5 பிப்ரவரி, 2010

பலாலி விமான நிலையத்தைப் புனரமைக்க இந்தியா தீர்மானம்



பலாலி விமான நிலையத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேபோன்று நாட்டிலுள்ள துறைமுகங்களை மறு சீரமைத்துத் தரவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளதாக இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் காந்தா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

"காங்கேசன்துறை துறைமுகத்தைச் சீர்படுத்தவும், பருத்தித் துறை துறைமுகத்தை சீர்படுத்தவும் இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. அதுபோன்று, பலாலி விமான தளத்தைச் சீர்படுத்தி, மேம்படுத்தித் தரவும் இந்தியா முன்வந்துள்ளது" என்றார்.

முன்னதாக நடந்த நிகழ்ச்சியில், யாழ்ப்பாணம், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சியில் உள்ள இடம் பெயர்ந்த தமிழர்களுக்காக இந்திய அரசு வழங்கும் கூடாரம் அமைக்கத் தேவையான ஷீட்களின் முதல் தொகுதியை இலங்கை அதிகாரிகளிடம் காந்தா வழங்கினார்


தப்பிச்சென்ற இராணுவத்தினரை கைது செய்யும் நடவடிக்கை இன்று ஆரம்பம்:இராணுவப் பேச்சாளர்



இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று குறித்த கால எல்லைக்குள் சரணடையாத இராணுவத்தினரை தேடி கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

இராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்கள் சுதந்திரதினத்தன்று சரணடையும் பட்சத்தில் பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று இராணுவம் விசேட அறிவிப்பு ஒன்றை நேற்று முன்தினம் விடுத்திருந்தது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட விசேட காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையிலேயே சரணடையாதவர்களைத் தேடும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றார்.



பொதுத்தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது? விரைவில் தீர்மானம் : சதாசிவம்



தமிழ் மக்கள் அபிப்பிராயத்தின் அடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி எதிர்நோக்கவுள்ளதாக முன்னணியின் தலைவரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான எஸ். சதாசிவம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களின் கருத்தறியும் கூட்டம் நேற்று ஹட்டனில் நடைபெற்றது.இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"மலையகத் தமிழ் மக்களின் தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளை கையாளுவதற்கு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் அவசியமாகும்.

இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணி தற்போது மக்கள் மத்தியில் நம்பிக்கைக்குரிய அரசியல், தொழிற்சங்க அமைப்பாக இனங்கானப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் மலையக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் தேர்தலை சந்திக்கவுள்ளோம்.

நாம் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக மலையகமெங்கும் கட்சி உறுப்பினர்களின் கருத்தை பெற்று வருகின்றோம். இதனை அடிப்படையாக கொண்டு எதிர்வரும் வாரத்தில் இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நிர்வாக சபை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்கும்" என மத்திய மாகாண சபையின் உறுப்பினர் மேலும் சதாசிவம் தெரிவித்தார்


மன்னார்
மீனவர்கள் தொழிலில் ஈடுபட எவ்வித கட்டுப்பாடுமில்லை : அமைச்சர்
றிசாத்




மாவட்ட மீனவர்கள் கடற்தொழிலில் ஈடுபடும் போது நடை முறையில் இருந்துவந்த பாஸ் முறையினை முழுமையாக நீக்கியுள்ளதாக வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும், மீள்குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிசாத் பதியுதீன் தெரிவித்தார்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதல் இந்த பாஸ் நடைமுறையினை நீக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தாம் விடுத்த வேண்டுகோளையடுத்து உடனடியாக அந்த நடைமுறை அகற்றப்பட்டது. மீனவர்கள் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி கடற்றொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

மீண்டும் சில தினங்களுக்கு முன்னர் கடற்படையினர் பாஸ் நடைமுறையினை ஆரம்பித்ததாக மன்னார் மாவட்ட மீனவ சம்மேளனம்,மற்றும் மீனவர் கூட்டுறவு அமைப்பினர் எனது கவனத்திற்கு கொண்டு வந்தன. இதையடுத்து,ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து இவ்விடயம் குறித்து எடுத்துரைத்ததாக அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறினார். மீண்டும் இவ்வாறான பாஸ் நடை முறையினை நடைமுறைப்படுத் வேண்டாம் என்ற பணிப்புரையினை கடற்படையின் கட்டளையிடும் அதிகாரிக்கும்,மன்னார் மாவட்ட கடற்படை பொறுப்பாளருக்கும் ஜனாதிபதி வழங்கினார்.

தற்போது மன்னார் மாவட்ட மீனவர்கள் முன்னைய காலங்களைப் போன்று எந்த நேரத்திலும் கடற்தொழிலில் ஈடுபட முடியும் என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் மேலும் கூறினார்.





வடக்கு, கிழக்கு அரசியல் தீர்வு அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம்




கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு என்று ஒன்று தேவையில்லை என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம். எனினும் வடக்கு, கிழக்குக்கு அரசியல் தீர்வு தேவை என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் சட்ட ஆலோசகரும் மேல் மாகாண சபை அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.

ஆனால் நாட்டின் தென்பகுதி அனுபவிக்கின்ற மாகாண சபை முறைமை வடக்கிலும் நிறுவப்படவேண்டும். எனவே வடக்கு மாகாண சபை அமைக்கப்படுவதை நாங்கள் ஆதரிக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் தீர்வு விடயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மாகாண அமைச்சர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் கூறியதாவது,

வடக்கில் மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்பட்டு அங்கு மாகாண சபை அமைக்கப்படும் என்று மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளன.

வடக்கில் மாகாண சபை அமைக்கப்படுவதை ஜாதிக ஹெல உறுமய எதிர்க்கவில்லை. அதற்கு முழுமையான ஆதரவினை வழங்குகின்றது. மேலும் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவில் இடம்பெற்றுள்ள எமது கட்சி வடக்கில் உடனடியாக மாகாண சபை அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளது.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைவான மாகாண சபை முறைமையினை நாங்கள் எதிர்க்கின்றோம். ஆனால் தென் பகுதியில் மாகாண சபை முறைமை இருக்கின்ற நிலையில் வடக்கில் மட்டும் இயங்காமல் இருக்கின்றமைமயை அனுமதிக்க முடியாது. அது வடக்கு மக்களுக்கு நாங்கள் செய்யும் துரோகமாகவே அமையும். எனவே வடக்கில் மாகாண சபை அமைய நாங்கள் ஆதரவளிக்கின்றோம்.

இதேவேளை வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவசியமில்லை என்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றோம்.

எனினும் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களுடன் வடக்கு கிழக்கு பகுதிக்கு அரசியல் தீர்வு தேவை என்பதனை நிரூபித்தால் அதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அதில் எந்த சிக்கலும் இல்லை. நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சம நிலைமையிலான அபிவிருத்திகள் மற்றும் வசதிகள் செய்யப்படவேண்டும் என்பதிலும் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.


கூட்டமைப்பு,ஜே.வி.பி. ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிப்போம்:ஐ.தே.க



பாராளுமன்ற தேர்தலின் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயற்சிகளை எடுப்போம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது,

"நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் ஊடாக மக்கள் கோரிநிற்கின்ற மாற்றத்தை பெற்றுக்கொடுக்க ஐக்கிய தேசிய முன்னணி அர்ப்பணிப்புடன் செயற்படும். இம்முறை பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி யானைச்சின்னத்தில் போட்டியிடும்.

எமது கட்சியின் செயற்குழு இதனை உறுதி செய்துள்ளது. சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் என அனைத்து இன மக்களையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக ஐக்கிய தேசிய முன்னணி உள்ளது.

அனைத்து மக்களினதும் உரிமைகளுக்காகவும் நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றோம். அந்த வகையில் இந்த தேர்தலில் அனைத்து மக்களையும் இணைத்துக்கொண்டு களமிறங்குவோம். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. ஏனெனில் இந்த தேர்தல் மூலமாவது நாங்கள் மக்களுக்கு மாற்றத்தை பெற்றுக்கொடுக்கவேண்டியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சிக்கு பாரிய மக்கள் ஆதரவு காணப்படுகின்றது. அந்த வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியவற்றின் ஆதரவுடன் பொதுத் தேர்தலின் பின்னர் ஆட்சி அமைக்க முடியும் என்று நம்புகின்றோம்.



நாளை அல்லது 10 ஆம் திகதி சபை கலைக்கப்பட்டு ஏப்ரல் முதல் வாரத்தில் தேர்தல்?



பாராளுமன்றம் நாளை அல்லது எதிர்வரும் 10 ஆம் திகதி புதன்கிழமை கலைக்கப்படலாம் என அரசதரப்பு வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. அந்தவகையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் பொதுத் தேர்தல் நடைபெறும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்ற அமர்வு கூடுகின்றது. இதன்போது அவசரகால சட்ட நீடிப்பு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன்படி இன்று நள்ளிரவே பாராளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் தகவல்கள் வந்துகொண்டிருந்தாலும் எதிர்வரும் 10 ஆம் திகதியே சபை கலைக்கப்படக்கூடியதற்கான சாத்தியங்கள் அதிகம் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த பாராளுமன்ற தேர்தல் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அதனடிப்படையில் பார்க்கும்போது இவ்வருடம் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதியுடன் தற்போதைய பாராளுமன்றம் முடிவுக்கு வரவேண்டியுள்ளது.

மேலும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி நாட்டின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவேண்டும். காரணம் தற்போது நடைமுøறயில் உள்ள கணக்கு வாக்கெடுப்பு ஏப்ரல் 30 ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகின்றது.

இதேவேளை நாட்டின் பிரதான கட்சிகள் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போதிருந்தே எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகிவருகின்றன. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர்களை தெரிவு செய்யும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதற்கான வேட்பாளர் நியமன சபைகளும் உருவாக்கப்பட்டுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் திகதி நாட்டின் ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற நிலையில் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 57.88 வீதமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டிமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக