20 டிசம்பர், 2009

வவுனியா முகாம்களில் எஞ்சியுள்ள இடம்பெயர்ந்தவர்கள் பதிவு செய்வதில் தாமதம்
No Image



வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து, வவுனியா மனிக்பாம் முகாம்களில் இன்னும் எஞ்சியுள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் தமது வாக்குகளை உறுதி செய்வதற்காகப் பதிவு செய்வதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த முகாம்களில் உள்ள சுமார் 120,000 பேரில் 5 ஆயிரம் பேர் மட்டுமே ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக இதுவரையில் பதிவு செய்து கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2008 ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட்ட தேர்தல் இடாப்பின் அடிப்படையிலேயே ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆயினும் வன்னிப்பிரதேசத்தில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக அங்குள்ள வாக்காளர்களின் பதிவுகள் சரியான முறையில் இடம்பெறாத காரணத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் தமது வாக்களிப்பில் கலந்து கொள்வதற்காகத் தமது பிரதேச கிராம சேவகர்கள் ஊடாகத் தேர்தல் திணைக்களத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

கடந்த 17 ஆம் திகதி வரை வழங்கப்பட்டிருந்த இத்தகைய பதிவுக்கான அவகாசம் எதிர்வரும் 24 ஆம் திகதி வியாழக்கிழமை வரை நீடிக்கப்பட்டிருப்பதாக தேர்தல் திணைக்களம் இப்போது அறிவித்துள்ளது.

முகாம்களில் உள்ளவர்களுக்குத் தேவையான விண்ணப்பப்படிவங்கள் மற்றும் விபரங்கள் என்பன ஏற்கனவே வழங்கப்பட்டிருப்பதாக வவுனியா உதவித் தேர்தல் ஆணையாளர் ஏ.எஸ்.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலோ அல்லது அவர்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர்களுக்கு விழிப்பூட்டுவதிலோ அரசியல் கட்சிகள் எதுவும் அக்கறை காட்டாதிருப்பதாகக் கூறப்படுகின்றது



யாழ். பயணிகள் தென்பகுதிக்கு யாழ். பஸ் நிலையத்திலிருந்து செல்ல அனுமதி

No Image


யாழ்ப்பாணத்தில் இருந்து தென்பகுதிக்குச் செல்லும் பயணிகள் தமது பிரயாணத்தை வெள்ளிக்கிழமை முதல் யாழ் பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பிக்க அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் இராணுவத்தின் அனுமதி எதனையும் பெறத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

வெள்ளிக்கிழமை ஒருநாள் மாத்திரம் யாழ் பயணிகள் பஸ் வண்டிகள் யாழ்ப்பாணத்திலிருந்து இராணுவ பாதுகாப்புத் தொடரணியின்றி இயல்பாகப் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆயினும் மறுநாளாகிய இன்று சனிக்கிழமை யாழ் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக் கொண்டு யாழ் முற்றவெளிக்குச் சென்று அங்கிருந்து இராணுவத் தொடரணியுடன் பிரயாணத்தை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

காலை 9 மணிக்கு ஒரு தொடரணியும் பிற்பகல் ஒரு மணிக்கு மற்றொரு தொடரணியிலுமாக யாழ் பயணிகள் பஸ் வண்டிகள், வவுனியா மன்னார், கொழும்பு ஆகிய இடங்களுக்கான தமது பிரயாணத்தை மேற்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து தனியார் பஸ் வண்டிகளும் தென்பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது,

எனினும் வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் பயணிகள் தமது ஆள் அடையாள அட்டையின் போட்டோ பிரதிகள் இரண்டை இராணுவத்தினரிடம் வழங்கி, அவர்களின் அனுமதியைப் பெற்ற பின்பே பஸ் வண்டிகளில் ஏறுவதற்கு அனுமதிக்கப்படுகின்றார்கள். இந்த நடைமுறையில் எந்தவித மாற்றமும் ஏற்படுத்தப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கும், வவுனியாவில் இருந்து கிளிநொச்சி, முழங்காவில் ஆகிய பகுதிகளுக்கும் அரச அதிகாரிகளை ஏற்றிச் செல்வதற்காக ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகள் எந்தவித இராணுவ பாதுகாப்பு வழித்துணையின்றி – தொடரணியின்றி சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட்டுள்ளன.

இதேபோன்று பொதுமக்களின் தேவைக்காக வவுனியாவில் இருந்து முழங்காவில், துணுக்காய் ஆகிய பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பஸ் வண்டிகளும் வாகனத் தொடரணியின்றி இயல்பாக பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து தென்பகுதிகளுக்குச் செல்லும் பஸ் வண்டிகள் மட்டும் இராணுவ பாதுகாப்புத் தொடரணியில்தான் செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருப்பது குறித்து பயணிகள் பெரும் விசனம் தெரிவித்துள்ளனர்.



வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி சிரமதானம்

No Image

வவுனியாவில் தீவிரமடைந்துள்ள டெங்கு நோயைப் பரப்பும் நுளம்புகளை ஒழிப்பதற்காகப் பொதுமக்களின் ஒத்துழைப்போடு சனிக்கிழமை முதல் பாரிய சிரமதானப் பணியொன்றை முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) முக்கியஸ்தரும், வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய ஜி.ரீ.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

வவுனியா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 13 பேர் இதுவரையில் டெங்கு நோய்க்குப் பலியாகியிருப்பதாகவும் 600 இக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோய்க்கு ஆளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரப் பகுதியினர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத் தொண்டர்களை ஈடுபடுத்தி விழிப்புணர்வு செயற்பாடுகளை மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டினுள் கொண்டு வரப்படவில்லை என்பதாலேயே பொதுமக்களின் ஒத்துழைப்போடு, தமது கட்சி உறுப்பினர்களைப் பயன்படுத்தி வீடுகள் வளவுகளில் காணப்படுகின்ற டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களைத் துப்பரவு செய்வதிலும், கழிவுப் பொருட்களை குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அகற்றுவதிலும் இந்த சிரமதானத்தின் மூலம் ஈடுபட்டிருப்பதாகவும் வவுனியா நகரசபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜி.ரீ.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை காலை வைரவப்புளியங்குளத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த சிரமதான பணியில் புளொட் அமைப்பின் வன்னிப்பிராந்திய பொறுப்பாளர் பவான் சிவநேசன், புளொட் அமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வை.பாலச்சந்திரன், நகரசபை உறுப்பினர்களாகிய எஸ்.குமாரசாமி, கே.பார்த்திபன் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள். ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மலையக மக்கள் முன்னணி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு : அமைச்சர் பெ.சந்திரசேகரன்
No Image

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கு மலையக மக்கள் முன்னணி தீர்மானித்துள்ளது.

இந்தத்தீர்மானம் குறித்து ஆராய்வதற்கான மலையக மக்கள் முன்னணியின் செயற்குழுக்கூட்டமும் பேராளர் மாநாடும் நேற்று முன்தினம் 19 ஆம் திகதி ஹட்டனில் இடம்பெற்றது.

மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் சமூக அபிவிருத்தி மற்றும் சமூக அநீதியொழிப்பு அமைச்சருமான பெரியசாமி சந்திரசேகரன் தலைமையில் இடம் பெற்ற இந்தக்கூட்டங்களில் முனனணியின் பொதுச்செயலாளர் எஸ்.விஜயகுமாரன் ,பிரதித்லைவரும் பிரதியமைச்சருமான பெ.இராதாகிருஷ்ணன் ,ஊவாமாகாண சபை உறுப்பினர் அரவிந்தகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தின் போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதற்கான காரணங்களை அமைச்சர் பெ.சந்திரசேகரன் முன்னணியின் செயற்குழு உறுப்பினர்களுக்கும் பேராளர்களுக்கும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை இந்தத் தீர்மானம் குறித்த பகிரங்க அறிவித்தலை இன்று 20 ஆம் திகதி மலையக மக்கள் முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பெ.சந்திரசேகரன் ஹட்டனில் வைத்து அறிவிக்கவுள்ளார்.





மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இழக்கப் போவது எதுவும் இல்லை: டக்ளஸ் தேவானந்தா




எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதன் மூலம் இழக்கப் போவது எதுவும் இல்லை இதற்கு மாறாக தமிழ் மககள் பெறக் கூடியவைகளே அதிகமாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பொன்று யாழ்ப்பாணம் இடம்பெற்றது. இதில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

"எந்த ஒருவரும் முதல் தடவையாக ஜனாதிபதியாக வந்து எதனையும் சாதிக்க முடியாது. இரண்டு தடவைகள் இருக்க வேண்டும். கடந்த காலத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க இரண்டு தடவைகள் ஜனாதிபதியாக வந்த போதிலும் கூட எதனையும் செய்யவில்லையென்று நீங்கள் கேட்கலாம். ஆனால் அன்றைய சூழ் நிலை வேறு இன்றைய சூழ் நிலை வேறு.

அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு காணப்பட்டது. இன்று அந்த நிலமை காணப்படவில்லை. அத்துடன் அரசாங்கம் மக்களும் கூட ஒரு மனநிலையில் இன்று காணப்படுகின்றார்கள். ஆகையினால் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தை தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்க வேண்டும்.

மகிந்தாவுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் ஆனால் அதனால் பெற வேண்டியதைப் பெற நாம் நடவடிக்கைகளை எடுக்க முடியும். அதற்கு நான் பொறுப்பெடுக்கிறேன்.

எமது அமைப்பினால் தற்போது வெளியிடப்பட்டுள்ள துண்டுப் பிரசுரத்தில் கூட பத்து அம்சக் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் அதனையும் கூட சாத்தியப்படக் கூடிய வழியிலேயே முன் வைத்துள்ளோம்.

1950 ஆம் ஆண்டு முதல் 1960 ஆம் ஆண்டு வரையில் எமது தலைவர்கள் முன் வைத்தவைகள் எதனையும் சாதிக்க முடியவில்லை. பின்னர் நாம் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தோம். இதனால் நாம் இழப்புக்களையும் அழிவுகளையும் தான் சந்தித்தோம்.எனினும் எதனையும் பெற்றுக் கொள்ள முடியவில்லை.

இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றோம். இந்த நிலையில் நாம் ஒரு இணக்க அரசியலை நடத்த வேண்டும். இதற்காக நாம் அடிமைத்தனமாகவோ அல்லது எதனையும் விட்டுக் கொடுப்பது என்பது அர்த்தமாகமாட்டாது.நடைமுறைச் சாத்தியள பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணுதல் ஆகும். ஐக்கிய தேசியக் கட்சி வேண்டுமாக இருந்தால் எதிர்க்கட்சி என்ற முறையில் எதிர்ப்பினைக்காட்டலாம். ஆனால் நாம் எதிர்பினைக்காட்டி எதனைச் சாதிக்கப் போகின்றோம் கிடைத்த சந்தர்ப்பங்களை நல்ல முறையில் பயன்படுத்தி பெற்றுக் கொள்ள வேண்டியதை படிப்படியாக பெற்றுக் கொள்ள வேண்டும்.

நம்பிக்கைத் தன்மையுடன் எதனையும் முன்னேடுக்க வேண்டும். இது ஆரோக்கியத் தன்மை உடையதாகக் காணப்படும். இன்று இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கும் சிறுபான்மையினத்தவாகளின் வாக்குகள் தேவைப்படுகின்றன.

இதனை நாம் இன்று நல்ல முறையில் பேரம் பேச பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் எமது பேச்சு வார்த்தைகள் தோல்வி அடையக்காரணமாக இருந்தவைகள் வெளிநாட்டவாகளின் நிகழ்சி நிரல்களும் தலைமைதாங்கும் செயல்பாடுகளுமே.

இந்த வகையில் அண்மையில சூரிச்சில் இடம்பெற்ற தமிழ் கட்சிகள் அனைத்தினதும் கூட்டத்திலும் கூட இந்நிலமை ஏற்பட்ட போது இதனை நான் கடுமையாக கண்டித்துள்ளேன்." எனத் தெரிவித்தார்.

இதன் போது ஊடகவியலாளர்கள் தமிழ் கட்சிகள் ஏன் ஒரு அமைப்பாக நின்று ஒரு பேரம் பேசலை மேற்க்கொள்ளக் கூடாது எனக் கேட்ட போது,

இதற்கு பதிலளித்த அமைச்சர் , இன்று தமிழ் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் கதைக்கும் போது ஒன்றைக் கூறுகின்றார்கள். வெளியில் வந்து ஒன்றைக் கூறுகின்றார்கள். எதிர்க்கட்சித் தலைவரிடம் ஒன்றைக் கூறுகின்றார்கள். வெளியில் ஒன்றைக் கூறுகின்றார்கள். அத்தகைய நிலையில் நாம் எதனை எவ்வாறு இவர்களுடன் ஒன்றிணைந்து எதனையும் செய்யமுடியும் எனக்கேள்வி எழுப்பினார்.

யாழ்.குடாநாட்டில் தற்போதும் தென்னிலங்கைக்குச் செல்வதற்க்கு ஏ9 பாதை திறந்து விட்ட நிலையிலும் கூட வீதிகளில் படையினர் வாகனங்களில் எந்தவிதமான காரணங்களும் இன்றி வீதிகளில் உள்ள சோதனை நிலையங்களில் சோதனைகள் மேற்கொண்டு வருகின்றார்கள் எனக் கேட்ட போது ,

யாழ்ப்பாணத்தில் இருந்து பல சோதனை நிலையங்கள் அகற்றப்பட்டு விட்டன. இதேபோன்று வெகு விரைவில் இத்தகைய சோதனை நடவடிக்கைகளும் உரியவர்களுடன் பேசி அதனை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக