடமையாற்றி வந்துள்ளார்.

கைதான இருவரும் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்" என்றார்.



டிவி நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவத்தினருக்குத் தடை




நிகழ்ச்சிகளில் பங்குபற்ற இராணுவ அதிகாரிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் அவர்களை தங்களது நிகழ்ச்சிகளில் இணைத்துக் கொள்ள வேண்டாம் என சகல தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சார்பில் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தில் இராணுவ அதிகாரிகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்ட விதிமுறைகளுக்கு முரணானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இராணுவ அதிகாரிகளை இணைத்துக் கொள்வதை உரிய தொலைக்காட்சி நிறுவனங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்தை மீறும் செயலாகும்.

ஆளுமையினை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலந்துரையாடல்கள் என எந்தவொரு நிகழ்ச்சியிலும் இராணுவ அதிகாரிகள் பங்குபற்றுவதானது இராணுவ சட்டத்துக்கு முரணான செயற்பாடாகும்.

இதனையும் மீறிச் செயற்படுபவர்களுக்கு எதிராக இராணுவ சட்டத்தின் பிரகாரம் தகுந்த தண்டனைகளை வழங்க இடமுண்டு என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆலோசனைக்கமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும், அதில் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுலுகல்லவே கைச்சாத்திட்டுள்ளார்.

அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த கடிதத்தின் பிரதிகள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முப்படைத் தளபதிகள் ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.



நோர்வே-அமெரிக்க நாடுகளின் மறுப்பை ஏற்றார் வெளியுறவு அமைச்சர்



இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் குற்றச்சாட்டுக்கு நோர்வே தூதரகமும் அமெரிக்கத் தூதரகமும், அளித்த மறுப்பை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஏற்றுக்கொண்டுள்ளார்.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா, கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு நோர்வேயும் அமெரிக்காவும் நிதியுதவிகளை வழங்கியதாக கோத்தபாய ராஜபக்ச குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டை குறித்த இரண்டு நாடுகளின் தூதரகங்களும் கடுமையான தொனியில் நிராகரித்திருந்தன. அத்துடன் அந்த தூதரகங்கள் இரண்டும், நிராகரிப்பு ஆவணத்தை வெளியுறவுத்துறை அமைச்சரிடம் கையளித்திருந்தன.

இந்தநிலையில் குறித்த நிராகரிப்புகள் தமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் ரோஹித்த போகல்லாகம, இந்த விடயத்தை தொடர்ந்தும் விவாதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, சரத் பொன்சேகாவை, கைது செய்தமைக்காக தகுந்த காரணங்கள் உள்ளதாக ரோஹித்த போகல்லாகம, நேற்று வெளிநாட்டு ராஜதந்திரிகள் மத்தியில் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய இராணுவச் சட்டப்படி, இராணுவ சட்டம் இலக்கம் 17,1949 ஆம் ஆண்டுக்கமைய சரத் பொன்சேகா, கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து விலகி ஒன்றரை வருடங்களுக்கு இராணுவ சட்டத்தின் மூலம் வீரர் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியும் என்ற அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இந்தநிலையில், இராணுவ நீதிமன்றத்தில் பிரதிவாதியான சரத் பொன்சேகா தமக்காக வழக்காட எத்தனை சட்டத்தரணிகளையும் நியமிக்கலாம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். இது இராணுவ நீதிமன்ற ஒழுங்கில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக