2 அக்டோபர், 2009

இந்திய மீனவர்களைக் கடற்படைத் தாக்கவில்லை : இலங்கை துணைத் தூதர்




"இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படைத் தாக்குதல் நடத்தியது என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு,'' என இலங்கை துணைத் தூதர் மறுப்பு தெரிவித்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் மாநிலங்களுக்கான இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி, சென்னையில் நேற்று அளித்த பேட்டியில் இது குறித்துத் தெரிவிக்கையில்,

"தமிழ்நாடு மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடந்த மாதம் 9ஆம் திகதி என்னைச் சந்தித்த போது, "இலங்கை கடற்பகுதிக்குள் தடைகளை மீறி உட்புகும் இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவதில்லை; கைது செய்வதுமில்லை" என்று தெரிவித்துள்ளனர்.

இலங்கை மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் நுழையும் போது இந்திய அதிகாரிகள் அவர்களை கைது செய்து, சட்ட விதிகளின்படி நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபரில் உள்ள சிறைகளில், 160 இலங்கை மீனவர்கள் தற்போதும் அடைக்கப் பட்டுள்ளனர்.

மீனவர்கள் மீது யார் தாக்குதல் நடத்துகின்றனர் என்பதை, பத்திரிகையாளர்கள் தான் ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிய வேண்டும். இந்திய இராணுவத்தை, கடற்படையைத் தாண்டி இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்த முடியுமா?

தமிழக அரசும், தமிழக எம்.பி.,க்களும் தாக்குதலைக் கண்டித்து பிரதமரிடம் மனு அளித்துள்ளனர். அதுபற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை." என்றார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்:


இலங்கைத் தமிழர் முகாம்களை பார்வையிட ஏன் தடை விதிக்கப்படுகிறது?

"தமிழர் முகாம் ஒன்றும் மிருகக் காட்சி சாலை அல்ல. முகாம் குறித்து, புலம் பெயர்ந்தவர்கள் சொல்லும் கதைகள் உண்மையல்ல. பத்திரிகையாளர்கள் விரும்பினால், ஏற்பாடு செய்கிறோம். உங்கள் பாதுகாப்பு, சுதந்திரம் எப்படி முக்கியமோ அது போல எங்களது பாதுகாப்பும் முக்கியம். பாதுகாப்பு தொடர்பான அச்சுறுத்தல் இன்னும் முழுமையாக விலகவில்லை."

கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமை உள்ளதா?

"இரு நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தப்படி, கச்சத்தீவு இலங்கையின் ஒருங்கிணைந்த பகுதி."

இந்திய மீனவர்கள் அங்கு மீன் பிடிக்க அனுமதிப்பீர்களா?

"உங்கள் நாட்டு அரசிடம் கேளுங்கள்."

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக