24 ஆகஸ்ட், 2010

எம்வி சன்சீ கப்பலில் வந்த ஆண்களுக்கான விசாரணை நேற்று நிறைவு


எம்வி சன் சீ கப்பலில் வந்திறங்கிய ஆண்கள் அனைவருக்குமான 48 மணிநேர தடுப்பு மீளாய்வு விசாரணைகள் பிரேசர் பிராந்திய தடுப்பு மையத்தில் அமைந்துள்ள ஐதஆ யின் தற்காலிக அமைவிடத்தில் கனேடிய குடிவரவு மற்றும் அகதிகள் வாரியத்தினால் நேற்று நிறைவடைந்துள்ளன.

அவர்கள் அனைவரும் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டி மேலும் ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து தடுப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும்.

இன்று பெண்களுக்கான ஏழு நாட்களின் பின்னரான தடுப்பு மீளாய்வு விசாரணைகள் முதல் 10 பெண்களுக்கு ஐதஆ யினால் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் விசாரணையின்போது ஐதஆ யின் வன்கூவர் செயலகத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்தனர்.

விபரக்கொத்து

கனேடிய எல்லை சேவைகள் முகவம், எம்வி சன்சீ குடிவரவாளர்கள் தொடர்பாக விபரக்கொத்து ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

"கனேடிய அரசாங்கமும் கனேடிய எல்லைச் சேவைகள் முகவமும் (இஆநஅ) கனேடியர்களின் பாதுகாப்பையும் உறுதிப்பாட்டையும் முன்னிலைப்படுத்தியே செயற்டுவது முக்கியமானது.

பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அச்சுறுத்தல் காரணமாக முறையற்று வந்திறங்கிய அனைத்து குடிவரவாளர்களையும் சரியான பரிசோதனைகளுக்கு கனேடிய எல்லைச் சேவைகள் முகவம் உட்படுத்தி வருகின்றது.

வயது வந்தவர்கள் நகரத்தின் தென்பகுதியின் பிரதான நிலப்பகுதியில் அவர்களுக்கு உரிய தடுப்பகங்களுக்கு மாற்றப்பட்டு, இந்த நாட்டினுள் அனுமதிப்பதை தீர்மானிப்பதற்கான விபரமான பரிசோதனைகள் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவத்தினால் மேற்கொள்ளப்படுகின்றன.

குறிப்பிட்ட வயதெல்லையை அடையாத சிறுவர்கள் தடுப்பில் வைக்கப்படவில்லை. உறவினர்களுடன் வந்தடைந்திருக்கும் சிறுவயதினர் அபாயம் குறைந்த இடங்களில் அவர்களின் தாயின் கவனிப்பில் விடப்படுவார்கள்.

சாத்தியமான நேரங்களில் அவர்களின் தங்குமிடங்கள் ஒன்றாகவே இருக்குமாறு ஏற்பாடுகள் செய்யப்படும். குழந்தைகளின் சிறந்த நலனைக் கருத்திற்கொண்டு, உறவினர்களற்ற சிறிவர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண குழந்தைகள் மற்றும் குடும்ப மேம்பாட்டு அமைச்சிடம் விடப்பட்டுப் பாதுகாப்பான, ஆபத்தற்ற இடத்தில் பராமரிக்கப்படுவார்கள்.

உரிமைகள்

எம்வி சன்சீயில் உள்ள குடிவரவாளர்கள், ஒரு மொழிபெயர்ப்பாளரைப் பெற்றுக் கொள்ளும் உரிமையும், ஒரு சட்டத்தரணியினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் உரிமையும், அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பின் ஏன் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை அறியும் உரிமையும், அவர்களின் தடுப்பு தொடர்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஆணையாளருக்கோ அல்லது அவர்களின் தூதுவருக்கோ தெரியப்படுத்தும் உரிமையும் கொண்டிருப்பார்கள்.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களுக்குச் சட்டத் தேவைகளுக்கான நிதி உதவி வழங்கப்படும். வந்திறங்கியவர்கள் தங்களின் சட்டத்தரணியைத் தாமே தெரிவு செய்து கொள்ளவும் தடுப்பு மீளாய்வு விசாரணைகளின் முன்னர் சட்டத்தரணியைச் சந்திப்பதற்கும் முடியும்.

பெறுவழி

வயது வந்தவர்கள் வெளியில் தொலைபேசித் தொடர்புகளை மேற்கொள்ளவும் தபால் மூலமான சேவைகளைப் பெற்றுக் கொள்ளவும் முடியும். அவர்களைப் பார்வையிட வருவதற்கான அனுமதி உள்ளவர்கள் பட்டியலில் பெயர்களை அவர்களால் இணைத்துக் கொள்ளவும் முடியும்.

பார்வையிட அனுமதி பெற்றவர்களுக்கான பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண தடுப்புப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பார்வையிடுவதற்கான ஒழுங்குகளைச் செய்ய இயலும்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக