27 டிசம்பர், 2009

மாத்தயாவின் பெயரை பிரபாகரன் உச்சரித்ததுமே தனக்கு ஆபத்து என்பதைகருணா உணர்ந்து கொண்டார்''





அலி சாஹிர் மெளலானா

பிரத்தியேக பேட்டி


ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து ஐ. தே. க. எம்.பியாக பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தவர் தான் அலி சாஹிர் மெளலானா. இந்தப் பெயரை கேட்டதும் முதலில் ஞாபகத்துக்கு வருவது இன்று அமைச்சராகவிருக்கும் கருணா அம்மான் தான். நீண்ட ஒரு இடைவெளிக்குப் பின்னர் நாடு திரும்பியுள்ள அலி சாஹிர் மெளலானாவை கொழும்பில் சந்திக்கும் வாய்ப்பு தினகரனுக்குக் கிடைத்தது. தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு சந்திப்பதற்கான நேரத்தையும் ஒதுக்கிக் கொண்டு அவரது வருகைக்காக காத்திருந்தோம். நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றிக்கு தன் பங்களிப்பையும் வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்துவிட்டு வரும் அவரை சந்தித்த போது, அவர் கொழும்புக்கு வந்து விட்டார் என்ற செய்தி கேட்டு, அவரைச் சந்திக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் சிலரும் வந்திருந்தனர். அவர்களை சற்று நேரம் பொறுத்துக் கொள்ளுமாறு கூறி தினகரன் வாசகர்களுக்காக கடந்த கால நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார் அலி சாஹிர்.

உங்கள் அரசியல் பிரவேசம் எவ்வாறு அமைந்தது?

நான் 1987களிலிருந்து ஆரம்பிக்கிறேன். எனது உயர் கல்வியை முடித்துக் கொண்டு (கம்பியூட்டர் சயன்ஸ்) அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பியிருந்தேன். இலங்கை - இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டிருந்தது. 13ஆவது திருத்தச் சட்டமும் கொண்டு வரப்பட்டு மாகாண சபைகள் முறையும் அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததுடன் ஜனாதிபதித் தேர்தலும் அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போதைய ஜனாதிபதியாக ஆர். பிரேமதாஸாவும் எதிர்க்கட்சியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவும் வேட்பாளராக போட்டியிட்டனர்.

திருமதி பண்டாரநாயக்க என்னை மட்டு. மாவட்ட ஸ்ரீல. சு. க. அமைப்பாளராக நியமித்தார். அத்துடன் திருமதி பண்டாரநாயக்காவின் மாவட்ட முகவராகவும் நியமிக்கப்பட்டேன்.

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையில், எந்த வகையிலும் முஸ்லிம் மக்களின் ஆலோசனை பெறப்படவில்லை என்பதை திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சுட்டிக்காட்டினார். இச்சந்தர்ப்பத்தில் ஆர். பிரேமதாச ஜனாதிபதியாக தெரிவானார். இதன்பின்னர் புலிகளுடன் சமாதான பேச்சுக்கள் ஆரம்பமாகின. இந்தியப் படையினர் திருப்பி அனுப்பப்பட்டனர். புலிகள் முஸ்லிம்கள் மீது மோசமான தாக்குதலையும் நடத்தினர். காத்தான்குடி படுகொலை, வடக்கிலிருந்து முஸ்லிம்கள் விரட்டப்பட்டமை போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன. நான் அகதிகள் நிவாரண அமைப்பு (ஞிஞிலி) என்ற அரச சார்பற்ற நிறுவனம் ஊடக சுயாதீனமாக செயற்பட்டேன்.

1994 ஆம் ஆண்டு கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைத் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு ஏறாவூர் பிரதேச சபைத் தலைவராக தெரிவானேன். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐ. தே. க. போன்ற கட்சிகளின் பலத்த சவால்களுக்கு மத்தியில் இந்த வெற்றியை ஈட்ட முடிந்தது.

சிரேஷ்ட அமைச்சர்களான எம். எச். மொஹமட், அன்று வெளிவிவகார அமைச்சராக இருந்த ஏ. சீ. எஸ். ஹமீத் போன்றோரின் அழைப்பையேற்று ஐ. தே. கவில் இணைந்து கொண்டேன். முன்னாள் ஜனாதிபதி டி. பி விஜேதுங்க பாராளுமன்றத்தைக் கலைத்ததன் காரணமாக பொதுத் தேர்தல் வந்தது. அதில் போட்டியிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தின் ஐ. தே. க. பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானேன். 1977களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவரேனும் எம்.பி.யாக அதுவரை தெரிவு செய்யப்பட்டிருக்கவில்லை. 1987களில் தேவநாயகம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தேசிய கட்சிகளில் போட்டியிடுபவர்கள் பாதகச் செயல் செய்வதாகவே முத்திரை குத்தப்பட்டார்கள்.

இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் 45,000 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். நான் 115,000 வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினேன்.

கருணா அம்மான் விவகாரம் வரையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகவே இருந்தேன்.

கருணா அம்மானுடனான உறவை எவ்வாறு வளர்த்துக் கொண்டீர்கள்?

அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கல்வி பயின்றவர். நான் மட்டக்களப்பு சென் மைக்கல் கல்லூரியில் கல்வி கற்றேன். முரளிதரன் என்னைவிட வயதில் இளையவர். நான் விளையாட்டு வீரர் என்ற அடிப்படையில் அடிக்கடி நாம் சந்தித்துக் கொள்வோம். என் மீது அவருக்கு எப்பவும் மரியாதையுண்டு.

1977இல் க. பொ. த. உயர்தரத்தை முடித்துக் கொண்டு இந்தியா சென்றேன். அங்கு எனது முதலாவது பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு கலிபோர்னியா சென்றேன். 1987களில் மீண்டும் நாடு திரும்பினேன். நான் வரும் போது முற்றிலுமாக மாறிப் போயிருந்தது.

1977 - 83 போன்ற காலகட்டங்களில் ஏற்பட்ட இனக்கலவரங்கள் காரணமாக புலிகள் இயக்கத்துக்கு ஆட்சேர்ப்பு அதிகமாயிற்று. இளைஞர், யுவதிகள் கூட்டம் கூட்டமாக சென்று இணைந்து கொண்டனர். க. பொ. த. உயர்தரத்தில் பயின்றுக் கொண்டிருந்த கருணா அம்மானும் இதில் ஒருவராக இணைந்துக் கொண்டார். இனி எமக்கு இலங்கையில் எதிர்காலம் இல்லை என்ற எண்ணத்தில் இயக்கத்தில் இணைந்து கொண்டார். இந்தியா சென்று பயிற்சிகளையும் பெற்றார்.

1990களில் புலிகளுக்கும் அரசுக்கும் இடையேயான சமாதான பேச்சு ஆரம்பமானது. அரச தரப்பில் பிரதான சமாதான தூதுவராக அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீது நியமிக்கப்பட்டிருந்தார். இந்தக் காலக் கட்டத்தில் கேர்ணல் கருணாவை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் அப்போது எம்.பியாக இருக்கவில்லை. கருணா அம்மானுடன் கரிகாலனையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

அமைச்சர் ஏ. சி. எஸ். ஹமீத், பல்கலைக்கழக மானிய ஆணைக் குழுவின் தலைவராக இருந்த அர்ஜுன அலுவிகாரே ஆகியோருடன் புலிகளைச் சந்தித்தோம். கிழக்கு பல்கலைக்கழகத்தை மீண்டும் திறப்பது தொடர்பாக பேச்சு நடத்தினோம். கருணா உடனடியாக அதற்கு செவிமடுத்தார். புலித் தலைமையின் கவனத்திற்கும் உடனடியாகக் கொண்டு வந்தார். மட்டக்களப்பு விமானப் படைத் தளத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது கிழக்கில் தமிழ் - முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் தப்பபிப்பிராயங்கள் களையப்படுவது குறித்தும் பேசினோம். குறிப்பாக முஸ்லிம் பிரதேசங்களில் நிர்வாக நடவடிக்கைகளுக்காக புலிகளால் நியமிக்கப்படுகின்ற முஸ்லிம் ஏஜென்டுகள் தரமானவர்கள் அல்ல. தகுதி வாய்ந்தவர்கள் அல்ல மக்களை மதிக்கத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை ஏ. சி. எஸ். ஹமீத் சுட்டிக் காட்டியிருந்தார். இதனால் முஸ்லிம் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவுவதாகவும் சுட்டிக் காட்டியிருந்தார். உடனடியாக குறிப்பிட்ட நபர்களை நீக்கவும் தகுதியானவர்களையும் கனம் பண்ணத் தெரிந்தவர்களையும் நியமித்தார்.

இவரது செயல் என்னை வெகுவாக கவர்ந்தது. எப்போதும் அன்பாக அவர்களில் ஒருவனாக என்னை ‘அண்ணன்’ என அன்புடன் அழைப்பார்.

சமாதானப் பேச்சு பலனளிக்கவில்லை. ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார், பிரேமதாசவும் கொல்லப்பட்டார். 1994இல் சந்திரிகா குமாரதுங்க கொண்டு வந்த சமாதானப் பேச்சும் தோல்வியடைந்தது.

2002 ஐ. தே. க. கட்சி வந்ததும் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானார். கருணா மீண்டும் கிழக்கு மாகாணத்திற்கு அரசியல் பிரிவு பொறுப்பாளராக வந்தார். நான் மக்களின் புனர்வாழ்வு, புனரமைப்பு தொடர்பாக பிரதமரின் ஆலோசகராக செயற்பட்டேன். இந்தக் காலக்கட்டத்தில் கருணாவை மீண்டும் சந்திக்க முடிந்தது.

அண்ணன் சில அரசியல்வாதிகள் ஊழல் நிறைந்தவர்களாகத்தான் காணப்படுகிறார்கள். என்றாலும் நான் உங்கள் மீது மதிப்பு வைத்துள்ளேன். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குகிறோம் என கருணா கூறினார். சிறுசிறு சம்பவங்கள் தொடர்பாக கருணாவின் கவனத்திற்கு கொண்டு வந்த போதெல்லாம் கருணா உடனுக்குடன் தீர்வு வழங்கினார். இதனூடாக எமது நட்பு மேலும் வளர்ந்தது.

களமுனைகளில் கருணா என்பவர் மிகவும் முரட்டுத் தனமாவர் முர்க்கத்தனமானவர் என்பதை நான் கேள்விபட்டிருக்கிறேன். ஆனால் அவர் எனக்கு மரியாதை செய்வதை நேரடியாக பார்த்திருக்கிறேன். நான் அவரை அம்மான் என்றே அழைப்பேன். இவரிடம் விஷயமிருக்கிறது. மக்களை மதிக்கத் தெரிந்தவர் என்பதை உணர்ந்தேன்.

இந்த வேளையில்தான் சமாதான உடன்படிக்கை செய்யப்பட்டு பேச்சுவார்த்தைகளும் ஆரம்பமாகின. ஒஸ்லோ, தாய்லாந்து, ஜேர்மன் எனப் பல சுற்றுப் பேச்சுக்கள் இடம்பெற்றன. 5ஆவது சுற்று பேச்சுவார்த்தை ஒஸ்லோவில் நடைபெற்றது. அரசாங்கம் சமஷ்டி முறையை முன்வைத்தது.

சமஷ்டி முறை தொடர்பாக ஆராய்வதற்கு புலிகள் இயக்கம் ஆயத்தமாகவுள்ளது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ்ச்செல்வன், அன்டன் பாலசிங்கம், கருணா அம்மான் ஆகியோர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்ததுடன் அதற்கு அடையாளமாக கையெழுத்தையும் இட்டனர்.

இவர்கள் நாடு திரும்புவதற்கு முன்னதாக பிரபாகரனின் காதில் இந்த விடயம் போடப்பட்டு விட்டது. நியூயோர்க்கிலிருந்து வந்திருந்த உருத்திர குமாரன் பிரபாகரனிடம் இதனை கூறிவிட்டார். அரசாங்கம் முன்வைக்கும் ஆலோசனைக்கு கருணா இணக்கம் தெரிவிக்கிறார். தனது அதிகாரத்தையும் மீறி செயற்படுகிறார் எனப் பிரபாகரனிடம் தெரிவித்து விட்டார். அன்டன் பாலசிங்கத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரபாகரன் காரசாரமாக பேசியதால் அன்டன் பாலசிங்கம் இலங்கை வராமலேயே லண்டன் சென்று விட்டார். அதன் பின்னர் அவர் பிரபாகரனுடன் பேசவே இல்லை.

கருணா கிளிநொச்சி திரும்பியதும் பிரபாகரன் கடுமையான வார்த்தை பிரயோகங்களை பயன்படுத்தியதுடன், ‘மாத்தயா’ போன்று நீயும் எனக்கு துரோகம் செய்ய எண்ணுகிறாயா? என்ற கேள்வியை கேட்டுள்ளார்.

‘மாத்தயா’ என்ற பெயர் கேட்ட உடனேயே கருணா அம்மான் தன்னை சுதாகரித்துக் கொண்டார். இது ஒருவகையாக சமிக்ஞை என்பதும் தெளிவானது.

பிரபாகரனின் தலைமையில் 20 தலைவர்கள் இருந்தனர். ஒவ்வொரு துறைக்கும் ஒருவர் என்றபடி இருந்தனர். கல்வி, பொலிஸ், நீதி, விளையாட்டு, வருவாய் என்ற 20 பேர் இருந்தனர். இது தான் பிரபாகரனின் அமைச்சரவை இந்த 20 பேர்களுள் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவரேனும் இருக்கவில்லை. சிலர் எந்த ஆயுத போராட்டத்திலும் ஈடுபடாதவர்களாக இருந்தனர். அவர்களும் பிரபாகரனுடன் சேர்ந்து கொண்டு கருணாவுக்கு நிந்தனை செய்தார்கள். கருணா மிகவும் புண்பட்டுப் போனார். எனினும் கருணா லாவகமாக பிரபாகரனிடம் சமாளித்துவிட்டு வெளியேறினார். உடனடியாக சர்வதேச கண்காணிப்புக் குழுவுடன் தொடர்பு கொண்டு மட்டக்களப்பு செல்வதற்கு தனக்கு ஹெலிக்கொப்டர் ஏற்பாடு செய்து தருமாறு கூறினார். எனினும் ஹெலிகொப்டர் கிளிநொச்சிக்கு வரமுடியாது என்றும் ஓமந்தைக்கு வரமுடியும் என்பதால் அங்கு வரும்படி கூறினார்கள்.

கிளிநொச்சியில் ஹெலி தரையிறங்கும் இடம் புலிகளின் தலைவரின் இடத்துக்கும் மிக அருகே அமைந்திருந்தது. ஹெலி வருவதும் கருணா அதில் புறப்படுவதும் தெரிந்துவிடும் என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதுவே பிரபாகரனுடனான இறுதி சந்திப்பாக இருந்தது.

இரவோடு இரவாக கருணா அம்மான் ஓமந்தை வந்து அங்கிருந்து மட்டக்களப்புக்கு வந்து சேர்ந்தார்.

மட்டக்களப்புக்கு வந்த கருணா அம்மான் என்னோடு தொடர்பு கொண்டார். அண்ணன் நான் உங்களுடன் உடனடியாக பேச வேண்டும் என்றார்.

நான் ஒருவரை ஒருவர் கொல்வதும், மறைந்து திரிவதும் எத்தனைக் காலத்துக்கு? இது தான் சரியான சந்தர்ப்பம். இதனை தவற விடக்கூடாது. நாம் ஒருவரோடு ஒருவர் அமர்ந்து பேசி பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். சமாதானம் ஏற்படுத்த வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

இவர்கள் இன்னமும் யுத்தம் என்ற மனப்பான்மையிலேயே இருக்கிறார்கள். எனக்கு விளங்கவில்லை. ஆட்சேர்ப்பு செய்யும்படி கூறுகிறார்கள். ஆயுதம் வந்த வண்ணம் இருக்கிறது என்றார்.

இவர் செல்லும் பாதை வேறு என்பதை உணர்ந்தேன். அவர் எதனை விரும்புகிறார் என்பதை உணர்ந்தேன். அவர் தலைமையுடன் முரண்படுகிறார் என்பதைக் கண்டேன். அவரது முடிவு சரியானதாக தென்பட்டது.

2004 சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பாராளுமன்றத்தை கலைத்தார். மே 3ம் திகதி தேர்தல் தினம். கருணா என்னை தொலைபேசியில் அழைத்தார். இவர்களுடன் தொடர்ந்தும் செயலாற்ற முடியவில்லை.

பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் பிரச்சினைகளை வளர்க்கின்றனர் என்று கூறினார்.

எதற்காக இயக்கத்தில் இணைந்து செயற்பட ஆரம்பித்தோமோ அது இன்று நடைபெறவில்லை. கிழக்கு மக்களை அவர்கள் வாட்டி வதைக்கிறார்கள்.

கிழக்கிலிருந்து களமுனைக்கு கொண்டு சென்ற இளைஞர், யுவதிகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை பல முறை பிரபாகரனின் அமைச்சரவையில் சமர்ப்பித்திருக் கிறேன். அவை பிரபாகரனின் கவனத்திற்கு கொண்டு வரப்படாமலேயே கிழித்து குப்பையில் போடப்பட்டன.

அண்ணன் நான் உங்களுடன் இணைந்து வேலை செய்யப் போகிறேன். எனக்கு ஆலோசனை வழங்குவதுடன் என்னை வழிநடத்துங்கள் எனக் கூறினார். எதனையும் நம்ப முடியாத நிலை.

தனக்கு தனது ஆதங்கங்களை வெளியில் சொல்லவும், மக்களின் பிரச்சினைக்கு தீர்வை எவ்வாறு கொண்டு வருவதும் நம்பகத்தன்மையான ஒருவர் வேண்டும் என்று நினைத்த கருணாவுக்கு நான் நம்பிக்கையுள்ள நண்பனாகத் தென்பட்டேன். இன்று வரை எந்த ரகசியத்தையும் நான் வெளியே சொன்னதில்லை. இப்போதுதான் நான் வெளியே கூறுகிறேன்.

ஏனெனில் கருணா இன்று அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட ஒருவர். நான் ஒருபோதும் அவரை வீழ்த்த விரும்பவில்லை. அவருக்காக ஐ. தே. க.விலிருந்து விலகிச் செல்வதற்கும் நான் வகித்த சகல பதவிகளையும் தியாகம் செய்யவும் நேர்ந்தது.

இதனை எண்ணி வருந்துகிஹர்களா?

இல்லை. ஒருபோதும் இல்லை. நான் நிறைய தியாகங்கள் செய்துள்ளேன். அவை அனைத்தும் நாட்டுக்காக என்பதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். அது இன்று நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்திருக்கிறது. சமாதான உடன்படிக்கையின் படி புலிகள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் பிரவேசிக்கலாம் என்ற சரத்தும் உள்ளடக்கப்பட்டிருந்தது. இதன்படி ஆயுதம் எதுவுமின்றி அவர் வந்து போகலாம். ஆனால் வன்னி புலிகள் ஆயுதங்களுடன் சர்வதேச கண்காணிப்புக் குழுவினரின் உதவியுடன் வந்தது மட்டுமல்ல பொது மக்களையும் தாக்கினர். கண்காணிப்புக்குழு இந்த விடயத்தில் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது.

காயமடைந்தவர்களை கொண்டு செல்வதற்காகச் சென்ற அம்பியூலன்ஸ் சாரதியையும் சுட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் கருணா எதுவுமே செய்ய முடியாத நிலையில் இருந்தார். தனது ஆதங்கத்தை என்னிடம் கொட்டித் தீர்த்தார். தானும் பதிலுக்கு தாக்குதல் நடத்துவதா? எனக் கேட்டார். இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாம் மெளனமாக பின்வாங்கிச் செல்வது நல்லது. இல்லையேல் இரத்த ஆறு ஓடும் நிலை ஏற்பட்டுவிடும் எனக் கூறி பாரிய அழிவை தடுத்து நிறுத்தினேன்.

தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எமது மக்கள் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள் என்பதற்காகவே நாம் இந்த போராட்டத்தில் இறங்கினோம். இன்று எமது ஆட்களே எமது மக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனரே என வருத்தப்பட்டார்.

அண்ணன் நான் கொழும்புக்கு செல்ல வேண்டும். ஏற்பாடு செய்யுங்கள். வெளி உலகுக்கு நான் இவற்றைக் கூற வேண்டும். கண்காணிப்புக்குழு பக்கச்சார்பாக நடந்து கொள்கிறது எனக் கூறியதுடன் என் மீது நம்பிக்கையும் வைத்தார்.

கருணா என்னுடன் தொடர்புகளை வைத்திருக்கிறார் என்பதற்காக நான் புலிகளினால் அச்சுறுத்தப்பட்டேன். எனக்குத் தெரியாமலேயே என்னை பின் தொடர்ந்தனர். நான் செல்லும் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனர்.

எனது மைத்துனர் இரண்டு முறை கடத்தப்பட்டார். எனது குழந்தைகள் பாடசாலைக்கு செல்லும் போது கூட புலிகள் அவர்கள் பின் தொடர்ந்தனர். கருணாவை நான் எனது வீட்டில் மறைத்து வைத்திருக்கிறேன் எனச் சந்தேகப்பட்டனர். பொட்டு அம்மானின் சகாக்கள் ஊடுருவி ஐ. தே. க. வேட்பாளராக இருந்த சுந்தரம் பிள்ளை என்பவரை சுட்டுக் கொன்றனர். பொட்டு அம்மானின் சகாவான ரமணன் என்பவர் தான் அவரை சுட்டுக் கொன்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக என்னால் அறிமுகப்படுத்தப்பட்டு கருணா அம்மான் ஊடாக நியமிக்கப்பட்ட ராஜன் சத்தியமூர்த்தியும் கொல்லப்பட்டார். இவர் வேறுயாருமல்ல, மட்டக்களப்பு மேயராக இருக்கும் சிவகீதா பிரபாகரனின் தந்தையார் தான் இவர். இவரது படுகொலையுடன் கருணாவை மேலும் ஆத்திரமடையச் செய்தது.

1999 ஏப்ரல் 2 தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐ. தே. க. வேட்பாளராக நான் போட்டியிடக் கூடாது என்ற நிபந்தனையை ரவூப் ஹக்கீம் ஐ. தே. க விடம் முன்வைத்தார். நான் போட்டியிடுவதாயின் ஸ்ரீல. மு. கா. விலேயே போட்டியிட வேண்டும் எனத் தெரிவித்தார். நான் என்றுமே இன ரீதியான, பிரதேச ரீதியான கட்சிகளை விரும்புவதில்லை. அவற்றில் இணைந்து போட்டியிட விரும்பியதுமில்லை.

வன்னிப் புலிகளின் ஊடுருவலைத் தொடர்ந்து கருணா தனது சகாக்களுடன் தொப்பிகல பகுதிக்கு பின்வாங்கினார். தனி ஒரு மனிதராக கருணா அம்மான் மட்டும் புலிகள் இயக்கத்திலிருந்து பிரியவில்லை. 6000 போராளிகளுடன் அவர் பிரிந்தார். அழிவுகளையும் உயிரிழப்புகளையும் தவிர்ப்பது தான் அவரது நோக்கம். இயக்கத்திலிருந்த போராளிகளை அவர்களின் பெற்றோரிடமே ஒப்படைத்தார். யுனிசெப் ஊடாக இவர்கள் கையளிக்கப்பட்டனர். தான் கொழும்பு செல்ல வேண்டும் என்று கூறியதுடன் சாரதி ஒருவருடன் வாகனமொன்று ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

கருணா உங்களுடன் எப்படி தொடர்பு கொண்டார்?

என்னுடைய கையடக்கத் தொலைபேசிக்கு அழைப்புகளை எடுப்பார். வேறுபட்ட தொலைபேசிகளினூடாக என்னோடு பேசுவார். எனது கையடக்க தொலைபேசி அன்று முதல் இன்று இப்போது வரையிலும் எந்நேரமும் எவரும் பேசக் கூடிய நிலையில் தான் இருக்கும்.

2004 ஏப்ரல் 12 ஆம் திகதி தொப்பிகலவுக்கு அண்மித்த பகுதிக்கு சாரதியுடனும் மற்றுமொரு நபருடனும் நான் சென்றேன். சமிக்ஞைக்காக இன்னுமொரு வாகனத்தை பின் தொடர்ந்து கருணா அனுப்பியிருந்தார். இந்தப் பகுதியை அண்மித்த போது கருணா ஒரு வயல் வெளி போன்ற திறந்த வெளிப் பகுதியில் புஷ்ஷேர்ட் ஒன்றை அணிந்தவாறு கையில் பிரிவ்கேஸ் ஒன்றுடனும் நின்றிருந்தார்.

கருணா புலிகளால் மிகவும் தேடப்பட்டு வந்த நபர். அவரது தலைக்கு மில்லியன் கணக்கான ரூபாய்களை வழங்கவும் புலிகள் ஆயத்தமாக இருந்தனர்.

உயிரோடோ, பிணமாகவோ, கருணாவை பிடிக்க வேண்டும் என்றே புலிகள் நினைத்தனர். இதனால் எவரையும் நம்பத் தயாராகாத நிலையிலேயே நானே நேரடியாகச் சென்றேன். கருணாவுடன் 4 பெண்களும் இருந்தனர்.

அவர்கள் நால்வரும் பெண்கள் பிரிவில் போராளிகளாக இருக்கலாம். அவர்களை வாகனத்தில் ஏற்றுவதற்கு முன்னர் எக்காரணம் கொண்டும் தங்களுடன் எதுவித ஆயுதங்களும் எடுத்து வரக் கூடாது என்பதை கூறினேன். கருணா உட்பட ஏனையோர் தங்களது பயணப் பொதிகளை திறந்து ஒவ்வொன்றாக காட்டினர்.

கருணா தனது பெட்டியை திறந்து காட்டினார். அதில் ஆவணங்கள் மட்டுமே இருந்தன. “அண்ணன் ஒரு போதும் உங்களை பிரச்சினைக்குட்படுத்த மாட்டேன்” எனக் கூறினார்.

கருணாவை கொழும்புக்கு அழைத்து வரும் டிரான்போர்ட் வேலை மட்டும் தான் செய்தேன் என்பது வெளியில் எல்லோருக்கும் தெரியும். ஆனால் இதற்கு பின்னணியில் நடந்த உரையாடல்கள், அச்சுறுத்தல்கள், அழுத்தங்கள் என்ன என்பது எவருக்கும் தெரியாது. உயிரை பணயம் வைத்து இந்தக் காரியத்தை செய்தேன்.

அதன் பலனை இன்று அனைவரும் அனுபவிக்கின்றனர். வடக்கில் இறுதி யுத்தத்தில் எவ்வளவு இழப்புக்கள் ஏற்பட்டன. புலித் தலைவர்களின் கதி என்னவாயிற்று. இதே நிலை கிழக்கிலும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைத் தான் கருணாவும் நினைத்தார். நானும் நினைத்தேன்.

2004 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்பட்ட பிளவுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பிளவு ஏற்பட்டதன் பின்னர் கருணா அம்மான் என்னுடன் தொடர்புகள் வைத்திருந்தார் என்றதிற்காக எனக்கு ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேற வேண்டியும் இருந்தது. 2006 ஆம் ஆண்டு எனக்கு அச்சுறுத்தல்களும் பயமுறுத்தல்களும் ஏற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி என்னை தனிமைப்படுத்திவிட்டது. இதனாலேயே நான் நாட்டை விட்டும் வெளியேறினேன்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பலவீனமடையச் செய்தது தனது கட்சி தான் என ஐ. தே. கட்சியினர் கூறிக் கொண்டிருக்கிறார்களே?

ஐக்கிய தேசியக் கட்சி தனது அரசியல் நோக்கத்திற்காகத்தான் இந்த விடயத்தில் என்னை தொடர்பு படுத்திக் கூறியிருப்பதும் எனக்கு களங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து அமைச்சர் முரளிதரன் அன்று பிரிந்திருந்தார். இந்தப் பிரிவுக்கும் எனக்கும் தொடர்பில்லை. மோதல் தவிர்ப்புக்கான முயற்சியில் ஈடுபட்டோமே தவிர புலிகளைப் பலவீனப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படவில்லை. அது ஒரு மனிதாபிமான நடவடிக்கையே.

இங்கிருந்து சென்றதன் பின்னர் அங்கு என்ன செய்தீர்கள்?

2007 ஆம் ஆண்டு ஐ. நா. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வந்திருந்த போது என்னைச் சந்தித்து மீண்டும் நாடு திரும்புமாறும் அரசியலில் ஈடுபடுமாறும் பாதுகாப்பான நிலை உருவாகியிருப்பதாகவும் கூறினார். அத்துடன் இலங்கைத் தூதரகத்தில் உயர் பதவியொன்றையும் வழங்கினார்.

இப்போது நாடு திரும்பியதன் நோக்கம் என்ன? அரசியலில் ஈடுபடுவீர்களா? ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவீர்களா?

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பவர் எனது நல்ல நண்பர். அதே நேரம் மக்களின் ஜனாதிபதியாக பார்க்கிறேன். அவரை 1970 களில் இளம் அரசியல்வாதியாக சந்தித்திருக்கிறேன். எனது மாமனாரான அலவி மெளலானாவுடன் பல தடவைகள் அவரை நான் சந்தித்திருக்கிறேன். என்னாலான சிறு உதவிகளை அந்தக் காலத்தில் நான் செய்திருக்கிறேன்.

எளிதில் மறந்துவிட முடியாத நபர் அவர். கருணா அம்மானுடன் ஜனாதிபதியை சந்திக்கச் சென்றபோது ஜனாதிபதி கடந்த காலங்களில் நான் செய்த சிறு உதவியையும் மறக்காமல் நினைவு கூர்ந்தார். “அண்ணன் நீங்கள் எனக்கு மட்டும் உதவியதாகவே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்” என கருணா என்னிடம் வேடிக்கையாக கேட்டார்.

என்னை யாரும் இங்கு அழைக்கவில்லை. நானாகத்தான் வந்தேன். நான் வகித்த பதவி இரண்டு வருடங்களுக்கானது. விமான நிலையத்தில் எனது நண்பர் கருணா என்னை வரவேற்றார்.

இன்று தமிழ் சிங்கள, முஸ்லிம் மக்கள் அனைவருமே சுதந்திரத்தை அனுபவிக்கின்றனர். மட்டக்களப்பு மட்டுமல்ல, நாட்டில் எந்தப் பாகத்துக்கும் சென்று வரலாம்.

நான் என்றுமே பிரதேச ரீதியான, கட்சிகளை விரும்பியதில்லை. இணைந்து செயற்பட எண்ணியதும் இல்லை. இது என்னுடைய சுபாவம். என் மக்களுக்கு நன்றாக தெரியும்.

மட்டக்களப்பில் 1,15,000 வாக்குகளை பெற்று வெற்றியீட்டியதாக கூறினீர்கள். அந்த ஆதரவு இன்றும் இருக்கிறது என நினைக்கிஹர்களா?

இருக்கிறது மட்டுமல்ல. இன்னும் அதிகரித்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். என்னிடம் கேட்பதை விட என் மக்களிடம் இதைக் கேட்கலாம்.

அரசுக்கு ஆதரவு வழங்குவதற்காக ஏதாவது நிபந்தனைகளை வைக்கிஹர்களா?

ஒரு போதும் இல்லை. அது என் வழக்கமும் அல்ல.

அடுத்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் போட்டியிடுவீர்களா?

ஆம். நிச்சயமாக அரசுடன் இணைந்து செயற்படுவேன். அது தான் சிறந்தது என நினைக்கிறேன். அப்போது தான் மக்களுக்கு ஏதேனும் செய்ய முடியும்.

ஐ. தே. க. - ஜே. வி. பி. கூட்டு பற்றி கூறுவதாயின்?

ஐக்கிய தேசியக் கட்சிக்கென்று சில தனிப்பட்ட நல்ல கொள்கைகள் உண்டு. ஜே.வி. பி.யுடன் இணையும் என்று நான் நினைக்கவே இல்லை.

ஜே. வி. பி யினரின் அரசியல் ஒரு குளறுபடியானது. எந்நேரமும் எதிர்மறை சிந்தனையாளர்கள்.

சரத் பொன்சேகா ஒரு இராணுவ அதிகாரி. அவர் ஒரு அரசியல்வாதியல்ல. இப்போது அரசியல் பேசுகிறார்.

தமிழ், முஸ்லிம் மக்கள் சிறுபான்மையினர் என்றும் அவர்கள் பெரும்பான்மையிடம் வாழக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது, எமது மக்களின் மனதை புண்படுத்தியிருக்கிறது.

இவர் ஒரு நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்தால் நிச்சயமாக சிறுபான்மையினர் அதிர்ச்சியடைந்துவிடுவார்கள் என்றும் அலி சாஹிர் மெளலானா தனது நேர்காணலின் போது தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக