17 மே, 2011

போர்க்குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக அறிக்கை தயாராகின்றது: ஜகத் ஜயசூரிய

ஐ.நா. நிபுணர் குழுவின் அடிப்படைத் தன்மையற்ற போர்க் குற்றச் சாட்டுக்க ளுக்கு எதிரான இராணுவத்தின் அறிக்கை இவ்வாரத்தில் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கப்படும். இந்த அறிக்கையிலேயே யுத்தத்தின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற உண்மையான தகவல்கள் உள்ளன என்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தெரிவித்தார்.

மேற்படி அறிக்கையில் யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் வடக்கில் செயற்பட்ட கட்டளை தளபதிகளின் சாட்சியங்களும் ஆதாரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்த உள்ளடக்கங்களின் நம்பகத் தன்மை நிபுணர் குழுவினர் குற்றச்சாட்டுக்களுக்கு சவாலாகவே அமையும் என்றும் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய தொடர்ந்தும் கூறுகையில், இலங்கை அரசிற்கும் இராணுவத்திற்கும் எதிராக ஐ.நா.நிபுணர் குழு போர்க் குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்துமே பக்கச் சார்பானவை. யுத்தத்தின் இறுதிக் காலப் பகுதியில் வன்னிக் கட்டளை தளபதியாகவே நான் கடமையாற்றினேன். இங்கு நடைபெற்ற உண்மைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புடன் கூற முடியும். எவ்வாறாயினும் இராணுவத்திற்கு எதிராகவே கூடுதலாக குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றது.

எனவே இது தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு விளக்கமளிக்க வேண்டியது எமது கடமையாகும். இதனடிப்படையில் அக் காலப் பகுதியில் வடக்கு பிரதேசங்களில் இராணுவ நடவடிக்கைகளை முன்னெடுத்த அனைத்து கட்டளை தளபதிகளும் இணைந்து ஒரு அறிக்கையை தயாரித்து வருகின்றோம். அந்தப் பணி இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இந்த அறிக்கையானது உண்மை சம்பவங்களை உள்ளடக்கிய நேர்மையானதாகும். அதனை இவ்வார இறுதிக்குள் பாதுகாப்புச் செயலாளரிடம் கையளிக்கவுள்ளோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக