1 நவம்பர், 2009

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானம்:கி.மா.முதலமைச்சர்

ஜனாதிபதித் தேர்தலின் போது தமது கட்சியாகிய தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு முழு ஆதரவையும் வழங்க தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமாகிய சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறுகின்றார்.

இருப்பினும் நாடாளுமன்ற தேர்தலின் போது கிழக்கு மாகாண மக்களின் நலனை கருத்திற்கொண்டு வேறு விதமான முடிவு எடுக்கப்படும் என்றும் நேற்று மாலை பேத்தாழைக் கிராமத்தில் முன்பள்ளி பாடசாலைக்கான அடிக் கல்லை நாட்டி வைத்து உரையாற்றிய போது அவர் தெரிவித்துள்ளார்.

கைலாயபிள்ளை கதிர்காமநாதன் (ஆசிரியர் ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் ,

" மத்திய அரசாங்கத்திற்கும் மாகாண சபைக்குமிடையில் அதிகாரப் பகிர்வு மற்றும் நிர்வாகங்களில் முரண்பாடுகள் இருக்கலாம் .ஆனால் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சமாதானச் சூழ்நிலையை ஏற்படுத்தியவர் இன்றைய ஜனாதிபதி என்பதை எவரும் மறந்து விட முடியாது.இதன் காரணமாகவே அவரை ஆதரிக்க எமது கட்சி தீர்மானித்துள்ளது.

ஆனால் பாராளுமன்ற தேர்தலைப் பொறுத்தவரை எமது கட்சியின் தனித்துவம் மற்றும் பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது.தமிழ் பேசும் சமூகத்தின் பேரம் பேசுகின்ற சக்தி அதிகரிப்பதற்கும் ,மாகாண சபைகளில் இயற்றப்படும் சட்ட மூலத்தை பாராளுமன்றத்திக்கு கொண்டு செல்வதற்கும் எமது கட்சியின் தனித்துவமான பிரதிநிதித்துவம் தேவை என்பதால் வேறு விதமான முடிவை எடுக்க வேண்டியுள்ளது" என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக