20 ஜூன், 2011

ஜனநாயக உரிமையை வழங்கத் தயாரில்லை என்பதையே தாக்குதல் வெளிக்காட்டுகிறது: லக்ஷ்மன்

வடபகுதி மக்களுக்கான அரசியல் பிரதிநிதிகளை தெரிவு செய்யும் ஜனநாயக உரிமையை அம் மக்களுக்கு வழங்க அரசாங்கம் தயாரில்லை என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு மீதான தாக்குதல் வெளிப்படுத்தியுள்ளதாக ஐ.தே.க. கட்சியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

இத் தாக்குதலானது சர்வதேச குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு ஜனநாயகம் மறுக்கப்படுகிறது. அத்தோடு சுதந்திரமாக கருத்து வெளியிடுவது, எழுதுவது பறிக்கப்பட்டுள்ளன.

சிவில் நிர்வாகம் இல்லை. அனைத்தும் இராணுவ மயமாக்கப்பட்டு மக்கள் அடக்கு முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் நடத்திய தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.

இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம். மனித உரிமைகள் மீறல் தொடர்பாக சர்வதேசம் எமது நாடு மீது குற்றச் சாட்டுக்களை தொடர்ந்து சுமத்தி வரும் இன்றைய சூழ்நிலையில் இத் தாக்குதல் அக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுச் சேர்த்துள்ளது.

முழு நாட்டையும் இராணுவ மயமாக்கி மக்களை அடக்கு முறைக்கு உள்ளாக்கி ஆட்சியை முன்னெடுக்கவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி. தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக