28 ஜனவரி, 2010


19 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஜனாதிபதி அமோக வெற்றி


இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியைத் தெரிவுசெய்வதற்காக நடைபெற்ற தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியுள்ளார். சுமார் 20 இலட்சம் மேலதிக வாக்குகளைப் பெற்று ஜனாதிபதி ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவாகியிருக்கிறார். இதன் மூலம் நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதற்காக மக்கள் அவருக்கு ஆணை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 22 மாவட்டங்களுக்குள் 17 மாவட்டங்களில் 60 இலட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளைப் பெற்று 57.88 வீதத்தில் வெற்றியீட்டியிருக் கின்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜே.வி.பி., .தே.. கூட்டணியின் வேட்பாளரான சரத் பொன்சேகா 41 இலட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளைப் பெற்று 40.15 விகிதத்தைப் பெற்றுள்ளார். ஐந்து மாவட்டங்களில் மாத்திரமே பொன்சேகா வெற்றி பெற்றிருக்கிறார். வடக்கு, கிழக்கில் இவருக்குக் கூடுதல் வாக்குக் கிடைத்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உட்பட 22 பேர் போட்டியிட்டனர். இலங்கை தேர்தல் வரலாற்றில் இவ்வளவுபேர் போட்டியிட்டது இதுவே முதற்தடவையாகும்.

நாட்டின் சனத்தொகையில் ஒரு கோடியே 40 இலட்சத்து 88 ஆயிரத்து 50 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். நாடு முழுவதும் 11098 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப் பதிவு நடைபெற்றது.

நாடு முழுவதும் பெரும் பரபரப்புக்கு மத்தியில் மக்கள் வாக்களித்ததைக் காணக்கூடியதாக இருந்தது. வாக்கெடுப்பு நிறைவின் பின்னர் மாலையில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படலாமென்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும், நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த தையடுத்து எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு சம்பவங்கள் இடம்பெற்றபோதிலும் பாரிய வன்முறைகள் எதுவும் ஏற்படவில்லை.

முதலாவதாகத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் இரவு 10.30 மணியிலிருந்து வெளியிடப்பட்டன.

முதன்முதலில் இரத்தினபுரி மாவட்டத்தின் தபால் மூல வாக்களிப்பு முடிவு வெளியானது. ஜே.வி.பி., .தே.. கூட்டணிக் கட்சியின் வேட்பாளராகத் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் பூரண ஆதரவைப் பெற்றிருந்தும் முன்னாள் இராணுவத் தளபதி படுதோல்வியைத் தழுவினார்.

ஜே.வி.பி.யினதும், .தே..வினதும் கோட்டைகளாக விளங்கிய பல முக்கிய பிரதேசங்களிலும் ஜனாதிபதி மஹிந்த அமோக வெற்றியீட்டினார். ஜே.வி. பி.யின் கோட்டையான திஸ்ஸமஹராம, .தே..வின் கோட்டையான மீரிகம ஆகிய பிரதேசங்களையும் அவர்களின் கூட்டணி கோட்டை விட்டுவிட்டது.

தெவிநுவர தொகுதியில் 19, 209 மேலதிக வாக்குகளைப் பெற்றும், பலப்பிட்டிய, அம்பலாங்கொடை, மொனறாகலை, கலவான, புளத்சிங்கள, கெகிராவ, அநுராதபுரம், மேற்கு, மத்துகம, மூதூர், தெனியாய, எகலியகொட உள்ளிட்ட தொகுதிகளிலும் ஜனாதிபதி கூடுதல் மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியதுடன், திஸ்ஸமஹராமவில் 34055 மேலதிக வாக்குகளால் வெற்றியீட்டியுள்ளார்.

மேலும் அகலவத்தையில் 23600 மேலதிக வாக்குகளாலும், கம்புறுபிட்டியவில் 45649 மேலதிக வாக்குகளாலும், கரந்தெனியவில் 24000 மேலதிக வாக்குகளாலும் வெற்றிபெற்றதுடன், சில இடங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றியீட்டினார்.

அதேநேரம் 527 போன்று மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வத்தளை தொகுதியில் ஜனாதிபதி வெற்றியீட்டினார். குறிப்பாக மட்டக்களப்பு, அம்பாறை போன்ற பகுதிகளிலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தின் மஸ்கெலியா - நுவரெலியா தொகுதியிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றிபெறவில்லை.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மங்கள சமரவீர, சஜித் பிரேமதாச, ரவி கருணாநாயக்க ஆகியோரின் தொகுதிகளையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெரும்பாலான தொகுதிகளில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டினார்.

கண்டி தொகுதியில் 54.16 வீதமும், கொழும்பில் 52.93 வீதமும், களுத்துறையில் 63.06 வீதமும், குருநாகலையில் 63.08 வீதமும், அம்பாந்தோட்டையில் 67 வீதமும், இரத் தினபுரியில் 64 வீதமும், பொலன்னறுவையில் 65 வீதமும், மாத்தறை தொகுதியில் 60 வீதமும் பெற்று பெருவெற்றியீட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக