20 டிசம்பர், 2009


தமிழ் மக்களின் அவலத்துக்கு சிவாஜpலிங்கமும் பொறுப்பாளி

No Image


டொனமூர் அரசியலமைப்பின் கீழ் முதலாவது சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற போது யாழ்ப்பாணத்தில் ஒருவரும் போட்டியிடவில்லை. தேர்தலைப் பகிஷ்கரிக்க வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் மேற்கொண்ட தீர்மானத்தின் விளைவாகவே தேர்தல் பகிஷ்கரிப்பு இடம்பெற்றது. பிற்காலத்தில் நல்ல முற்போக்குச் சிந்தனையாளர்களாக விளங்கிய பலர் அப்போது வாலிபர் காங்கிரஸ் முக்கியஸ்தர்களாக இருந்தனர்.

தேர்தலைப் பகிஷ்கரித்ததன் மூலம் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. வாலிபர் காங்கிரஸ் எதிர்பார்த்த பலன் கிட்டவில்லை. இறுதியில் எப்படியாவது தேர்தலை வைக்கப்பண்ண வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளின் பேரில் யாழ்ப்பாணத்தில் எல்லாத் தொகுதிகளிலும் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது.

தேர்தலைப் பகிஷ்கரிப்பது பிழையான முடிவு என்பதற்கு இது ஒரு உதாரணம். இப்போதைய ஜனாதிபதித் தேர்தலையும் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழாமலில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் ஒரு சாரார் பகிஷ்கரிப்பை வலியுறுத்தினார்கள். ஆனால் பகிஷ்கரிப்பதில்லை என்று கூட்டமைப்பு சரியான முடிவை எடுத்தது.

ஒரு வேட்பாளரை நிறுத்துவதில்லை என்றும் கூட்டமைப்பு முடிவு செய்தது. தனியான வேட்பாளரை நிறுத்துவது பகிஷ்கரிப்பதைப் போன்றதே. பகிஷ்கரிப்பதன் மூலம் வாக்குகள் பயனற்றுப் போகின்றன. வெற்றியை நினைத்தும் பார்க்க முடியாத வேட்பாளருக்கு அளிப்பதன் மூலமும் வாக்குகள் பயனற்றுப் போகின்றன.

கூட்டமைப்பின் முடிவுக்கு மாறாகக் கூட்டமைப்பு எம்.பி சிவாஜிலிங்கம் போட்டியிடுகின்றார். இவர் போட்டியிடுவதால் தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை கிடைக்குமென்றால் அவர் போட்டியிடுவதில் நியாயம் உண்டு. இவருக்கு அளிக்கப்படும் வாக்குகள் தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வைக் கொண்டுவரப் போவதில்லை.

பதவியிலுள்ள ஜனாதிபதி யாராக இருந்தாலும் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியே இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். தீர்வுக்குச் சாதகமானவர் யார் என்பதை ஆராய்ந்தறிந்து அவர் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்படும் வகையில் செயற்படுவதன் மூலமே தமிழ் மக்கள் தங்கள் நலன்களை உறுதிப்படுத்த முடியும்.

தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் யார் என்ற ஆராய்ச்சியிலும் பார்க்க இப்போது தமிழ் மக்களுக்குத் தேவை என்ன என்பதே முக்கியமானது. தமிழ் மக்களின் இப்போதைய தேவை இதுவரை ஏற்பட்ட பாதிப்புகள் தொடராமல் தவிர்ப்பது. இனப் பிரச்சினையின் தீர்வுக்கான ஒரு ஆரம்பத்தை ஏற்படுத்துவது.

பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் யார் என்று ஆராயப் போனால் சிவாஜிலிங்கமும் குற்றவாளிக் கூண்டுக்கு வருகிறார். தமிழ்த் தலைவர்கள் விட்ட தவறுகளே தமிழ் மக்களின் இன்றைய அவலத்துக்குக் காரணம். சிவாஜிலிங்கமும் அவர்களில் ஒருவர்


சிவாஜிலிங்கம் உட்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியில் முடிந்தது மாத்திரமன்றி அழிவுகரமானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.


கடந்தகாலப் பிடிவாதத்தை தலைவர்கள் கைவிட்டால்

தமிழினம் தலைநிமிரும்

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதில்லை என்றும் இரண்டு

பிரதான வேட்பாளர்களுடனும் பேசுவது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த தீர்மானத்துக்கு முரணாகக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம்

வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றார். அவருக்கு எதிராகக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப் போகின்றது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

எவ்வாறாயினும், சிவாஜிலிங்கம் இத் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் என்ன விளைவை எதிர்பார்க்கின்றார் என்பது விளங்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் வேட்பாளரொருவர் வெற்றி பெறுவது சாத்தியமில்லை. இந்த நிலையில் தமிழ் வேட்பாளர் ஒருவர் போட்டியிடுகின்றார் என்றால் அது ஏதாவதொரு கொள்கைக்கு அல்லது போராட்டப் பாதைக்குத் தமிழ் மக்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவே இருக்க வேண்டும். சிவாஜிலிங்கம் எந்தக் கொள்கையையும் முன்வைக்கவில்லை. எந்தப் போராட்டப் பாதையையும் அறிவிக்கவில்லை.

சிவாஜிலிங்கம் உட்படத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பின்பற்றிய ஆயுதப் போராட்டப் பாதை தோல்வியில் முடிந்தது மாத்திரமன்றி அழிவுகரமானது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டப் பாதையைப்போலவே இவர்கள் பின்பற்றிய தனிநாட்டுக் கொள்கையும் அழிவுகரமானது என்பதும் நடைமுறைச் சாத்தியமற்றது என்பதும் நிரூபணமாகியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இப்போது புதிய கொள்கையைப் பின்பற்ற வேண்டும். அதை அடைவதற்குப் புதிய அணுகுமுறையைத் தெரிவுசெய்ய வேண்டும்.

இனப் பிரச்சினையின் தீர்வுக்காகக் கொள்கைத் திட்டமொன்றைத் தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் விரைவில் வெளியிடப் போவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர்கள் கூறிப் பல மாதங்கள் கழிந்துவிட்டன. இன்னும் அந்தக் கொள்கைத் திட்டம் வெளிவரவில்லை.

நிரந்தரமான கொள்கை இல்லாமையும் இனப்பிரச்சினை தீர்க்கப்படாமலிருப்பதற்கு ஒரு காரணம். முதலில் சமஷ்டி. பின்னர் தனிநாடு. அதற்குப் பின் அதிகாரப் பகிர்வு. இறுதியாக மீண்டும் தனிநாடு. இப்போது கொள்கைத் திட்டமொன்று தயாரிப்பு நிலையில்.

சிவாஜிலிங்கம் எந்தக் கொள்கைக்கு மக்களிடம் அங்கீகாரம் கோரப்போகின்றார்? மக்களின் அங்கீகாரத்துக்காக எந்த அணுகுமுறையை முன்வைக்கப் போகின்றார்? கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்னவுடன் சேர்ந்து பிரசாரம் செய்யப் போவதாக சிவாஜிலிங்கம் கூறுவதால் விக்கிரமபாகுவின் கொள்கையையும் அணுகுமுறையையுமே மக்களின் அங்கீகாரத்துக்காக இவர் முன்வைக்கப் போகின்றாரா என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்களுக்குச் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்றும் அந்த உரிமையைப் பிரிந்து செல்வதற்குப் பயன்படுத்துவதா அல்லது பிரதேச சுயாட்சிக்குப் பயனப்டுத்துவதா என்பதைத் தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் விக்கிரமபாகு கருணாரட்ன கூறுவது மார்க்சிய சித்தாந்த நிலைப்பாடு. ஒவ்வொரு நாட்டினதும் சமகால யதார்த்தத்துக்கு ஏற்றவாறு இச் சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அணுகுமுறையைத் தேர்ந்தெடுக்கும் கடப்பாடும் அது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்தும் கடப்பாடும் மார்க்சியவாதிகளுக்கு உண்டு.

இந்த வகையில், இலங்கையில் சுயநிர்ணய உரிமையை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்று தமிழ் மக்களுக்கு அறிவுரை வழங்க வேண்டிய கடப்பாடு எல்லா மார்க்சிஸ்டுகளுக்கும் உண்டு. விக்கிரமபாகுவுக்கும் உண்டு. ஆனால் விக்கிரமபாகு அந்த அறிவுரையை வழங்கத் தயாரில்லை. ஒரு மார்க்சிஸ்ட் என்ற வகையிலும் அரசியல் கட்சியொன்றின் தலைவர் என்ற வகையிலும் அக் கடப்பாட்டை நிறைவேற்ற விக்கிரமபாகு தயங்குகின்றார்.

பிரிவினைக்கு ஆதரவானவர்களையும் ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வுக்கு ஆதரவானவர்களையும் ஒரே நேரத்தில் திருப்திப்படுத்துவதற்கான இந்த நிலைப்பாடு இரு சாராரையும் ஒரே நேரத்தில் ஏமாற்றுவதாகவே முடியும்.

இந்த வெகுஜன விருப்புவாத அரசியலைத் தான் சிவாஜிலிங்கமும் பின்பற்றுகின்றாரா?

தமிழ் மக்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடுவதாக சிவாஜிலிங்கம் கூறுகின்றார். அவர் சோடி சேர்ந்திருக்கும் விக்கிரமபாகுவும் தமிழ் மக்களின் விமோசனம் பற்றி அடிக்கடி பேசுபவர்.

தமிழ் மக்களின் விமோசனம் பற்றிப் பேசுபவர்கள் அம் மக்களின் இன்றைய நிலையையும் அதற்கான காரணத்தையும் பற்றி நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

நாட்டின் சனத்தொகையில் இலங்கைத் தமிழரின் விகிதாசாரம் கடந்த இரண்டு தசாப்த காலத்தில் வெகுவாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. பாரம்பரிய வாழ்விடங்களிலிருந்து பெருந்தொகையானோர் வெளியேறித் தற்காலிகமாக வேறு இடங்களில் வாழ்கின்றார்கள். இவர்கள் தங்கள் வழமையான தொழில்களை இழந்ததால் நிரந்தர வருமானம் அற்றவர்களாக உள்ளனர். தமிழ் மக்கள் முகங்கொடுத்த இழப்புகளும் அழிவுகளும் சொல்லில் அடங்காதவை.

இவற்றுக்கான பொறுப்பை மற்றவர்களின் தலையில் போடமுடியாது. தமிழ் மக்களுக்கு அரசியல் தலைமை வகித்தவர்களே இவற்றுக்குப் பொறுப்பேற்க வேண்டும். தமிழ் மக்களின் இன விகிதாசாரம் வீழ்ச்சியடைவதைத் தவிர்ப்பதற்கும் தமிழ் மக்கள் பாரம்பரிய இடங்களிலிருந்து வெளியேறுவதைத் தவிர்ப்பதற்கும் இவர்களால் முடியாமற் போனதற்கான காரணம் இவர்களின் தவறான கொள்கையும் தவறான அணுகுமுறையுமே....

தனிநாட்டைப் பெற்றுத் தருவோம் என்றும் பூரணமான சுயாட்சியைப் பெற்றுத் தருவோம் என்றும் கூறும்போது அப்பாவி மக்கள் அதை நம்பி ஆதரவளிப்பதொன்றும் புதுமையானதல்ல. காலத்துக்குக் காலம் ஒவ்வொரு தீர்வும் முன்வைக்கப்பட்ட போது தமிழ்த் தலைவர்கள் இப்படியான கோஷங்களை முன்வைத்து மக்களை ஏமாற்றினார்கள். இதன் விளைவு என்ன? தலைவர்கள் தங்கள் பாராளுமன்றப் பதவிகளைப் பாதுகாத்துக் கொண்டார்கள். மக்கள் இழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் உட்பட்டார்கள்.

முழுமையான தீர்வைத் தவிர வேறெதுவும் வேண்டாம் என்று கூறுவதைக் கேட்க நன்றாக இருக்கும். ஆனால் நடைமுறைக்குப் பொருந்தாது. நன்மையும் தராது. தமிழ்த் தலைவர்கள் இவ்விடயத்தில் பாரதூரமான தவறு விட்டிருக்கின்றார்கள். அதிகாரம் போதாது என்று வடக்கு, கிழக்கு மாகாண சபையைக் கைவிட்டார்கள். அதேபோல அதிகாரம் போதாது என்று பொதுசன ஐக்கிய முன்னணியின் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எதிர்த்தார்கள். -s>r தீர்வுகளை எதிர்க்காமல் இருந்திருந்தால் எவ்வளவோ இழப்புகளையும் அழிவுகளையும் தவிர்க்க முடிந்திருக்கும்.

உதாரணமாக அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டத்தை எடுத்துப் பார்ப்போம். அத்தீர்வு நடைமுறைக்கு வந்திருந்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு தொடர்ந்திருக்கும். தமிழ் மக்களின் விகிதாசாரம் வீழ்ச்சியடைவது நின்றிருக்கும். உயிரிழப்புகளையும் உடைமைகளின் அழிவுகளையும் தவிர்த்திருக்கலாம். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்குத் தங்களைத் தாங்களே நிர்வகிக்கும் அதிகாரம் கிடைத்திருக்கும்.

இந்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தலைவர்கள் நிராகரித்தது மிகப் பெரிய பின்னடைவுக்கே வழிகோலியது. இது ஒரு வரலாற்றுத் தவறு. இதைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியமானது.

தமிழ் மக்களின் விகிதாசாரம் வீழ்ச்சியடைந்து செல்வதை உடனடியாக நிறுத்த வேண்டியதும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களில் குடியேறி வழமையான தொழிலைப் புரியும் நிலையை ஏற்படுத்த வேண்டியதும் தலைவர்களின் தலையாய பொறுப்பு. புத்தகங்களிலிருந்து மார்க்சிய சித்தாந்தங்களை யதார்த்தத்துக்குப் புறம்பாக எடுத்துக் கூறுவதன் மூலமும் முழுமையான அரசியல் தீர்வைத் தவிர வேறெதையும் ஏற்க மாட்டோம் என்று பிடிவாதம் பிடிப்பதன் மூலமும் இதைச் செய்ய முடியாது. இந்தப் பிடிவாதம் தான் தமிழ் மக்களின் இவ்வளவு துன்பங்களுக்கும் காரணமாகியது. தீர்வொன்றை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலமே இதைச் செய்ய முடியும்.

ஒற்றையாட்சியின் கீழ் இனப்பிரச்சினைக்கு முழுமையான தீர்வு சாத்தியமில்லை. ஆனால் இப்போது ஒற்றையாட்சி நிலைபெற்ற ஒன்றாகிவிட்டது. ஒற்றையாட்சியைக் கைவிடுவதற்குப் பிரதான அரசியல் கட்சிகள் இப்போது தயாராக இல்லை. தயாராக இருந்த வேளையில் எங்கள் தலைவர்கள் அந்தச் சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்தவில்லை. ஒன்றையாட்சியின் கீழ் வரும் தீர்வை ஏற்க மாட்டோம் என்று கூறுவோமேயானால், தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்வதைப் பார்த்துக்கொண்டிருப்பவர்கள் ஆகிவிடுவோம்.

தமிழ் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க வேண்டும். அதேநேரம் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சி முன்னெடுக்கப் படுவதையும் உறுதிப்படுத்த வேண்டும். இதுதான் இன்று தமிழ்த் தலைவர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு.

இப்போது சாத்தியமானதாக இருப்பது பதின்மூன்றாவது திருத்தம். அதனிலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய தீர்வு பற்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் பேசுகின்றார்கள். அப்படியான ஒரு தீர்வை நடைமுறைக்குக் கொண்டுவரும் வகையில் தமிழ் மக்களுக்குத் தலைவர்கள் வழிகாட்ட வேண்டும்.

ஒற்றையாட்சியா இல்லையா என்பதிலும் பார்க்கத் தமிழ் மக்களுக்குப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில் அதிகாரங்களைப் பெறுவதே இன்றைய நிலையில் முக்கியமானது. இந்தியாவில் நடைமுறையில் இருப்பது சமஷ்டித்தன்மை கொண்ட ஒற்றையாட்சி என்று சிலர் கூறுகின்றனர். ஒற்றையாட்சித் தன்மை கொண்ட சமஷ்டி என்று வேறு சிலர் கூறுகின்றனர். அதிகாரங்களே முக்கியமானவை என்பதற்கு இது ஒரு உதாரணம். படிப்படியாகக் கூடுதலான அதிகாரங்களைப் பெறும் போது ஒற்றையாட்சித் தன்மை தானாக மறைந்துவிடும்.

இரண்டு பிரதான வேட்பாளர்களுடனும் பேசுவது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்திருக்கும் முடிவு வரவேற்கத்தக்கது. இருவரும் அளிக்கும் வாக்குறுதிகளை அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவ் வாக்குறுதிகளின் நம்பகத்தன்மை பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய ஜனாதிபதி ஏற்கனவே கிழக்கு மாகாணத்தில் பதின்மூன்றாவது திருத்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்கின்றார். இத் திருத்தத்திலும் பார்க்கக் கூடுதலான அதிகாரங்களுடைய ஆலோசனைகளைச் சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு கையளித்திருக்கின்றது. இவற்றைக் கவனத்தில் எடுத்து நல்ல முடிவுக்குக் கூட்டமைப்பு வரவேண்டும்.

2010இல் பாரிய விவசாய புரட்சி; ரூ. 7000 கோடியில் விசேட திட்டம்

இறக்குமதியாகும் விவசாய உபகரணங்களுக்கு வரிவிலக்கு




2010ம் ஆண்டில் நாட்டில் பாரிய விவ சாயப் புரட்சியொன்றை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகி றது. 7000 கோடி ரூபா இதற்காக ஒது க்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மைத்திரி பால சிறிசேன தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு வழங்கும் சலுகையாக வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய் யும் சகல விவசாய உபகரணங்களுக்கும் பூரண வரிவிலக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அநுராதபுரம் நகரில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன் னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற் றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் தமது ரையில் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டின் தலைவர் ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷ விடம் மீண்டும் இந்த நாட்டைப் பாரம் கொடுக்க நாட்டு மக்கள் உற்சாகமாகச் செயற்படும் காலகட்டமிது.

இந்த நாட்டில் எந்தத் தலைவர்களாலும் செய்ய முடியாத மாபெரும் வர லாற்று வெற்றியை நிகழ்த்தியவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. ரணில் விக்கிரமசிங்க சர்வதேசத்திடம் அடிமைப்படுத்திய நாட்டை மீட்டுத் தந்தவர் அவர்.

ஐ. நா. உட்பட சர்வதேச ரீதியில் இந் நாட்டு இறைமைக்கு அழுத்தங்கள் வந்த போது அதனை எதிர்கொண்டவரும் அதனைப் பொருட்படுத்தாது பயங்கர வாதத்தை ஒழிப்பதில் ஒரே மனதுடன் செயற்பட்டவரும் ஜனாதிபதியே என் பதை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.




மக்கள் நலனுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதில் பின்நிற்க மாட்டோம்

அநுராதபுரத்தில் ஜனாதிபதி

நான்கு வருடங்களுக்கு முன்னர் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை குழுமையாக நிறைவேற்றியுள்ளோம். தொடர்ந்தும் மக்கள் நலனுக்கான தீர்மானங்களை மேற்கொள்வதில் பின் நிற்கமாட்டோமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

மனிதாபிமான யுத்தம் மட்டுமன்றி நாட்டு மக்களின் நம்பிக்கையை வெல்வதிலும் எதிர்கால சந்ததிக்கான இலங்கையைக் கட்டியெழுப்புவதிலும் நாம் வெற்றிபெற்றுள் ளோமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று முன்தினம் அநுராதபுரம் நகரில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்றது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட இத் தேர்தல் பிரசாரக் கூட்ட த்தில் அமச்சர்களான மைத்திரிபால சிறி சேன, நிமல் சிறிபால டி சில்வா, திருமதி பேரியல் அஷ்ரப், தினேஷ் குணவர்தன, டி. எம். ஜயரத்ன உட்பட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்கள், கலைஞர்கள். எஸ். பி. திசாநாயக்க உட் பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். இந் நிகழ்வில் ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது :-

நாம் எப்போதும் நாட்டு மக்களின் நலனைக் கருத்திற்கொண்டே தீர்மானங்களை மேற்கொண் டோம், அதற்காகவே சர்வதேச நாடுகளிலிருந்தும் கடன் பெற்றோம். நாட்டைக் கட்டியெழுப்பும் செயற்றிட் டங்களுக்காக எமது விவசாயிகளும் நிதி உதவி செய்கிறார்கள். எவ்வாறெனினும் எத்தகைய நிலையிலும் மற்றவர்களைப் போல் நாம் பிரபாகரனின் பெற்றோரிடம் கையேந்தப் போவதில்லை. எமது விவசாய மக்களின் நிதியைக் கும்பிட்டு வணங்கிப் பெற்றுக்கொள்வேனே தவிர கோடிக் கணக்கில் தர முன்வந்தாலும் பிரபாகரனின் பெற்றோரிடம் ஒருபோதும் பணம் பெறப் போவதில்லை.

வெளிநாடுகளில் நாம் நிதி உதவிகளைப் பெற்றபோதும் எந்த நிபந்தனைக்கும் அடிபணியாமலே நாம் அதனைப் பெற்றோம் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

2007ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் போது அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வர்களே இன்று எதிர்ப்பக்கத்திற்குச் சென்று அங்கிருந்து எமது காலை வாரப் பார்க்கின்றனர்.

எவ்வாறெனினும் நாம் பயங்கரவாத யுத்தத்தை வெற்றிகொண்டது போல ஊழல்களுக்கு எதிரான யுத்தத்தையும் வெற்றிகொள் வது உறுதி. அதற்கான சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.

நாம் பொறுப்பேற்ற பணிகளை நிறைவேற்றியுள் ளது போன்று எதிர்கால செயற்திட்டங்களுக்கான மார்க்கங்களையும் முன்னெடுத்து வருகிறோம். பொய் வாக்குறுதி மூலம் நாம் மக்களை ஒருபோதும் ஏமாற்றப் போவதில்லை. அத்தகைய தலைவன் நானில்லை. சொல்வதைச் செய்வதே எமது இலட்சியம்.

பிரபாகரனிடம் ஈழம் தரப் போவதில்லை என நாம் தெரிவித்தோம். அதனைச் செயலிலும் காட்டினோம். இனியும் அதை வழங்கப் போவதில்லை.

பயங்கரவாத யுத்தத்தை வென்றதன் மூலம் அபிவிருத்திக்கான தடையை முற்றாக நீக்கிவிட்டே நான் உங்கள் முன் வந்துள் ளேன். எமது நடவடிக்கைகளில் மக்கள் திருப்தியடைந்துள்ளதை அவர்கள் நிரூபித்து ள்ளனர். ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் எமது காலை வாரும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட போதும் நாம் உடன்படிக்கை மூலம் பிளவுபடுத்தப்பட்டிருந்த நாட்டை மீள ஒன்றிணைத்தோம்.

அதன்பின்னர் நாடு நாடாகச் சென்று கடன் வழங்கக் கூடாது என்று கூறிவந்த போதும் நாம் உரிய முறையில் கடன்களைப் பெற்றோம்.

நான் பாரமெடுக்கும் போது பெரும் பான்மையில்லாதிருந்த அரசாங்கத்தையும் பலம்பொருந்தியதாக மாற்றியமைக்க எம்மால் முடிந்துள்ளது.

பாராளுமன்றத்தை சக்திப்படுத்திய கையோடு படைகளை பலமானதாக கட்டியெழுப்ப வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொண்டோம். எல்லைக் கிராமங்கள் என்ற பெயரை ஒழித்து மக்கள் பயம் அச்சமின்றி வாழும் சூழலையும் ஏற்படுத்தினோம். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் மக்களின் துயரங்களை நாமே சுமந்து முன்சென்ற சந்தர்ப்பங்களையும் நாம் ஏற்றோம். உலகம் முழுவதும் உணவு நெருக்கடி ஏற்பட்ட போதும், எரிபொருள் விலையேற்றத்தின் போதும் அது நம் நாட்டைப் பாதிக்காதவாறு விவாயிகளுக்கான நிவாரணங்களையும் வழங்கினோம்.

இதுபோன்ற நான்கு வருடங்களுக்கு முன்னர் நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டே உங்கள் முன் வந்துள்ளேன்.

நாட்டின் அடுத்த தலைமுறைக்கான அபிவிருத்தியை பலமானதாக முன்னெடுப்பதே எமது இலக்கு. இந்தப் பயணத்தை சக்திப்படுத்த சகலரும் இணைந்து கைகோர்த்து முன்செல்வோம் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்றைய இந்நிகழ்வின் போது விவசாயி ஒருவர் நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைக்காக மூன்று இலட்சம் ரூபாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்தார்.

பெருந்திரளான கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன் கலைஞர்களின் சார்பில் சிரேஷ்ட நடிகர் ஜெக்சன் அந்தனி உரையாற்றியமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக