15 பிப்ரவரி, 2010


ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் முன்வைக்கவில்லை


சரத் பொன்சேகாவுக்கு எதிராக இதுவரையில் எவ்வித குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. அவருக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் தற்போது ஈடுபட்டுள்ளன என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார்.

சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்ட பின்னரே ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இராணுவ நீதிமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன என்று ஊடகங்களில் நேற்று வெளியான செய்திகள் தொடர்பில் கேட்ட போதே இராணுவ பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இராணுவ சட்டத்தின் 129ஆவது உறுப்புரையை மீறிச் செயற்பட்டமை தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்தில் முன்று குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவுள்ளன.

இராணுவத்தினர் போர்க் குற்றச்சாட்டுக்களைப் புரிந்துள்ளனர் என ஜெனரல் பொன்சேகா வெளியிட்டிருந்த கருத்தே அவருக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள முக்கியமான குற்றச்சாட்டாக கருதப்படுகிறது என்று நேற்று வெளியான வாரப் பத்திரிகைகள் சில செய்தி வெளியிட்டிருந்தன.

அத்துடன் அண்மையில் அமெரிக்காவுக்குச் சென்றிருந்த ஜெனரல் பொன்சேகா அங்கிருந்தவாறு இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் என்றும் அதற்கான சட்சியங்களை இராணுவ அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர் என்றும் அந்த செய்திகளில் வெளியாகியிருந்தன.

இதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் கீழ் இரண்டு வழக்குகள் தொடரப்படவுள்ளன என்றும் இது தொடர்பில் சட்டத் துறையினர் கலந்தாலோசித்து வருகின்றனர் என்றும் வேறு சில செய்திகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இராணுவ சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக இராணுவ நிதிமன்றத்தில் ஒரு வழக்கும் நாட்டின் சிவில் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டுக்காக சாதாரண நீதிமன்றத்தில் மற்றுமொரு வழக்குமாக இரண்டு வழக்குகளே இவ்வாறு தாக்கல் செய்யப்படவுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

சிங்கப்பூரிலிருந்து வெளியாகும் ஸ்டேட் ரைம்ஸ் எனும் பத்திரிகைக்கு பேட்டியளித்துள்ள பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அத்துடன் ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் காணாமல் போதல் தொடர்பான 6 சம்பவங்களுடன் ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்புபட்டுள்ளார் எனும் தகவலையும் பாதுகாப்பு செயலாளர் இதன் போது வெளியிட்டிருந்தார்.

இவ்வாறு வெளியாகியுள்ள செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவித்த இராணுவ பேச்சாளர், ஜெனரல் பொன்சேகாவுக்கு எதிராக சாட்சிகளை நெறிப்படுத்துவதற்கான நடவடிக்கைளில் இராணுவமும் பாதுகாப்பு அமைச்சும் ஈடுபட்டுள்ளன என்று கூறினார்.

உரிய சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டதன் பின்னரே அவருக்கு எதிரான குற்றப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறிய இராணுவ பேச்சாளர், இராணுவ நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்படும் போது தான் விரும்பும் சட்டத்தரணிகளூடாக தன்னை நியாயப்படுத்துவதற்கான காரணங்களை முன்வைக்கவோ, மேன்முறையீடு செய்யவோ அல்லது இராணுவ நீதிமன்றத்தால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்துக்கு செல்லவோ முடியும். அதற்கான சட்ட அனுமதி ஜெனரல் பொன்சேகாவுக்கு உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.




நவநீதம் பிள்ளையின் கோரிக்கைக்கு அரசாங்கத்தினால் பதிலளிக்க முடியாது:அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா



இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை விடுத்துள்ள கோரிக்கைக்கு பதிலளிக்க முடியாது என்று ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக்கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணை ஒன்று அவசியம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது

"இது உள்நாட்டு விவகாரம் என்பதனை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை புரிந்துகொள்ளவேண்டும். ஐக்கிய நாடுகள் சபையில் அங்கம் வகிக்கும் தனிப்பட்டவர்களின் பல்வேறு நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாது என்பதனை தெரிவிக்கவேண்டும்.

அடுத்த விடயம் யாதெனில் யாரும் கோரிக்கைகளை விடுக்கலாம். பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களுக்கு மத்தியில் கோரிக்கைகள் விடுக்கப்படலாம். ஆனால் எமது கைகளிலேயே விடயங்கள் உள்ளன. இது முற்றிலும் உள்நாட்டு விவகாரம் என்பதனை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

யுத்தம் முடிந்தவுடன் இலங்கையில் யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாங்கள் அவற்றுக்கு பதிலளித்தோம். அவை அந்த சந்தர்ப்பங்களில் முடிவுக்கு வந்தன.

மேலும் ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையில் இடம்பெற்ற இலங்கை விவகாரம் தொடர்பான வாக்கெடுப்பில் இலங்கை அமோக வெற்றியீட்டியதையும் நினைவூட்டுகின்றோம்.

நிலைமை இவ்வாறு இருக்கும்போது தற்போது மீண்டும் போர் குற்றங்கள் மற்றும் சுயாதீன விசாரணைகள் என்று கோரிக்கை விடுக்கப்படும்போது அவற்றுக்கு பதிலளிக்க முடியாது என்பதனையே கூறவேண்டியுள்ளது. " எனத் தெரிவித்தார்




அன்னத்தில் போட்டியிட இணங்காவிடின் மாற்றுக் கூட்டணியில்
களமிறங்குவோம்:ஜே.வி.பி




ஜெனரல் சரத் பொன்சேகாவை சிறையில் தனிமைப்படுத்தி விட்டு அரசியல் இலாபத்திற்காக செயற்பட எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு தார்மீக உரிமை கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி இணங்கினால் "அன்னம் சின்னத்தில் ஒன்றிணைந்து போட்டியிடுவோம்' இல்லையென்றால் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிலைப்படுத்திய விரிவான மாற்றுக் கூட்டணியுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவோம் என்று ஜே. வி. பி. யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் பாஸிஸவாத போக்கும் சர்வாதிகார அடக்கு முறைகளும் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மேலோங்கியிருக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஜே. வி. பியின் விஷேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்ற போதே டில்வின் சில்வா மேற்கண்டவாறு கூறினார்.

இவர் இங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில் கூறியதாவது,

"நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலை விட எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தின் பாரியளவிலான அடக்கு முறைகளையும் ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் சந்திக்க நேரிடும். ஏனென்றால் அரசாங்கம் தனது பாஸிஸவாத போக்கை விஸ்தரித்து வருகின்றது.

இதன் வெளிபாடுகளாகவே ஜனாதிபதி தேர்தலின் பின் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவை சட்டத்தின் தேவையெனக் கூறி அரசியல் தேவைக்காக சிறை வைத்திருத்தல், எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது நீதிமன்ற வளாகத்தில் வைத்து அரசாங்கத்தின் குண்டர்கள் தாக்கும் போது பொலிஸார் மௌனமாக இருந்தமை, அதன் பின்னர் எதிர்க்கட்சிகளின் ஆதரவாளர்கள் மீது கண்ணீர்ப் புகை, தண்ணீர்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை என்பவற்றைக் கொள்ளலாம். லங்கா பத்திரிகையின் பிரதம ஆசிரியர் சிறை வைக்கப்பட்டமை, லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்தின் ஊடகவியலாளர் காணாமல் போனமை உட்பட பல்வேறு அச்சுறுத்தல்களும் அடக்கு முறைகளும் மேலோங்கியுள்ளன.

41 இலட்சத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்ற முன்னால் இராணுவத் தளபதியான ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கே இந்த நிலையென்றால் சாதாரண பொதுமக்களின் நிலை எவ்வாறு இருக்கும். எனவே அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதற்கு வலுவான ஒரு கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளினால் அமைக்கப்பட வேண்டும். ஜெனரல் சரத் பொன்சேகா தொடர்ந்தும் அன்னம் சின்னத்தினைக் கொண்ட கூட்டணி எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் களமிறங்குவதையே விரும்பினார். ஆனால் ஐ. தே. க. யானை சின்னத்தில் போட்டியிடுவதாக செய்திகள் பரவின. இது உண்மையென்றால் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அன்னச் சின்னத்தில் தொடர்ந்தும் போட்டியிட முடியாது.

எவ்வாறாயினும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் அன்னச் சின்னத்தில் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றன. தற்போதைய தேவை சின்னம் என்பதை விட நாட்டுக்கு தேவையான ஜனநாயகம் மற்றும் நல்லாட்சியே என்பதை சகலரும் கருத்தில் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்





ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என நினைப்பது தவறு : இரா.சம்பந்தன்



என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறான விடயமாகும். அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஏற்கவில்லை என்பதை தமிழ்ப் பேசும் மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒன்றாக வாக்களித்து இந்தியா உட்பட சர்வதேசத்திற்கு நிரூபித்துள்ளனர் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் எம்.பிமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.

நிரந்தர தீர்வுக்கு நாம் வலியுறுத்த வேண்டுமானால் பாராளுமன்றத் தேர்தலிலும் தமிழ்ப் பேசும் மக்கள் அதிகப்படியான வாக்குகளை அளிக்க வேண்டும். இதன் மூலம் பாராளுமன்றத்திலும் வெளியிலும் எமது நிலைப்பாட்டை உறுதியாக தெரிவித்து நிரந்தர தீர்வுக்கு வலியுறுத்த முடியும் என்றும் அவர் சொன்னார்.

இந்தியாவுடன் யுத்த சூழலிலும் அதற்குப் பின்னரும் நாம் நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றோம், எமது மக்களின் கோரிக்கைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லாது நாம் யாருக்கும் அடிபணியப் போவதில்லை. பாராளுமன்ற தேர்தலின் பின்னர் நிரந்தரமான தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாக இந்தியா எமக்கு வாக்குறுதியளித்துள்ளது. எனவே எமது மக்கள் வரும் தேர்தலில் 90 வீதம் வாக்களித்து தமது நிலைப்பாட்டை மீள உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.

திருமலையிலுள்ள அவரது வீட்டில் நேற்று நடைபெற்ற கட்சியின் ஆதரவாளர்களுடனான கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கூறினார். மாவட்டக் கிளைத் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைரெட்ணசிங்கம், தலைமையில் நேற்றுக் காலை 10.00 மணியளவில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் மேலும் பேசிய ஐ. சம்பந்தன் கூறியதாவது.

மாவட்ட ரீதியாக வேட்பாளர் தெரிவு

நாங்கள் மாவட்ட ரீதியாக வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றோம், மாவட்ட ரீதியாக மக்களால் முன்மொழியப்படும் பிரதிநிதிகள் தொடர்பாக எமது கட்சியின் உயர்பீடம் கொழும்பிலே வரும், செவ்வாய், புதன்கிழமை கூடி பிரதிநிதிகளை உறுதி செய்யவுள்ளது.

ஊடகங்கள் வாயிலாக எமது கட்சியை விட்டு மக்களைப் பிரிக்க அரசு பல்வேறு சதிகளை செய்துவருகிறது. அதனையிட்டு நாம் கவலையடையவில்லை. நாம் எமது மக்களின் கோரிக்கையில் உறுதியாகவுள்ளோம்.

நாங்கள் எமது போராட்ட வரலாற்றில் முக்கிய கால கட்டத்தில் இருக்கின்றோம். நாங்கள் ஒரு போதும் வன்முறையை விரும்பவில்லை. கடந்த 60 ஆண்டுகால போராட்டத்தில் 30 வருட காலம் ஆயுதப் போராட்டத்தை எமது இளைஞர்கள் நிகழ்த்தினார்கள். அவர்களின் தியாகத்தை நாம் மதிக்கின்றோம்.

அந்தக் காலத்தில் 94 ஆம் ஆண்டு மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் இரு சந்தர்ப்பங்கள் எமக்கு கிடைத்தன. அவை தவறவிடப்பட்டு விட்டன. ஒஸ்லோப் பேச்சுவார்த்தையில் இரு பகுதியினரும் உள்ளக சுய நிர்ணய உரிமைக்கு இணங்க வேண்டும் என்பது முடிவாகியிருந்தது. அவை துரதிஷ்டவசமாக அது கைகூடவில்லை.

ஆனாலும் நாம் மக்களின் கோரிக்கையை அரசியல் உரிமைகளைத் தாரை வார்த்து, ஒருக்காலும் செல்ல மாட்டோம். நாங்கள் ஒரு போதும் நாட்டை பிளவுபடுத்திச் செல்லவில்லை. இந்தியாவில், பிரான்சில், சுவிசர்லாந்தில் இருப்பது போன்று அந்தந்த மாநில மக்கள் அவர்களது தேவைகளை பரிபாலனங்களைச் செய்கிறார்கள்.

சுய நிர்ணய உரிமைகளே தேவை

அதேபோன்று எமது தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீகமாக வாழும் பகுதியில் உள்ள சுய நிர்ணய உரிமைகளையே நாம் கேட்கிறோம். நாம் இதனை பலமுறை பாராளுமன்றத்திலும் சர்வதேசத்திற்கும் வலியுறுத்தியுள்ளோம்.

அவற்றைப் பெற்றுக் கொள்ள எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் இணைந்து சாத்வீகமாக போராடவும் தயங்கமாட்டோம்.

சிங்கள மக்கள் நிச்சயமாக இதனை, எமது நிலைப்பாட்டை உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள். தந்தை செல்வா ஒரு காலத்தில் தெரிவித்தார், தமிழர்களின் பிரச்சினைகளை உணர்ந்து கொள்ளும் சிங்களத் தலைமைகள் இந்த நாட்டில் தோன்றவில்லை. ஆனால் அதுவரை எமது போராட்டம் தொடரும் எனத் தெரிவித்தார்.

நான் இங்கு வர முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேசிவிட்டுத்தான் வந்தேன். இத்தேர்தலில் தமிழ்ப் பேசும் மக்கள் இணைந்து ஒற்றுமையாகவுள்ளோம். அண்மையில் கல்முனையில் என்னை முஸ்லிம் மக்கள் கௌரவித்தார்கள். இது தந்தை செல்வாவினால் வளர்த்து வரப்பட்ட இக்கட்சியின் கொள்கைக்குக் கிடைத்த பாராட்டாகும்.

இன்று ஜனாதிபதி சிங்கள மக்களின் அதிகப்படியான வாக்குகளால் தெரிவாகியுள்ளார். அதனால் ஜனாதிபதி ஆட்சி, அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனைப் போன்று எமது தமிழ் பேசும் மக்களும் முழுமையான வாக்களிப்பைச் செய்து மக்களின் அந்த அதிகாரத்தைத் தர வேண்டும். அதன் மூலம் எமது உரிமைகளை கோரிக்கைகளை இந்தியா உள்ளிட்ட சர்வதேசத்திடம் உரத்துக் கேட்க முடியும்.

நீங்கள் அளிக்கும் அதிகப்படியான வாக்குகள் சிங்கள மக்கள் மத்தியில் ஒருவித உணர்வை ஏற்படுத்த வேண்டும். அதனை உறுதிப்படுத்தும் நிலைப்பாட்டை நீங்கள் தேர்தலில் காட்ட வேண்டும்.

இந்த அரசு இரகசியமான சூழ்ச்சிகரமான திட்டத்தை செயற்படுத்தி வருகிறது. அதாவது எங்கெல்லாம் சிறுபான்மை மக்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களோ, அவர்களை சிறுமைப்படுத்தி முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது. பெரும்பான்மையாக இருந்தால் தானே உரிமை பற்றி பேச முடியும்?

அரசின் முயற்சி ஒரு நாளும் பலிக்காது. அதனை எமது மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை கடந்த தேர்தலில் காட்டியுள்ளனர். இறுதியாக ஒன்றை தெரிவிக்க விரும்புகிறேன். விவேகமாக ஆளும் கட்சியுடன் சேர்ந்துதான் அடிமைகளாகி என்றாலும் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என எவராவது சிந்தித்தால் அது தவறான வழியாகும். நாம் கடும் போக்கைச் சிந்திக்காமல் தொடர்ந்து செயற்பட்டு எமது தீர்வைப் பெறுவோம், அதற்காக அனைவரும் ஒன்றுபடுவோம்




பயன்படுத்த வேண்டும்



ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்று விட்டோம் என்ற தோரணையில் ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்து மக்களின் செயற்பாடுகளை முடக்கி விட்டு அதன் மூலம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று அரசாங்கம் எண்ணுகின்றது. அது ஒருபோதும் நடக்காது. ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை உருவாக்க மக்கள் பொதுத் தேர்தலைப் பயன்படுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா சிறைவாசம் அனுபவிக்கும் அதேவேளை கே. பி. அரச பாதுகாப்பு இல்லத்தில் சுகபோகத்துடன் இருக்கின்றார். எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கோரி நாடு பூராவும் 20 க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளோம். தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.

நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது,

"ஜெனரல் சரத் பொன்சேகாவை கைது செய்தமையை எதிர்த்தும் அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் எதிர்க்கட்சிகள் பொதுமக்களுடன் இணைந்து மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களை குழப்ப அரசாங்க தரப்பினர் தாக்குதல்களை நடத்திய போதிலும் கலைந்து செல்லாமல் மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர்.

அது மாத்திரமல்லாமல் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தி அடக்கு முறையினை மேற்கொள்வதன் மூலம் ஊடக சுதந்திரத்தையும் இந்த அரசாங்கம் பறித்துள்ளது. இதன் மூலம் ஜனநாயக விரோத செயற்பாடுகளை ஊடகங்களில் வெளிவரவிடாமல் அரசாங்கம் தடுத்து நிறுத்துகிறது.

அது மாத்திரமல்லாமல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தை பெறுவோம் என அரசாங்கம் கூறி வருகின்றது. மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெறுவதை விட இவர்களால் வெற்றி பெறக் கூட முடியாது. எனவே எதிர்வரும் பொதுத் தேர்தலில் எமக்கு வாக்களித்து புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு மக்கள் முன் வர வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்களில் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் ஏற்பட்ட மோசடிகள் தொடர்பாக நாம் ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொடர்பாக தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளோம். அது தொடர்பாக விசாரணைகள் இடம்பெறும்.

அதேபோன்று கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களில் இடம்பெற்ற அசம்பாவிதங்களை கருத்திற் கொண்டு அதற்கு மாற்று வழிகளை ஏற்படுத்துவது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் நாம் கலந்தாலோசிக்கவுள்ளோம். அதன் மூலம் எதிர்வரும் தேர்தலை சுயாதீனமானதும் சுதந்திரமானதுமாக நடத்தி முடிப்பதற்கான சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும்.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிடுவதையே ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட தலைவர்கள் விரும்புகின்றனர். எனவே நாம் யானைச் சின்னத்தில் போட்டியிடுவது என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம். இருந்த போதும் எமது கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நாம் நடத்தி வருகின்றோம். அவ்வாறு மாற்று யோசனைகள் முன்வைக்கப்படுமானால் அதனை எமது செயற்குழுவை கூட்டி ஆராய்ந்தே கூற முடியும்.

இன்று நாட்டில் ஜனநாயகத்திற்கெதிரான செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. அதற்கெதிராக செயற்படுவோர்கள் தாக்கப்படுகின்றார்கள். அவ்வாறான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு கொண்டு செல்லும் ஊடகவியலாளர்களை சுதந்திரமாக செயற்பட விடாமல் அரசாங்கம் அடக்கு முறைக்குட்படுத்துகின்றது.

அதேபோன்று சுகத் ஹேலியகொட என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பாகவும் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்காது உள்ளது. எனவே ஜனநாயகத்தை பாதுகாத்து சாதாரண சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கு மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்." எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக