23 நவம்பர், 2009

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்-ஜே.வி.பி. கோரிக்கை



ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும். எதிர்கால அரசியலில் அரசாங்கத்துக்கு சவாலாக அமையவுள்ள சரத் பொன்சேகாவுக்கு தற்போதைய நிலையில் ஆபத்தெதுவும் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் அரசாங்கமே ஏற்க வேண்டும் என்று ஜே.வி.பி.யின் பிரசாரச் செயலாளரும் எம்.பி.யுமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் அவருடன் இன்னமும் இரு தினங்களில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என்றும் அவர் கூறினார். ஜனவரி மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளருக்கு ஜே.வி.பி. ஆதரவு வழங்கவுள்ளது. இது குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையில் தற்போது சூடுபிடித்துள்ள அரசியல் களத்தில் அனைவராலும் பேசப்படுபவர் ஜெனரல் சரத் பொன்சேகா ஆவார். இவர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிர்கால அரசியலில் சவாலாக இருப்பார் என்ற அச்சத்தினால் அரசாங்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கெடுபிடிகளை செய்து வருகின்றது.

உண்மையில் சரத் பொன்சேகா மிகவும் உயிர் அச்சுறுத்தல் உள்ள நபர் என்றப்படியால் அவருக்கு கூடிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இவ்வாறான ஒரு சூழ்நிலையில் ஜெனரலின் பாதுகாப்பினை அரசாங்கம் குறைப்பது ஆபத்தானது. எனவே, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு கூடிய பாதுகாப்பை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிடின் அதனால் ஏற்படக் கூடிய ஆபத்துகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டும்.

நாட்டில் முப்பதாண்டு கால யுத்தம் முடிவடைந்துள்ளபோதும் ஜனநாயகத்தை ஏற்படுத்தாத சூழலே காணப்படுகின்றது. எனவே, சிறந்த தலைமைத்துவம் மிக்க ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் எதிர்வரும் இரு நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடைப்பெறவுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் அரசியல் பிரவேசத்தை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகளை அழிந்துப்போன புலிகள் மீது சுமத்திவிட்டு மௌனம் சாதிக்க அரசாங்கம் முயற்சி செய்யக்கூடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக