22 ஜனவரி, 2010

தமிழ் மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண
தென் பகுதி ஜனநாயக சக்திகளுடன் சேரவேண்டும்
-வாசுதேவ நாணாயக்கார

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு அவர்கள் தென் பகுதியிலுள்ள ஜனநாயகச் சக்திகளுடள் ஒன்றிணைய வேண்டுமென்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணாயக்கார தெரிவித்தார்.

இராணுவ வாதிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஜனநாயகம் அழிக்கப்படுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினை யுத்தத்துடன் நிறைவுக் கட்டத்திற்கு வந்திருக்கின்றது. அதுபோல் தென்பகுதி தமிழ் மக்கள் சமமாக வாழ்வதற்கான சூழல் தோற்றுவிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வொன்றை எட்டுவதற்கு தென்பகுதி ஜனநாயக சக்திகளுடன் அவர்கள் ஒன்றிணைய வேண்டும்.

யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வடக்கிலும் கிழக்கிலும் இயல்புவாழ்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது மீன்பிடித் தடை நீக்கப்பட்டு இருக்கின்றது. தரைவழிப் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்த வாசுதேவ நாணாயக்கார, தேர்தல்களின் மூலம் ஜனநாயகம் புத்துயிர் பெறுகிறது. அதுபோல் வடக்கில் மாகாண சபைத் தேர்தலும், பொதுத் தேர்தலும் நடத்தப்படுவதன் மூலம் ஜனநாயகம் மேலும் வலுப்பெறும்.

இந்நிலையில் தமிழ் மக்கள் தென்பகுதி ஜனநாயக சக்திகளுடன் கைகோர்த்துக்கொள்வதே சிறந்ததாகும். அந்த ஜனநாயக அமைப்புக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமை தாங்குகிறார். ஆகவே, அவரை ஆதரிப்பதன் மூலமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணமுடியும் என்றும் கூறினார்.




ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்
மலையகத்தில் பல்வேறு அபிவிருத்தி
தேர்தலில் அவருக்கே வாக்கு என்கிறார்கள் மலையக மக்கள்
-வீ. இந்திரன்

30 வருட யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்த பின்னர் நடைபெறும் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.

இத்தேர்தலில் பிரதான வேட்பாளராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், முன்னாள் இராணுவத் தளபதியான சரத் பொன்சேகாவும் மற்றும் சில வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.

இவர்களில் இருவரும் தாமே வெற்றிபெறுவதாகக் கூறி தீவிர பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இருந்தபோதிலும் மலையகத்தில் பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்கள், புத்திஜீவிகள் பலரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே வெற்றி பெறுவார் என்கின்றனர்.

இதற்கான காரணம், கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினைவிட பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிமுகப்படுத்திய மஹிந்த சிந்தனை செயற்றிட்டத்தின் கீழ், கமநெகும, மகநெகும போன்ற வேலைத்திட்டத்தின் மூலம், மலையகத்தில் பாரிய அபிவிருத்தி காணப்பட்டுள்ளது. “லயன்” அறைகளுக்கு மின்சாரம் என்பது எட்டாக் கனியாகக் காணப்பட்ட நிலையில் தற்போது 90 வீதமான தொழிலாளர்களின் குடியிருப்புகளுக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

மலையக இளைஞர், யுவதிகளும் தமது வீடுகளில் கணினி பயன்படுத்தும் அளவிற்கு முன்னேறியுள்ளனர். இதனை மறுக்கவோ, மறைக்கவோ முடியாது.

இந்நிலையில் மலையக மக்கள் தமது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

இரத்தினபுரி எம்.ஏ.தங்கவேல் (தொழிற்சங்கப் பிரதிநிதி)

மலையக மக்களுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூடுதல் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீதிகள் கொங்கிறீட் போட்டு செப்பனிடப்பட்டுள்ளன. தோட்ட மக்கள் தமது தோட்டத்தலிருந்து நகரங்களுக்கு வர பெரிதும் சிரமப்பட வேண்டியிருந்தது. தற்போது அவ்வாறான சூழ்நிலை இல்லை. இதற்குப் பிரதான காரணம் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டம், மலையகப் பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்பட்டதாகும். அத்துடன் சமூர்த்தி நிவாரணம் பெறுபவர்களும் மலையகத் தோட்டங்களிலுள்ளனர். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் வழங்கப்பட்ட “சனசவிய” வேலைத்திட்டம் மலையகத்தில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிச்சயம் வெற்றி பெறுவார். இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற நிறுவனங்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இருப்பது அவரின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் என்றார்.

எஸ்.சுப்பிரமணியம், பலாங்கொடை தோட்டம்

சப்பிரகமுவ மாகாண சபைத் தேர்தலில் நாம் நமது வயிற்றுப்பிழைப்புக் குறித்து அக்கறை கொண்டதனால்தான் எமது பிரதிநிதித்துவத்தை இழந்து தற்போது அநாதையாக, அநாதரவாக இருக்கின்றோம். இந்நிலை தொடரக்கூடாது. எனவே, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வேட்பாளர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினை நாம் வெற்றிபெறச் செய்தால் எமது பிரச்சினையை முடிவுக்குக்கொண்டு வரலாம். இல்லையெல் நாம் சப்பிரகமுவவில் தொடர்ந்து அநாதையாகிவிடுவோம் என்றார்.

அப்புகஸ்தென்ன தோட்டம் “இரத்தினபுரி”
ஆர்.சகாதேவன் (54 வயது)

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தால் இலங்கை – உகண்டா போன்றதொரு நாடாகிவிடும். நமது கட்சியைவிட நாட்டைப்பற்றி சிந்திக்க தலைப்பட்டுள்ளதால் நாம் எதிர்வரும் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க கடமைப்பட்டுள்ளோம் என்றார்.

இரத்தினபுரி ரம்புக்கனை தோட்டம்
ஆர்.மணிமேகலா (34 வயது)

நான் நீண்டகாலமாக இத்தோட்டத்தில் வசிக்கின்றேன். தற்போது பொலிஸில் இளைஞர்கள் கைது செய்யப்படுவதில்லை நிம்மதியாகப் பயணம்செய்ய முடியும். இதற்குக் காரணம் ஜனாதிபதி மஹிந்தவின் செயற்பாடுதான். மஹிந்த சிந்தனை மூலம் நாம் பல அபிவிருத்தியை கண்டுள்ளதுடன், தோட்ட இளைஞர், யுவதிகளுக்கு அரச மற்றும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டது.

அவ்வாறு அவர்களுக்கு நியமனம் வழங்கப்படாவிட்டால் இன்று அவர்கள் தோட்ட குடியிருப்புகளைத்தான் சுற்றிச்சுற்றி வரவேண்டும். இதற்கு நன்றிக்கடனாக நாம் சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கே வாக்களிக்க வேண்டும். நாம் நன்றியுடையவர்களாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாதவர்கள் மனிதப் பண்புகளற்ற மிருகம் என்றே கூறவேண்டும் என்றார்.



அவிசாவெலை ரி.திரவியம் (50 வயது)

நான் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மாவட்டத் தலைவராக இருக்கின்றேன். எமது கட்சியிலிருந்து யோகராஜன், சச்சிதானந்தன், எம்.எஸ்.செல்லச்சாமி போன்றவர்கள் வெளியேறியபோதும் நாமோ, மலையக மக்களோ வெளியேறவில்லை. எமது கட்சியிலிருந்து சம்பாதித்துவிட்டு எம்மைக் காட்டிக்கொடுத்துவிட்டு வெளியேறினார்கள். அவர்களின் வெளியேற்றம் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிலையையோ, அவர் ஆட்சியமைப்பதனையோ தடுக்க முடியாது.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் சரியான வேளையில் சரியான முடிவினை எடுத்துள்ளார். அவருக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவிக்கின்றேன்.

குருவிற்ற பிரதேச சபையின் உறுப்பினர்
ஜே.அன்பழகன் (48 வயது)

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் சிரேட்ட உறுப்பினரான நான் எமது தலைமைத்துவம் எது சொல்கின்றதோ அதனையே செய்வேன். மலையக மக்களுக்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அளப்பரிய சேவைகளை மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது செய்துள்ளது. அதனால், நாம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாக்களிப்போம். அவர் வெற்றி உறுதியாகிவிட்டது. இந்நிலையில் எமது மக்களுக்கு மேலும் சேவை செய்ய முடியும்.

மடலகம தோட்டம்
கே.ஜெயராமன் (40 வயது)

பல வருடங்களாக எமது தோட்டத்திற்கு மின்சாரம் எட்டாக்கனியாகக் காணப்பட்டது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்தான் எமது தோட்டம் மின்சார ஒளியைக் கண்டது. அதுமட்டுமல்லாமல் நாம் சுதந்திரமாக நடமாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் இந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதி. பொருட்களின் விலைவாசி அதிகரித்துக் காணப்படுவது உண்மைதான். எந்த ஆட்சியில் பொருட்களின் விலை அதிகரிக்கவில்லை. நாம் விலைவாசியை மட்டும் சிந்தித்துக் கொண்டிருந்தால் எமது சமூகமும் மீண்டும் இருண்ட யுகத்திற்குச் செல்லவேண்டும்.

மலையக தோட்டங்களுக்கு சரத் பொன்சேகாவோ, ஐக்கிய தேசியக் கட்சியோ, ஜே.வி.பி. யோ எந்தவிதமான அபிவிருத்தியையும் மேற்கொள்ளவில்லை. மலையக தோட்ட வைத்தியசாலைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. மஹிந்த ஐயாவின் காலத்தில்தான் தோட்ட வைத்தியசாலைகள் அரசமயமாக்கப்பட்டன. இதன்மூலம் எமது சமூகத்திற்குச் சிறந்த சேவை செய்யப்படுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவளித்தது. எனினும், அக்கட்சிக்கு உருப்படியான வாக்குகள் எதுவுமில்லை. எனவே அவர்கள் யாருக்கு ஆதரவளித்தாலும் பாரிய வாக்குகளைப் பெற்றுக்கொடுக்க முடியாது. இக்கட்சி தற்போது காற்றுப்போன பலூன்போன்றது.

எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு, மலையகத் தமிழ் மக்களின் அமோக ஆதரவுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சிபீடமேறுவார் என்பது உறுதி என்றார்.



ஜே.வி.பி யும் ஐ.தே.க யும் இணைந்து
அரசியலில் இராணுவவாதத்தைப் புகுத்தியுள்ளன
-அமைச்சர் டிய+ குணசேகர

இலங்கையில் முதன்முதலில் பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது புலிகள் அன்றி ஜே.வி.பி. யே. இந்த நாட்டில் அரச பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். ஆனால் இன்று ஐக்கிய தேசியக் கட்சியும் ஜே.வி.பி. யும் இணைந்து இராணுவ வாதத்தை அரசியலுக்குள் கொண்டுவந்துள்ளதாக அரசியல் விவகார தேசிய நல்லிணக்க அமைச்சர் டி.யு.குணசேகர தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தை எதிர்க்கும் ஜே.வி.பி. யினரின் வேட்பாளரை தமிழ் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு ஆதரிக்க முடியும் எனவும் அமைச்சர் இங்கு கேள்வி எழுப்பினார்.

குடிமக்கள் குரலுக்கான மேடை அமைப்பு ஒழுங்கு செய்திருந்த கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. இங்கு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது –

‘13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் கைதூக்கிய ஒரே இடதுசாரி நான் மாத்திரமே. அந்த ஒரே காரணத்திற்காக கம்ய+னிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் 534 பேரை ஜே.வி.பி கொலை செய்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்வைத்த தீர்வு யோசனையையும் அந்தக் கட்சி முழுமையாக எதிர்த்தது. அதிகாரப் பகிர்வை எதிர்க்கும் ஜே.வி.பி. முன்னிறுத்தியுள்ள இராணுவத் தளபதியைப் படிப்பறிவுள்ள மூத்த அரசியல்வாதியான சம்பந்தன் எவ்வாறு ஆதரிக்க முடியும். தென் ஆசியாவில் பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகள் அனைத்தும் இராணுவ ஆட்சிக்கு உட்பட்டு ஜனநாயகத் தலைவர்கள் கொன்றொழிக்கப்பட்டனர். அதுபோல இந்திய ஜனநாயக நாடாக இருந்தபோதும் அந்த நாட்டுப் பிரதமர் பாதுகாப்பு அதிகாரியொருவரினால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த நிலையில் அரசியலை இராணுவமயப்படுத்தி இராணுவத்தை அரசியல் மயப் படுத்தும் கைங்கரியத்தில் ஜே.வி.பி யும் ஐ.தே.கட்சியும் இணைந்துள்ளன” என்றார்.

இங்கு உரையாற்றிய ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா அணியின் செயலாளர் ஸ்ரீதரன் கூறியதாவது – வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படிப்படியாக சுமுகநிலை உருவாகி வருகின்றது. இந்த நிலையில் இராணுவ அதிகாரத்தின் கீழ் பழக்கப்பட்ட ஒருவரிடம் ஆட்சியை ஒப்படைத்து இன்றுள்ள சமுகநிலையைக் குழப்புவது அரசியல் சாணக்கியமாகாது என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக